சென்னை : கூடங்குளத்தில் நடந்த கலவரத்தின் போது வீடு புகுந்து போலீஸார் திருட்டில் ஈடுபட்டனர். விசாரணை என்ற பெயரில் தொடர்ந்து வீடுகளுக்குள் அத்துமீறி புகுந்து பெண்களை நாக் கூசும் வகையில் பேசுகின்றனர். இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூடங்குளத்தின் தற்போதைய நிலையை நேரில் கண்டு வந்துள்ள 34 பேர் கொண்ட வழக்கறிஞர் குழு கூறியுள்ளது.
கூடங்குளத்தில் செப்டம்பர் 10ம் தேதி அணு உலை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. அப்போது போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் கிராம மக்களைக் கலைத்தனர்.
கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து கூடங்குளம், இடிந்தகரை, சுனாமி குடியிருப்பு, வைராவி கிணணு ஆகிய கிராமங்களில் ஏற்பட்ட பதட்ட நிலையையடுத்து தற்போது உள்ள நிலவரம் குறித்து சமநீதி வழக்கறிஞர்கள் சார்பில் 34 பேர் கொண்ட குழு ஆய்வு செய்தது.
இந்தச் சுற்றுப்பயணம் குறித்து வழக்கறிஞர்கள் கூறியதாவது:
“நாங்கள் அந்த மக்களை நேரில் சந்தித்தபோது, அங்கு நடந்த சம்பவத்தையும் மனக்குமுறல்களையும் கொட்டித் தீர்த்தனர். ஊருக்குள் நுழைந்தால் ஆண்களை அதிகமாகப் பார்க்க முடியவில்லை. வீடு, வீடாகச் சென்று வீட்டில் உள்ள ஆண்கள் எங்கே என்று போலீசார் மிரட்டுவதாகக் கூறுகின்றனர்.”
”இடிந்தகரை கிறிஸ்தவ தேவலாயத்திற்குள் போலீசார் புகுந்து மாதா உருவச் சிலையினை உடைத்தும், சிறுநீர் கழித்தும் அட்டூழியம் செய்து, அந்த மக்களின் மனதைப் புண்படுத்தியுள்ளனர். இடைவெளியின்றி பல நாட்களாகத் தொடரும் 144 தடை உத்தரவால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் தரப்பிலிருந்து எந்த எதிர் நடவடிக்கையும் இல்லாத நிலையினைக் கருத்திற்கொண்டு உடனடியாக 144 தடை உத்திரவை நீக்க வேண்டும். கலவரத்தின்போது கண்ணீர்ப் புகைக் குண்டுகள் பட்டு பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மருத்துவ வசதி செய்வதற்குக் கூட வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இந்த நிலைமையை உடனே சீர் செய்ய வேண்டும்.”
இவ்வாறு வழக்கறிஞர் குழு கூறியது.

0 கருத்துரைகள்:
Post a Comment