Saturday, October 13, 2012

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா எதற்கு? தேசிய பிரச்சாரம் தொடங்கியது !

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தை மக்களுக்கு அறிமுகம் செய்யவும் இயக்கம் குறித்து செய்யப்பட்டு வரும் அவதூறுகளை களைவதற்கும் ஒரு மாத தேசிய அளவிலான பிரச்சாரம் இன்று (அக்டோபர் 10) நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடங்கியது.

இந்த பிரச்சாரத்தின் போது பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா குழு மக்களை அவர்களின் இல்லங்களுக்கு சென்று நேரடியாக சந்திக்கும். ஆங்கிலம், இந்தி, உருது, பெங்காளி, மணிப்பூர், மராத்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் மற்றும் மலயாளம் ஆகிய மொழிகளில் சுவரொட்டிகளும் பிற பிரச்சார சாதனங்களும் விநியோகம் செய்யப்படும். பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில குழுக்கள் வாகன பிரச்சாரம் மற்றும் தெருமுனை கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்துள்ளன. இதன் மூலம் பத்து இலட்சம் நகரங்கள் மற்றும் கிராமங்களை அடைய திட்டமிடப்பட்டுள்ளது. சமநீதி மாநாடுகள் கேரளாவின் திருவனந்தபுரம், கொச்சி மற்றும் கோழிக்கோட்டில் நடத்தப்படும். தமிழகத்தில் சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் மாநாடுகள் நடத்தப்படும். கர்நாடகாவில் பெங்களூர், குல்பர்கா, மைசூர் மற்றும் மங்களூர் நகரங்களில் மக்கள் மாநாடுகள் நடத்தப்படும். ஆந்திராவின் குர்னூலில் மாநில மாநாடும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தேசிய ஒற்றுமை மாநாடும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலும் இது போன்ற பெரும் நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டின் நிறைவை குறிக்கும் விதமாக பல்வேறு மாநிலங்களின் சமூக மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கலந்து கொள்ளும் மக்கள் ஆதரவு மாநாடு தலைநகர் டெல்லியில் வைத்து நடைபெறும்.


வகுப்புவாத சக்திகளின் தூண்டுதலினால் காவல்துறை, உளவுத்துறை மற்றும் அரசாங்க துறைகளில் உள்ள சிலர் இயக்கத்தை குறித்து அவதூறுகளை பரப்பி வருகின்றனர். சமூகத்தில் பலஹீனமான மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வலிமைக்காக பாடுபட்டு வரும் ஒரு புதிய சமூக இயக்கம் தான் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா. இயக்கத்திற்கு எதிரான இவர்களின் செயல்பாடுகள் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினருக்கு சமநீதி கிடைப்பதை தடுப்பதற்கான திட்டத்தின் ஓர் அங்கமாகும். நமது அரசியல் சாசனம் வழங்கியுள்ள ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு இது முற்றிலும் எதிரானது. சட்ட விரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ள சிறைவாசிகளின் விடுதலைக்கான கோரிக்கையும், UAPA போன்ற மக்கள் விரோத சட்டங்களை திரும்ப பெறுவதற்கான கோரிக்கையும் இந்த பிரச்சாரத்தின் போது வைக்கப்படும்.

ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக அனைத்து குடிமக்களும் தங்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் தர வேண்டுமென பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியதலைவர் இ.எம்.அப்துர் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza