Monday, May 30, 2011

இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்குகிறாரா பான்-கி-மூன்?

காஸா மீதான இஸ்ரேலின் சட்டவிரோத முற்றுகையை முறியடிக்கும் வகையில் எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் மனிதாபிமான நிவாரண உதவிப் பொருட்களைக் கொண்டுசெல்வதற்குத் தயாராகவுள்ள ஃப்ரீடம் ஃபுளோடில்லா-2 குழுவை நோக்கித் தமது முயற்சியைக் கைவிடுமாறு கேட்டுள்ள ஐ.நா. செயலாளர் நாயகம் பான்-கீ-மூனை காஸா முற்றுகைக்கு எதிரான ஐரோப்பிய அமைப்பு மிக வன்மையாகக் கண்டித்துள்ளது.

ஐந்து வருடங்களுக்கும் மேலாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபையினால் ஒரு சட்டவிரோத முற்றுகை சுமார் 1.5 மில்லியன் பலஸ்தீன் மக்கள்மீது பலவந்தமாகத் திணிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களின் அன்றாட சுமுகவாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் சர்வதேச நாடுகளின் உதவி அவர்களுக்குப் பெரிதும் தேவைப்படுகின்றது.

இந்நிலையில், ஐ.நா. செயலாளர் நாயகம் பான்-கீ-மூன் 'ஏற்படக்கூடிய மிகப் பாரதூரமான பிரச்சினைகளைத் தவிர்க்குமுகமாக காஸாவை நோக்கிப் பயணிக்குமுன் தமது நாட்டுப் பிரஜைகள் கலந்துகொள்ளவிருக்கும் ஃப்ரீடம் ஃபுளோடில்லா-2 கப்பல்களைத் தடுத்துநிறுத்தும் வகையில் தமது செல்வாக்கைப் பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்து பல்வேறு சர்வதேச நாடுகளுக்கும் உத்தியோகபூர்வ செய்திகளை அனுப்பிவைத்துள்ளார்.

ஏற்கெனவே 2008,2009 ஆம் ஆண்டுகளில் காஸா மீதான சட்டவிரோத முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் முன்னுக்குப் பின் முரணான முன்மொழிவுகளை வழங்கிய ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்ஸில் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் ஒருவரிடமிருந்து இத்தகையதொரு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறித்து மேற்படி ஐரோப்பிய அமைப்பு ஆச்சரியம் தெரிவித்துள்ளது.

ஃப்ரீடம் ஃபுளோடில்லா உதவிக்குழு என்பது மனிதாபிமானத்தை நேசிக்கும் தன்னார்வலர்களால் ஆன ஓர் அமைப்பாகும். குறித்த ஒரு மக்கள் குழுமத்தின் மீது சட்டவிரோதமாகத் திணிக்கப்பட்டுள்ள ஒரு முற்றுகையின்போது சர்வதேச சட்டம் நிச்சயமாக மௌனம் சாதிக்கவே முடியாது. எனவே, காஸா மீதான நியாயமற்ற முற்றுகையை முறியடிக்கும் வகையிலும், மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வரும் தன்னார்வலர்கள் மீதான இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துமுகமாகவும் ஐ.நா.வினால் புதிய பிரேரணைகள் முன்மொழியப்படுதல் வேண்டும் என மேற்படி அமைப்பு தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza