Saturday, July 2, 2011

சம்ஜோதா எக்ஸ்பிரஸ்:இரண்டு பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு

samjhotha express blast
பஞ்ச்குலா(ஹரியானா):சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு வழக்கில் 2 பேரை சிறப்பு நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது. இவ்வழக்கின் அடுத்த விசாரணை இம்மாதம் 18-ஆம் தேதி நடைபெறும். ராம்சந்திர கல்சங்க்ரா, சந்தீப் டாங்கே ஆகியோரை நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது.

ரகசியமாக நடந்த விசாரணையில் தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) இவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் இவர்களை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தது என எதிர்தரப்பு வழக்கறிஞர் எம்.ரதி தெரிவித்துள்ளார்.

2007-ஆம் ஆண்டு நடந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் 68 பேர் கொல்லப்பட்டனர்.12 பேருக்கு காயம் ஏற்பட்டது. இக்குண்டுவெடிப்பை நிகழ்த்தியது சுவாமி அஸிமானந்தாவும், இதர நான்கு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் என ஜுன் 20-ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் என்.ஐ.ஏ குறிப்பிட்டிருந்தது. இவர்களில் அஸிமானந்தாவும், லோகேஷ் சர்மாவும் அம்பாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சுனில் ஜோஷி மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் வேளையில் அஸிமானந்தாவும், லோகேஷ் சர்மாவும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு மட்டுமல்லாமல் அஜ்மீர், மக்கா மஸ்ஜித், மலேகான் குண்டுவெடிப்புகளிலும் அஸிமானந்தா மற்றும் லோகேஷ் சர்மா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza