Tuesday, December 18, 2012

சிறுபான்மையின மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்- பாப்புலர் ஃபிரண்ட் ஆ ஃப் இந்தியா கோரிக்கை


பத்திரிக்கை செய்தி

சிறுபான்மையின மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் - சிறுபான்மையினர் தினத்தை முன்னிட்டு அரசுக்கு பாப்புலர் ஃ பிரண்ட் ஆ ஃப் இந்தியா கோரிக்கை

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18ம் நாள் சிறுபான்மையினர் தினமாக உலகம் முழுவதும் ஐ.நா சபையால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்த தினத்தை இந்தியாவில் தேசிய சிறுபான்மையினர் ஆணையமும் கடைப்பிடித்து வருகின்றது . இந்தியாவில் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சீகள், ஜைனர்கள் என 5 பிரிவினர் சிறுபான்மை சமூகங்களாக வாழ்ந்து வருகின்றனர் . சிறுபான்மையினர் தினத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் சிறுபான்மையினர் நலனுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என பாப்புலர் ஃ பிரண்ட் ஆ ஃப் இந்தியா கேட்டுக்கொள்கின்றது.

இந்தியாவில் உள்ள சமூகங்களில் மிகவும் பின் தங்கிய சமுகம் உண்டு என்றால் அது முஸ்லீம் சமுகம் தான் என நீதிபதி ராஜிந்திர சச்சார் அவர்கள் தனது அறிக்கையில் கூறியுள்ளார். மேலும் அதே போன்று நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் தனது கமிஷன் அறிக்கையில் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் சிறுபான்மையினருக்கு 15% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதில் 10% ஐ முஸ்லீம்களுக்கு வழங்க வேண்டும் என கூறியுள்ளார். எனவே முஸ்லீம் சமுகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், தமிழகத்தில் தற்போது உள்ள 3.5% இட ஒதுக்கீடை 7% ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என பாப்புலர் ஃ பிரண்ட் ஆ ஃப் இந்தியா மத்திய மற்றும் தமிழக அரசை கேட்டுக்கொள்கின்றது.

அதேபோல் சிறுபான்மை சமூகத்தினரின் உயிருக்கும் ,வழிபாட்டுத்தலங்களுக்கும் உரிய பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும். சமீபத்தில் ராமநாதபுரத்தில் முஸ்லீம்களின் வழிபாட்டுத்தலங்கள் மீது சில சமூக விரோதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்க செயல். தற்போது நடை பெற்று வரும் மாவட்ட கலெக்டர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் இது குறித்து விவாதித்து சம்மந்தப்பட்ட சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை பாப்புலர் ஃ பிரண்ட் ஆ ஃப் இந்தியா கேட்டுக்கொள்கின்றது .

மேலும் வக்பு வாரியத்தின் சொத்துக்களை மீட்டெடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு அரசின் நல உதவி திட்டங்களை தெரியப்படுத்தும் விதமாக சரியான முறையில் விளம்பரங்கள் மூலம் அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் .முஸ்லீம் தனியார் சட்டத்தில் குறுக்கிடாத வண்ணம் பணியாற்ற வேண்டுமென காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு அரசு உரிய உத்தரவிட வேண்டும்.

இந்த சிறுபான்மையினர் தினத்திற்கு உரிய முக்கியத்துவம் அளித்து சிறுபான்மை மக்களின் நலன் காக்குமாறு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மத்திய மற்றும் தமிழக அரசை கேட்டுக்கொள்கின்றது.

இப்படிக்கு 

ஆ. காலித் முகம்மது

மாநில பொதுச்செயலாளர்

பாப்புலர் ஃ பிரண்ட் ஆ ஃப் இந்தியா .                                          


source: http://popularfronttn.org/news.php?id=821&newstype=1



0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza