புதுடெல்லி:அஸ்ஸாமில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு அகதிகள் முகாமிலும் கடுமையான பாரபட்சம் காட்டப்படுவதாக மனித உரிமை ஆர்வலரும், தேசிய ஒருமைப்பாட்டுக்குழு உறுப்பினருமான ஷப்னம் ஹாஷ்மி தெரிவித்துள்ளார்.
உண்மை கண்டறியும் குழுவில் இடம்பெற்றிருந்த ஷப்னம் ஹாஷ்மி அஸ்ஸாமில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
மேலும் அவர் கூறியது:போடோ அல்லாத மக்கள் தங்கியிருக்கும் முகாம்களில் நிலைமை பரிதாபகரமாக உள்ளது. சரியான உணவுகளோ, அத்தியாவசியப் பொருட்களோ கிடையாது. போடோக்கள் தங்கியுள்ள முகாம்களில் இறைச்சியும், மீனும் உள்பட பொருட்கள் விநியோகிக்கப்படும் பொழுது இதர மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கூட கிடைக்காமல் வாடுகின்றனர்.
