Saturday, December 22, 2012

மோடி ஒரு மாயத் தோற்றம் : மார்க்கண்டேய கட்ஜு



குஜராத் தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்று மீண்டும் முதல்வராகியுள்ள நிலையில், இந்திய ஊடகக் குழுமத் தலைவரும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜூ  மோடி பற்றிய சில கருத்துரைகளையும் பரப்புரைகளையும் கேள்விக்குட்படுத்தியுள்ளார்.

தனது ஆக்கமொன்றில் கட்ஜூ கூறுகையில் "மோடி பற்றி கருத்தளிக்குமாறு நான் ரொம்பவும் கேட்டுக்கொள்ளப்பட்டாலும், என் கருத்து குஜராத் தேர்தலில் எந்தவிதத்திலும் பிரதிபலித்துவிடக்கூடாது என்பதால் தவிர்த்துவந்தேன். ஆனால் குஜராத் தேர்தல்முடிவுகள் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் இப்போது என் கருத்தைச் சொல்லலாம் என்று கருதுகிறேன்.


எந்த ஒரு அமைப்பையும் அரசையும் உரசிப்பார்க்க, அதிலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும். சந்தேகமில்லாமல், மோடி தன் தலைமையின் கீழ் குஜராத் ஒளிர்கிறது என்கிற பிம்பத்தை வெற்றிகரமாக உருவாக்கி உலா விட்டிருக்கிறார். ஆனால் பளிச்சிடும் யதார்த்தம் வேறுவிதமாக உள்ளது

2002 ஆம் ஆண்டு சிறுபான்மை முஸ்லிம்கள் இனப் படுகொலை செய்யப்பட்டதை குறிப்பிடாவிட்டாலும், வேறு சிலவற்றைக் குறிப்பிட்டாக வேண்டும்.  குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு நாட்டின் தேசிய சராசரியைக் காட்டிலும் குஜராத்தில் மிகவும் அதிக அளவில் இருக்கிறது. அங்கே 48%சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல் அவதியுறுகின்றனர். பஞ்சமும் பட்டினியும் தாக்கியுள்ள சோமாலியா, எத்தியோப்பியா போன்ற ஆப்ரிக்க நாடுகளில் கூட 33% சத குழந்தைகளே ஊட்டச்சத்தின்றி துன்பப்படுகின்றார்கள். ஆனால் குஜராத்தில் இது 48% என்றால்... எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் அந்தக் குழந்தைகளை ஒருகணம் நினைத்துப் பாருங்கள். இது பற்றி மோடியிடம் கேட்டபோது அவர் எப்படியெல்லாம் மழுப்பினார் தெரியுமா? குஜராத் பெண்கள் குண்டாகிவிடும் பயத்தினால் பால் அருந்துவதில்லை; ஒழுங்காகச் சாப்பிடுவதில்லை, மக்களில் பெரும்பாலோனோர் சைவ உண்ணிகள் என்றெல்லாம் அபத்தக் காரணங்களைத் தான் அடுக்கினார்.

குஜராத்தில் தொழிற்சாலைகளும், சாலைகளும் மின்சார வசதிகளும் பெருகட்டும் ஆனால் பச்சிளம் குழந்தைகளால் அதையா அருந்த முடியும்?  சிசு இறப்பு விகிதம் 1000க்கு 48 என்ற விகிதத்தில் குஜராத்திலுள்ளது. இந்தியாவிலேயே 10 ஆவது மோசமான நிலை குஜராத்தில் நிலவுகிறது. குஜராத் ஆண்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு உடல்நிறை குறியீட்டெண்18.5 க்கும் குறைவாகவே உள்ளது. இதுமிகவும் மோசமான நிலையாகும். பிரசவ நேர இறப்புகளும் குஜராத்தே முன்னிலை வகிக்கிறது. கல்வி, சுகாதாரம், வருமானம் போன்றவற்றில் எட்டு மாநிலங்களுக்கு அடுத்த இடத்தில் தான் குஜராத் வருகிறது. குஜராத்தின் கிராமப்புறத்தில் வறுமை 51 சதவீதம் உள்ளது. அதில் பழங்குடியினர் 57%, தாழ்த்தப்பட்டவர்கள் 49% , மிகவும் பிற்படுத்தப் பட்டவர்கள் 42% வறுமையில் வாடுகிறார்கள்.

நிலமும், மின்சாரமும், சாலைவசதிகளும் பெரிய தொழிலகங்களுக்கு மோடி வாரிவழங்குவது உண்மைதான். ஆனால், மக்களின் வாழ்க்கைத் தரம் எப்படியிருக்கிறது என்பதையல்லவா நாம் கவனிக்கவேண்டும்? " என்று கேள்வி எழுப்பியுள்ள கட்ஜூ "குஜராத் மக்கள் என்றேனும் ஒருநாள் விழித்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்" என்றும் கூறியிருக்கிறார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza