Thursday, December 20, 2012

இடிக்கப்பட்ட பள்ளிவாசல் மற்றும் அப்பாவி மக்களின் வீடுகளை மீண்டும் கட்ட வலியுறுத்தி பாராளுமன்றம் நோக்கி பிரமாண்ட பேரணி!

புதுடெல்லி:டெல்லி மெஹ்ராலியில் நானூறு ஆண்டுகள் பழமையான கெளஸியா மஸ்ஜிதும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள ஐந்நூறுக்கும் அதிகமான முஸ்லிம் வீடுகளை இடித்து தள்ளிய டெல்லி வளர்ச்சி ஆணையத்தின்(டி.டி.ஏ) அட்டூழியத்தை கண்டித்து கவுஸியா காலனி மறுவாழ்வு பேரவையின் சார்பில் பாராளுமன்றத்தை நோக்கிய பேரணியும், தர்ணாவும் நடைபெற்றது. இடிக்கப்பட்ட மஸ்ஜிதையும், வீடுகளையும் மீண்டும் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர். கைக்குழந்தைகளுடன் குடும்ப பெண்மணிகளும், வயோதிகர்களும் பேரணியில் கலந்துகொண்டு கடுமையான தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். பேரணியை ஜந்தமந்தரில் வைத்து போலீஸ் தடுத்து நிறுத்தியது. 


இப்போராட்டத்தில் கலந்துகொண்ட எஸ்.டி.பி.ஐ தேசிய பொது செயலாளர் ஹாஃபிஸ் மன்சூர் அலிகான் தனது உரையில் கூறியது: இடிக்கப்பட்ட மஸ்ஜிதையும், வீடுகளையும் மீண்டும் கட்டிக்கொடுக்க வேண்டும். டெல்லி வக்ஃப் போர்டு இவ்விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு, சட்டரீதியான அனைத்து உதவிகளையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்க வேண்டும் என்றார். 

இடிக்கப்பட்ட மஸ்ஜித் மற்றும் வீடுகளை பார்வையிட்ட எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் இ.அபூபக்கர், கெளஸியா காலனி மக்கள் நடத்தும் சட்டரீதியான, ஜனநாயகரீதியான போராட்டங்களுக்கு எஸ்.டி.பி.ஐ முழு ஆதரவு அளிக்கும் என்று உறுதியளித்தார். 


பேரவையின் கன்வீனர் அலாவுதீன் கூறியது:பிறந்த மண்ணில் டி.டி.ஏ எங்களை அநாதைகளாக மாற்றிவிட்டது. எனக்கு 40 வயதாகிறது. டி.டி.ஏவால் இடிக்கப்பட்ட காலனியில் நான் பிறந்தேன். சொந்தமண்ணில் என்னைப்போன்ற நூற்றுக்கணக்கான குடும்பத்தின் சொந்த மண்ணில் அகதிகளாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். டெல்லி அரசு தலையிட்டு டி.டி.ஏவின் அட்டூழியங்களுக்கு முடிவுக்கட்ட வேண்டும் என்றார். 


பேரவையின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது தன்வீர் கூறியது:இந்த நிலம் வக்ஃப் செய்யப்பட்டதா? டி.டி.ஏவுக்கு சொந்தமானதா? என்பது 2-வது விஷயம்.கடுமையான குளிர்காலத்தில் நூற்றுக்கணக்கான சாதாரண முஸ்லிம்கள் வசிக்கும் வீடுகளை இடித்து தள்ளியது காட்டு மிராண்டித்தனமாகும். 

குதுப்மினாரோடு சேர்ந்துள்ள பகுதியை ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுக்கு விற்கவே தங்களை அப்புறப்படுத்தியுள்ளார்கள் என்று கெளஸியா காலனியை சார்ந்த நஃபீஸா பானு கூறினார். 


வாக்கு அளித்த காங்கிரஸ், தங்களின் வீடுகளை இடித்து தள்ளியுள்ளது. மீண்டும் கட்டி தராவிட்டால் காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் நடத்துவோம் என்று ஆஸிஃப் பர்வீன் தெரிவித்தார். 

இப்போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ தேசிய செயலாளர் அப்துல் மஜீத் ஃபைஸி, வழக்கறிஞர் அஜய் பாண்டே, கேம்பஸ் ஃப்ரண்டின் காலித் கான், பாப்புலர் ஃப்ரண்டின் மவ்லான அஷ்ஃபாக், எஸ்.டி.பி.ஐ டெல்லி மாவட்ட செயலாளர் முஹம்மது ஜாபிர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

மஸ்ஜிதையும், வீடுகளையும் மீண்டும் கட்டித் தரவேண்டும் என்று கோரி மனுவை டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித்திடம் பேரவையின் நிர்வாகிகள் அளித்தனர். ஒருவாரத்திற்குள் காலனியில் மஸ்ஜிதையும், வீடுகளையும் மீண்டும் கட்டித் தராவிட்டால் எஸ்.டி.பி.ஐயுடன் இணைந்து போராட்டங்களை வலுப்படுத்துவோம் என்றும், டெல்லி முழுவதும் போராட்டம் வலுப்பெறும் என்றும் பேரவையின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza