Wednesday, October 24, 2012

காஸாவுக்கு எதிராய் விரைவில் போர்தொடுப்போம்: நெத்தன்யாஹூ


நஸரத்: கடந்த திங்கட்கிழமை (22/10/2012) கட்டார் நாட்டின் அதிபர் ஷெய்க் ஹமாத் பின் கலீஃபா அல்தானி  இஸ்ரேலின் சட்டவிரோத முற்றுகைக்கு உட்பட்டிருக்கும் காஸாவுக்கு முதன்முறையாக வருகைதந்திருந்தார்.

இதனையடுத்து, செவ்வாயன்று ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரில் பல்கேரிய அதிபர் ரோஸன் ப்ளீவ்னெலீவ் உடனான சந்திப்பின்போது இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ, 'தம்முடைய அரசாங்கம் காஸாமீது எந்தக் கணத்திலும் போர் தொடுக்கலாம்' என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.


நெத்தன்யாஹு மேலும் குறிப்பிடுகையில், தம்முடைய படையணியைச் சேர்ந்த உயர் அதிகாரியொருவர் படுகாயமடைந்திருப்பது குறித்துத் தாம் மிகுந்த விசனம் அடைந்திருப்பதாகவும், அதற்கான பதிலடியை வழங்கத் தமது அரசாங்கம் ஒருபோதும் தயங்காது என்றும் மிகக் கடுமையாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

திங்கட்கிழமை மாலை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் காஸாமீது மேற்கொண்ட அத்துமீறிய தாக்குதலில் பலஸ்தீன் பொதுமக்களுள் மூவர் உயிரிழந்துள்ளனர். கட்டார் அதிபரின் காஸா வருகைக்கு சற்றுமுன் நிகழ்ந்த இந்தப் படுகொலை நிகழ்வினால் இப்பிராந்தியமெங்கும் பெரும் பதற்றம் நிலவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் ஆக்கிரமிப்பு இராணுவம் காஸாவின் கான் யூனிஸ் பிரதேசத்தில் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது பாதையோரம் வெடித்த குண்டினால் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை உயரதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.

இக்குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பில் எந்த ஒரு பலஸ்தீன் விடுதலைப் போராட்டக் குழுவும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் கராரா கிராமத்தில் உள்ள பலஸ்தீன் வீடுகளை இலக்குவைத்து ஏவுகணைத் தாக்குதலில் ஈடுபட்டிருந்த சமயத்தில், படையினரின் கவனக் குறைவால் அக்குண்டு எதிர்பாராதவிதமாக வெடித்திருக்கக்கூடும் என நம்பப்படுகின்றது.
இது இப்படியிருக்க, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தமது ஆக்கிரமிப்பு அரசாங்கத்துக்கு எதிரான அலை மேலெழுவதைத் திசைதிருப்புமுகமாகவும், ஏனைய மத்தியகிழக்கு நாடுகள் காஸாவாழ் பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவளிப்பதைத் தடுக்குமுகமாகவுமே இஸ்ரேலியப் பிரதமர் மேற்படி தற்செயல் நிகழ்வைப் பூதாகரமாக்கி, அடாவடியான அறிக்கை விடுத்துள்ளார் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
ஏற்கெனவே, காஸாவுக்கு நிவாரண உதவிகளை எடுத்துவந்த துருக்கிய மாவி மர்மரா கப்பலை சர்வதேசக் கடற்பரப்புக்குள் வைத்தே இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை தாக்கி, ஒன்பது மனிதாபிமானச் செயற்பாட்டாளர்களைப் படுகொலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமது முற்றுகைக்கு உட்பட்டிருக்கும் காஸாவுக்கு எந்த ஒரு வெளிநாட்டு உதவியும் கிடைத்துவிடக் கூடாது என்பதில் ஆக்கிரமிப்பு அரசாங்கம் கண்ணுங்கருத்துமாய் இருந்துவருகின்றது; அதன் பொருட்டு எந்த எல்லைக்குச் செல்லவும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கம் பின்நிற்காது என்பதையே கடந்தகாலச் சம்பவங்கள் உணர்த்துகின்றன என மத்திய கிழக்குப் பிராந்திய அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza