டமாஸ்கஸ்:ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு அரசை எதிர்த்து பேரணி நடத்தும் எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தக்கூடாது என சிரியாவின் அதிபர் பஸ்ஸாருல் ஆஸாத் ராணுவத்தினருக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான தகவலை ஆஸாதின் ஆலோசகர் புதைனா ஷாபான் அறிவித்துள்ளதாக எதிர்கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் நிலவும் நெருக்கடியை தணிக்க எதிர்கட்சிகளின் தலைவர்கள் அதிபரின் ஆலோசகரான ஷாபானுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டம் துவங்கிய மார்ச் மாதத்திற்கு பிறகு ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களை ராணுவம் கைது செய்துள்ளது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அடுத்த வாரமும் ஷாபானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் ஹுஸைன் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு சிரியாவின் பல்வேறு நகரங்களில் மக்கள் பேரணி நடத்தினர். ”சிரியா சிரியாவின் மக்களுக்கே!” என முழக்கங்களை எழுப்பி வடகிழக்கு குர்திஷ் பகுதியில் மக்கள் வீதிகளில் இறங்கினர். விடுதலைக்கான போராட்டத்தில் மேலும் குர்து இனமக்களை பங்கேற்க செய்வோம் என குர்திஷ் யாகிதி கட்சியின் பொதுச்செயலாளர் இஸ்மாயீல் ஹாமி தெரிவித்துள்ளார். ஹம்ஸ், ஹமா, டமாஸ்கஸில் மிதான் ஆகிய இடங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

0 கருத்துரைகள்:
Post a Comment