Wednesday, October 24, 2012

முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா? Part-4

                     பகுதி-4

முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர்புச் சாதனங்கள் எப்படி செயல்படுகின்றன?

முஸ்லிம்கள் பற்றிய கட்டுக் கதைகள் என இதுவரை நாம் என்னவெல்லாம் சொன்னோமோ அவ்வளவும் தொடர்புச் சாதனங்கள் வழியாய்த்தான் மக்கள் மத்தியில் பதிக்கப்படுகின்றன. இந்தி மொழிப் பத்திரிகைகள் இந்த வகையில் மிகவும் மோசம். பாபர் மசூதிப் பிரச்சினையில் ‘ஸ்வதந்த்ர சேத்னா’, ;பயோனியர்’, ‘ஆஜ்’, ‘ஸ்வதந்த்ர பாரத்’ போன்ற பத்திரிகைகள் எப்படி முஸ்லிம்களுக்கு எதிரான பொய்யான வதந்திகளைப் பரப்பின என்பதை ராதிகா ராமசேஷன் என்பவர் வெளிப்படுத்தியுள்ளார் (எ.பொ.வீ. 15-1-90). முலாயம்சிங் யாதவ் இந்த வெறியர்களுக்கு ஆதரவாக இல்லை என்ற ஒரே காரணத்திற்காக அவரை ‘முல்லா முலாயம்’ என்றே இப்பத்திரிகைகள் எழுதின. “முலாயம் இஸ்லாமியரை ஆயுதம்வைத்துக் கொள்ளச் சொல்கிறார்” எனவும், “முலாயம் ஆட்சியில் இந்துக்கள் சித்திரவதை செய்யப்படுகின்றனர்” எனவும் இவை பொய்ச் செய்திகளை வெளியிட்டன.

 பாபர் மசூதி இடிப்புப் பிரச்சனையில் இங்குள்ள பார்ப்பனப் பத்திரிகைகள் எப்படி நடந்துகொண்டன என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்து மதவெறி அமைப்புகள் தடை செய்ய்யப்பட்டதைத் ‘தினமணி’ கண்டித்து எழுதியது (டிசம். 12). “பெரும்பான்மையினரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளா விட்டால் முஸ்லிம்களின் கதி இப்படித்தான் ஆகும்” என்கிற கருத்தில் மசூதி இடிப்பைத் தொடர்ந்து வீரேந்திர கபூர் என்பவரின் கட்டுரையை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ (ஜன. 7,93) வெளியிட்டது. பார்ப்பனர் ஆதிக்கத்திலுள்ள தொலைக்காட்சிகளைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. மசூதி இடிப்பிற்கு ஆதரவாக மக்களைத் திரட்டிய பாசிச அமைப்புகளின் முயற்சிக்குப் பின்னணியாக விளங்கியது தொலைக்காட்சியில் தொடராக ஒளிபரப்பப்பட்ட இராமாயண, மகாபாரதங்கள்தான் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் இதே பத்திரிகைகள்தான் ஆண்டுக்கு ஒரு முறை ரம்ஜான் மலர் வெளியிட்டு முஸ்லிம்வணிகர்களிடம் விளம்பரக் கொள்ளை அடிப்பதையும் இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.

தொலைக்காட்சியில் திப்புசுல்தான் கதையைக் கூடத்தான் தொடராகக் காட்டினார்கள்?

 ஆனால் ஒன்றைக் கவனியுங்கள். ஒவ்வொரு வாரமும் திப்பு சுல்தான் தொடருக்கு முன்பாக “இது கற்பனைக் கதையின் அடிப்படையிலானது” என்று அறிவிப்புச் செய்தார்கள். திப்பு சுமார் இருநூறு ஆண்டுகளுக்குள் வாழ்ந்து மடிந்த சரித்திர நாயகர். அவருடைய கதைக்கு இந்த அறிவிப்பு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகச் சொல்லப்படும் சாணக்கியன் கதைக்கும் இராமாயண, மகாபாரதங்களுக்கும் இந்த அறிவிப்பு கிடையாது.
திரைப்படங்களில் கூட முஸ்லிம்கள் பற்றி ஒரேவிதமான பிம்பங்கள்தான் முன் நிறுத்தப்படுகின்றன. ’நல்ல’ முஸ்லிம் என்றால் இந்துக்களோடு அனுசரித்துப் போகிறவர், உதவி செய்கிறவர், உரிமைகளுக்காகப் போராடினால் அவர் நல்ல முஸ்லிமல்ல. ‘ரோஜா’, ‘ஜாதிமல்லி’, ‘பம்பாய்’ முதல் நேற்று வந்த ‘ஒற்றன்’, ‘நரசிம்மா’ வரை சமீபத்திய திரைப்படங்களில் முஸ்லிம்கள் வன்முறையாளர்களாகச் சித்திரிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

 ‘ரோஜா’ திரைப்படம் பற்றிச் சொன்னீர்கள். சரி, ‘ஜாதிமல்லி’யில் பொதுவாக மதக் கலவரம் கண்டிக்கப்படுகிறதே தவிர எந்த ஒரு மதத்தையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. நீங்கள் விதண்டவாதம் செய்வது போலத் தோன்றுகிறதே?


பாலச்சந்தர் போன்ற பார்ப்பனர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொஞ்சம் அசந்தால் நம் காதுகளில் ஜாதிமல்லியைச் சுற்றிவிட்டுப் போய்விடுவார்கள். அந்தப் படத்தில் இரண்டு முறை மதக்கலவரங்கள் காட்டப்படுகின்றன. இரண்டுமே நடப்பது அய்தராபாத்தில்தான், இன்று மதக் கலவரங்கள் அயோத்தியிலும், பம்பாயிலும், மீரட்டிலும், டில்லியிலும் நடக்கின்றன. எல்லாவற்றையும் விட்டுவிட்டு பாலச்சந்தர் ஏன் அய்தராபாத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? அய்தராபாத் என்பதன் மூலம் வன்முறையாளர்கள் முஸ்லிம்கள் என்கிற கருத்து மறைமுகமாய்ச் சொல்லப்படுகிறது. தவிரவும் பாதிக்கப்படுபவள் ஒரு இந்துப் பாடகி. பெயர் ஸ்ரீ ரஞ்சனி. எனவே மதக் கலவரத்தில் அவளது தாயைக் கொல்பவர்கள் முஸ்லிம்களாகத்தான் இருக்க முடியும். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். எங்களைப் போன்றவர்களின் வாதங்களை விதண்டாவாதம் எனச் சொல்லாதீர்கள். சமத்துவம், சனநாயகம் என்கிற அடிப்படையில் மனித உரிமைகளுக்காகப் போராடுகிறவர்கள் நாங்கள். அறிவுரீதியாக நாங்கள் சொல்கிற விஷயங்கள் தவறானவை என்று நிறுவுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம்.

 நீங்கள் சொல்வதும் சரிதான். ஆனால் பெரும்பான்மையோரின் கருத்துக்களை ஏற்றுக் கொள்வதுதானே சனநாயகம்?



பெருமபான்மையானவர்களின் கருத்துக்கும் பெரும்பான்மை சார்பாகச் சொல்லப்படும் கருத்துக்கும் வேறுபாடு காணவேண்டும். இந்தியாவிலுள்ள பெரும்பான்மையான மக்கள் பாபர் மசூதியை இடித்தது நியாயம் என்றா சொல்கின்றனர்? நிச்சயமாகக் கிடையாது. ‘தொடர்புச் சாதனங்கள் பற்றிய ஆய்வு மையம்’ என்கிற அமைப்பு டிசம்பர் 8ம் தேதியன்றும், ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ இதழ் டிசம்பர் 12, 15 (1992) ஆகிய தேசிதளிலும் செய்த கருத்துக் கணிப்பின்படி 80 சதம் பேர் மசூதி இடித்ததைக் கண்டித்துள்ளனர். அதோடு பொத்தாம் பொதுவாகப் பெரும்பான்மையோரின் கருத்துகளை ஏற்றுக் கொள்வதுதான் சனநாயகம் என்றும் சொல்ல முடியாது. மனித உரிமைப் பிரச்சினைகளைப் பெரும்பான்மை அடிப்படையில் தீர்மானித்துவிடவும் முடியாது. நாளைக்கே இந்து மதவெறி அடிப்படையில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்து இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் யாரும் பிள்ளை பெறக்கூடாது என்றொரு சட்டம் போட்டால் பெரும்பான்மைக் கருத்து என ஏற்றுக் கொள்ள முடியுமா? வழிபாட்டுத் தலங்களை இடிப்பதும் அப்படித்தான்.

அதோடு சனநாயகம் என்றால் சிறுபான்மையோர் பெரும்பான்மையோருக்குக் கட்டுப்படுவது மட்டுமல்ல; சிறுபான்மையோருக்குப் பாதுகாப்பளிப்பதும், தங்களது கருத்துக்களை அவர்கள் பிரச்சாரம் செய்து பெரும்பான்மைக் கருத்தாக மாற்ற உரிமையளிப்பதும் சேர்த்துத்தான் சனநாயகம். ஆனால் ஒரு எச்சரிக்கையை இங்கு சொல்வது பொருத்தம். சாதாரண மனிதனிடமும் இந்துத்துவச் சிந்தனைகளைப் பதிப்பதில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கும்பல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு இணையாக நமது மதச்சார்பற்ற சக்திகள் வேலை செய்வதில்லை, அணிதிரட்டுவதில்லை என்பதையும் நாம் மறந்துவிடலாகாது. சமீபத்திய தேர்தல்களில் (2003) பா.ஜ.க. வெற்றி பெற்றதற்குப் பின்னணியாக உள்ள இந்துத்துவக் கும்பலின் தொடர்ச்சியான செயற்பாடுகளை நாம் மறந்துவிடக் கூடாது. குறிப்பாகப் பழங்குடியினர், தலித்கள் மத்தியில் இவர்களின் செயல்பாடு கவனிக்கத்தக்கது.

பாபர் மசூதிதான் இடிக்கப்பட்டுவிட்டதே. போனது போகட்டும் என இஸ்லாமியர் இதனை ஏற்றுக் கொண்டால் இனி பிரச்சினை இல்லைதானே?


இனிமேல்தான் பிரச்சினையே. மதுராவில் ‘’இட்கா’ மசூதியை இடித்துவிட்டுக் ‘கிருஷ்ண ஜன்ம பூமி’ கட்ட வேண்டுமெனவும், அஞ்சனியில் கிறிஸ்தவக் கோயிலை இடித்துவிட்டு ‘’னுமான் ஜன்ம பூமிÕ அமைக்க வேண்டுமெனவும் இந்து வெறியர்கள் பேசத் தொடங்கிவிட்டனர். வருணாசிரம அடிப்படையிலான ‘இந்து ராஜ்யம்’ தானே அவர்களின் இறுதிக் குறிக்கோள்!

முஸ்லிம்களின் மனநிலை எப்படி இருக்கிறது?


மிகவும் பாதுகாப்பற்ற மனநிலையிலுள்ளனர். இரண்டாம் தரக் குடிமக்களாக உணர்ந்து வெட்கிப் போயுள்ளனர். தங்களின் அடையாளத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற நிலையில் இஸ்லாம் தனிநபர் சட்டம், ருதுமொழிக்கு நியாயம் வழங்குதல்’, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்குச் சிறுபான்மை உரிமை வழஙகுதல், பாடப்புத்தகங்களில் இஸ்லாமியர் பற்றிய பொய்ச் செய்திகளை நீக்குதல் போன்ற கோரிக்கைகளை முன் வைக்கின்றனர். கலவரங்களில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களைப் பேட்டி காணும்போது தங்களது பாதிப்புகளைச் சொல்லக்கூடப் பயந்து சாகின்றனர். (எ.பொ.வீ. 10-11-90). இழந்தது இழந்ததாக இருக்கட்டும். இனி இழப்புகள் தொடராதிருக்கட்டும். குறைந்தபட்ச அமைதியான வாழ்க்கை போதும் என்பதுதான் அச்சம் கலந்த அவர்களது இன்றைய மனநிலை, எனினும் மசூதி இடிப்புக்குப் பினபு முஸ்லிம்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அரசியல் விழிப்புணர்வு பாராட்டத்தக்கது.

 நீங்கள் செல்வதெல்லாம் சரியாகவும் நியாயமாகவுந்தான் தோன்றுகின்றன. எல்லாவற்றையும் நான் யோசித்துப் பார்க்கிறேன். இந்து வகுப்புவாதம் என்பது நம்மை உடனடியாக எதிர்கொண்டுள்ள ஆபத்தான சூழல் என்பது விளங்குகிறது. இந்நிலையில் நம்முடைய பங்கு என்ன?


பெரும்பான்மையினரின் பெயரிலான பாசிசத்திற்கு எதிராகச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பது இந்த நாட்டிலுள்ள சனநாயகச் சக்திகளின் கடமை. பாபர் மசூதி இடிப்பிற்குப் பிறகு இந்து மதவெறியைக் கண்டிப்பதற்கே அரசு அனுமதி வழங்க மறுக்கிறது. கண்டிப்பவர்களும் கூட வெளிப்படையாக இந்துமதப் பாசிசத்தைக் கண்டிக்காமல் ‘சமய ஒற்றமை’ என்கிற பெயரில்தான் கருத்துப் பிரச்சாரம் செய்கின்றனர். ஏதோ இரண்டு சமயங்களுமே முரண்டு பிடித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு நிற்பது போன்ற அர்த்தத்தை இது ஏற்படுத்திவிடுகிறது. 

ஆனால் நிலைமை அதுவல்ல. இந்துமத வெறியர்களும் இந்துமயமான அரசும் தாக்குகின்றனர். முஸ்லிம்கள் தாக்கப்படுகின்றனர்; எனவே இந்து மதவெறியைக் கண்டிக்கிறேன் என்று சொல்லாமல் மத ஒற்றுமை பேசுவதெல்லாம் சும்மா பம்மாத்துத்தான். இந்த நிலையில் இந்துமத வெறிக்கு எதிராக மக்களைத் திரட்டுவது சனநாயகச் சக்திகளின் கடமை. அதில் ஓர் அங்கம்தான் முஸ்லிம்கள் பற்றிய கட்டுக்கதைகளைத் தகர்ப்பது. கட்டுக் கதைகள் முன் வைக்கப்படும்போது அவற்றைத் தோலுரிப்பதும், அம்பலப்படுத்துவதும், முன்வைக்கும் சக்திகளை எதிர்த்துப் போராடுவதும் சிறுபான்மையினரின் உயிர், உரிமை, உடைமை எல்லாவற்றையும் பாதுகாப்பதும் நமது கடமை. 

அது மட்டுமல்ல. இன்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கோயில் கட்டுவது என்கிற அடிப்படையில் சங்கராச்சாரி போன்ற இந்துத்துவ மனநிலையிலுள்ள மதத் தலைவர்களும் இந்துத்துவ அரசியல் சக்திகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் மசூதியைத்தான் கட்டிக் கொடுக்கவேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைப்பது நம் கடமையாக உள்ளது. 91ம் ஆண்டு இந்தியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி 1947ல் வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருந்தனவோ அப்படியேதான் இன்றும் இருக்க வேண்டும். அந்தச் சட்டப்படியும், பொதுவான மனித அறங்களின்படியும், மசூதி இடிக்கப்பட்ட அன்று அன்றைய பிரதமர் நரசிம்மராவ் அளித்த வாக்குறுதியின் படியும் பாபர் மசூதி இடிக்கப் பட்ட இடத்தில் மீண்டும் மசூதியே கட்டிக் கொடுக்கப்பட வேண்டும். இந்தக் கோரிக்கையை நாமும் வைக்க வேண்டும். இதர இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற அரசியல் சக்திகளையும் முன் வைக்குமாறு வலியுறுத்தவுனம் வேண்டும்.

              பின்னிணைப்பாய்ச் சில கேள்விகள்

 இந்திய முஸ்லிம்களின் நிலைமையில் ஏதேனும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதா?


நிச்சயமாக இல்லை. இன்னும் மோசமாக ஒதுக்கப்படக் கூடிய நிலைக்கே முஸ்லிம்கள் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக அவர்கள் மீதான வெறுப்புப் பிரச்சாரமும் தாக்குதல்களும் அதிகமாகியயுள்ளன. இந்தப் பத்தாண்டுகளில் மத்தியிலும் பல மாநிலங்களிலும் பா.ஜ.க.,வும் அவர்களது கூட்டணியிரும் ஆட்சிக்கு வந்துள்ளனர். மதச் சார்பற்ற அறிஞர்கள், கல்வியாளர்களை எல்லம் நிறுவனங்களில் இருந்து நீக்கியுள்ளனர். மதச்சார்பற்ற பாட நூற்களை நீக்கிவிட்டு அந்த இடங்களில் முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைக்கும் மோசமான கருத்துக்களைப் ‘பாடங்களாக’ எழுதி மாணவர்களுக்குப் புகட்டுகின்றனர். முஸ்லிம்கள் நடத்தக்கூடிய மதரசா பள்ளிகள் தீவிரவாதிகளை உருவாக்கும் மய்யங்கள் என்கிற பிரச்சாரத்தை அத்வானி முதலானோர் தெடார்ந்து செய்து வருகின்றனர். அந்த அடிப்படையில் மதரசாக்கள் மீதும் அலிகார் பல்கலைக்கழகத்தின் மீது பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

மதமாற்றத் தடைச் சட்டத்தைத் தமிழக அரசு முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் குறி வைத்து இயற்றியதும் பின்னர் அது முடக்கி வைக்கப் பட்டதும் நினைவிருக்கலாம்.. இன்று பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்துள்ள ம.பி., சட்டிஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இச்சட்டம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் மூலம் முஸ்லிம் கல்வி நிறுவனங்களும் இதர அமைப்புகளும் மிரட்டப்படுகின்றன. 

இந்நூல் பத்தாண்டுகளுக்கு முந்தியதாயினும் ஆங்காங்கே தேவையான இடங்களில் சில புதிய குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. 

புள்ளி விவரங்களைப் பொறுத்தமட்டில், உதாரணமாக அரசு மற்றும் இராணுவத்தில் இடம் பெற்றுள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை அல்லது அரசு கடன் உதவி பெற்றுள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை என்று பார்த்தால் அவை குறைந்துள்ளன என்பதுதான் உண்மை. 

அதே சமயத்தில் முஸலிம்களின் மீதான தாக்குதல்கள், கொலைகள், கொள்ளைகள் பெரிய அளவில் அதிகரித்துள்ன. கோயமுத்தூரும், குஜராத்தும் இதற்கு எடுத்துக்காட்டுகள் பெரிய அளவில் முஸ்லிம்களின் சொத்துக்கள் கோவையில் அழிக்கப் பட்டதை பி.யூ.சி.எல். போன்ற அமைப்புகள் வெளிப்படுத்தியுள்ளன. கோட்டைமேடு போன்ற பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள் நிரந்தரக் குற்றவாளிகளாகக் கண்காணிப்புக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர். குஜராத்தில் 2000 பேருக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 1,70,000 முஸ்லிம்கள் அகதிகள் ஆக்கப்பட்டனர். இன்றளவும் முஸ்லிம்களில் பெரும்பான்மையோர் வீடு திரும்ப முடியவில்லை. 

குற்றவாளிகள் யாரும் தண்டிக்கப்படவில்லை. அமைச்சர்களாகவும், சட்டமன்ற உறுப்பினர்களாகவும், அரசுப் பதவிகளில் அமோகமாக உலவுகின்றனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்களோ எவ்வித நியாயமான நிவாரணமும் இன்றி அஞ்சி நிற்கின்றனர். குற்றவாளிகள் தண்டனை இன்றித் திரிதல், பாதிக்கப்பட்டவர்கள் உரிய நீதியும், நிவாரணமும் இன்றி அவதியுறுதல். இது ஒரு சனநாயக நாடா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது. உபேந்திர பக்சி போன்ற உலகப் புகழ் பெற்ற சட்டவியல் அறிஞர்கள் இந்த அடிப்படையில் குஜராத்தை ஒரு ‘கிரிமினல் அரசு’எனக் கூட வரையறுத்துள்ளனர். 

மொத்தத்தில் இந்திய முஸ்லிம்களின் நிலைமை மேலும் ஆபத்துக்குள்ளாகியுள்ளது. சீரழிந்துள்ளது என்பதே உண்மை.

 ஊடகங்களில் முஸ்லிம்கள் பற்றிய சித்திரிப்புகளில் ஏதும் முன்னேற்றம் தென்படுகிறதா?


எந்த முன்னேற்றமும் இல்லை என்பது மட்டுமல்ல. செப்டம்பர் 11க்குப் பிறகு நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது. முஸ்லிம்கள் அனைவரையும் தீவிரவாதியாக, தேசபக்தியற்றவர்களாக, சந்தேகத்துக்குரியவர்களாக, சித்திரிக்கும் நிலைமை அதிகமாகியுள்ளது. நமது தமிழ் சினிமாக்கள் இந்த அம்சத்தில் ரொம்ப மோசம். மணிரத்னம், கமல்ஹாசன் போன்றோர் இந்த வேலையை நுணுக்கமாகச் செய்கின்றார்கள் என்றால் விஜயகாந்த், அர்ஜூன் ஆகியோர் நடிக்கும் படங்கள் மிகவும் வெளிப்படையாக முஸலிம் வெறுப்பைக் கக்குகின்றன. எடுத்துக்காட்டாக ஒற்றன், நரசிம்மன் போன்ற படங்களைச் சொல்லலாம். குஜராத் படுகொலைகளின் போது ஆங்கில இதழ்கள் அந்தக் கொடுமைகளை வெளிக்கொணர்வதில் முக்கியப் பங்காற்றின என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 

அதிலும் கூட தேசிய அளவிலான ஆங்கில இதழ்களுக்கும் மாநில அளவிலான மாநில மொழி இதழ்களுக்கும் சில வேறுபாடுகளைச் சுட்ட முடியும். ‘இந்தி’ மொழி இதழ்கள் குஜராத் பிரச்சினையில் மிக மோசமாக முஸ்லிம் வெறுப்பை வெளிப்படுத்தியிருந்ததை பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். தமிழ் இதழ்களும் கூட அதேபோல் நடந்துகொண்டன, நடந்து கொண்டுவருகின்றன. ‘தினமலர்’ பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ‘தினமணி’யைக் கட்டுப்படுத்துவது ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தி. சமீபத்தில் வரலாற்றுப் பாடங்களில் பா.ஜ.க. அரசு செய்துள்ள புரட்டுகளை விளக்கி ஒரு முன்னாள் துணைவேந்தர் எழுதிய கட்டுரையொன்றை தமிழ் முனனணி நாளிதழ் ஒன்று வெளியிட மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அப்படியானால் எந்த நம்பிக்கைக் கீற்றையும் உங்களால்  காண இயலவில்லையா?


அப்படி நான் கருதவில்லை. குறிப்பாக மசூதி இடிப்பிற்குப் பிறகு முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் ஒரு நல்ல அரசியல் விழிப்புணர்வு வந்துள்ளது. ஊடகங்கள், பத்திரிகைகள் ஆகிய துறைகளில் அவர்களின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கதாக உள்ளன. இத்தகைய அரசியல் விழிப்புணர்வு முஸ்லிம் சமூகத்தில் தற்காப்பை அதிகப்படுத்தும என்று நம்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. 

மதச்சார்பின்மையோர், இடதுசாரிகள் மற்றும் இதர ஜனநாயக சக்திகள் ஆகியோர் சிறுபான்மையோர் பிரச்சினைகளில் காட்டக்கூடிய அக்கறையும் பாராட்டக் கூடியதாகவே உள்ளது. அறிவுத் துறையில் இந்துத்துவ சக்திகள் மேற்கொள்ளும் புரட்டு வேலைகளுக்கு இடதுசாரி அறிவுஜீவிகள் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிற ஆக்கப்பூர்வமான எதிர்ப்புகளும், தோலுரிப்புகளும் பாராட்டக்கூடியதாக உள்ளன. 

அதே போல குஜராத்தில் மனித உரிமை அமைப்புகளின் செயற்பாடுகளும் குறிப்பிடத்தக்கதாக இருந்தன. 

எனினும் அதிகரித்து வரும் இந்துத்துவ ஆபத்தை எதிர்கொள்ள இத்தகைய நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பாசிஸ்டுகள் ஒரு செங்கல்லை வைத்து, ஒரு விநாயகர் சிலையை வைத்து, சிலை வணக்கம், பூஜை என்று ஏதோ ஒரு பெயரில் ஆயிரக்கணக்கில், லட்சக் கணக்கில் மக்களை அணி திரட்டுகின்றனர். அடித்தள மக்கள், பெண்கள் முதலியோரைப் பெரிய அளவில் திரட்டுகின்றனர். ஆனால் மதச்சார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி சக்திகளின் எதிர்வினைகள் ரொம்பவும் அடையாளச் செயற்பாடுகளாகவே முடங்கியிருக்கின்றன. ஒரு கண்டனக் கூட்டம், மனிதச் சங்கிலி என்கிற அளவில் முடிந்துவிடுகின்றன. வலதுசாரி மதவாத சக்திகள் மக்களைத் திரட்டுவதும் இடதுசாரி, சனநாயக, மதச்சார்பற்ற சக்திகள் அதற்கு ஈடுகொடாமல் இருப்பதும் நாட்டில் பாசிசம் வெற்றி கொள்வதின் அடையாளமாக அமையும். 

அரசியல் பிரச்சினைகளை அரசியற் களத்தில்தான் தீர்க்க வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பு வரட்டும் என்கிற ரீதியில் அரசியல் அமைப்புகள் சொல்லிவிட்டுச் சும்மா இருக்க இயலுமா?

 மீபத்தில் ஒரு இதழில் படித்தேன்: ஷாபானு பிரச்சினையில்தான் முஸ்லிம்கள் முதன் முதலில் இந்திய அளவில் திரள ஆரம்பித்தார்களாமே? இது உண்மையா?


நானும் படித்தேன். முஸ்லிம்களிடம் சனநாயகம் இல்லை, சகிப்புத் தன்மை இல்லை என்றெல்லாம் அவ்வப்போது முஸ்லிம்களுக்கு எதிரான கட்டுக் கதைகளைப் பரப்பி வரும் இதழ் அது. ஷாபானு பிரச்சினையில்தான் இந்திய முஸ்லிம்கள் ஒன்றிணைகின்றனர் எனச் சொல்வதன் மூலம் முஸ்லிம்கள் பெண்களை ஒடுக்கியவர்கள், இந்துத்துவத்திற்கு எதிரானவர்கள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்றொரு பிம்பத்தை ஏற்படுத்தும் முயற்சி அது. திரைப்படங்கள், ஊடகங்கள் ஆகியவற்றில் முஸ்லிம்களுக்கு எதிராகப் பரப்பப்படும் ‘தீவிரவாதப்’ பிரச்சாரத்தின் இன்னொரு தந்திரமான வடிவம் இது. ஆனால் உண்மை இதுவன்று. ஷாபானு பிரச்சினை மேலுக்கு வந்தது 1985ல் ராஜீவ் காந்தி ஆட்சிக்காலத்தில், அதற்கு முன்பே முஸ்லிம்கள் இந்திய அளவில் திரண்டு தம் குரலை ஒலிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதுதான் உண்மை. 

சுதந்திரத்திற்குப் பிந்திய இந்திய முஸ்லிம்களின் வரலாறு மிகவும் பரிதாபமானது. அநீதிகள் நிரம்பியது. பாகிஸ்தான் பிரிவினையை ஒட்டி படேல், ராஜேந்திர பிரசாத், சியாமா பிரசாத் முகர்ஜி, மாளவியலா முதலியோர் இங்குள்ள முஸ்லிம்களைப் பிணைக் கைதிகளாகவே கருதி நடத்தினர், முஸ்லிம்களுக்கு இருந்த ஒரே ஆறுதல் காந்தியும் நேருவும்தான். காந்தியையும் இந்துத்துவவாதிகள் சுட்டுக் கொன்றனர். முஸ்லிம் தலைவர்களனைவரும் பாகிஸ்தானுக்குச் சென்றனர். இந்திய அளவிலான ஒரே தலைவராககிய அபுல் கலாம் ஆசாத் முஸ்லிம்களுக்குத் தலைமை கொடுககத் தயாராக இல்லை. 

அரசியல் சட்ட அவையில் முஸ்லிம்களுக்கு குறைந்தபட்சம் மூன்று அநீதிகள் இழைக்கப்பட்டன.1. உருது மொழி புறக்கணிக்கப்பட்டமை.
2. பாராளுமன்றம், சட்டமன்றம், அரசு பதவிகள் ஆகியவற்றில் இடஒதுக்கீடும் இரட்டை வாக்குரிமையும் மறுக்கப்பட்டமை.
3. பொதுசிவில் சட்டம் பற்றிய குறிப்பை வழிகாட்டு நெறிமுறைகளில் ஏற்றியமை.


இதே காலகட்டத்தில் பாபர் மசூதிக்குள் பாலராமர் சிலையை வைத்து வருங்காலக் கொடுமைகளுக்கு வித்திட்டது இந்துத்துவம். 

தலைமையும் வலுவான இயக்கமும் அற்ற முஸ்லிம் சமுதாயம் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டது. காந்தி முதற்கொண்டு அனைவரும் முஸ்லிம் லீக்கை கலைத்துவிடச் சொன்ன நேரம் அது. எப்படியேனும் இந்திய தேசத்தின் மீதானத் தங்களின் விசுவாசத்தை நிறுவுவதே அடுத்த பத்தாண்டுகளில் முஸ்லிம்களின் பணியாக இருந்தது. இந்நிலையில் 1960 வரை அகில இந்திய அளவில் முஸ்லிம் திரட்சி என்பது ஏற்படவே யில்லை. 

1961ல் தான் முதல் முறையாக டாக்டர் சையத் முகமத், மவுலானா ஹிஸ்புர் ரஹ்மான் ஆகியோரின் முயற்சியில் ஜூன் 10, 11 தேதிகளில் புதுடெல்லியில் இந்திய முஸ்லிம்களின் மாநாடு கூட்டப்பட்டது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சி. இதற்குப் பின்புலமாக இருந்தது ஜபல்பூரிலும், பகல்பூரிலும் நடைபெற்ற மிகப் பெரிய வகுப்புக் கலவரங்கள். முஸ்லிம்களின் உயிர்களும் உடைமைகளும் பெருமளவில் அழிக்கப்பட்டன. 1964ல் ஜாம்ஷெட்பூரில் மிகப்பெரிய அளவில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டபோது ஆகஸ்ட் 8, 9 தேதிகளில் லக்னோவில் மவுலானா தயீப், சையத் முகமது ஆகியோரின் முயற்சியால் அகில இந்திய முஸ்லிம் மக்களின் மஜ்லிஸ் ஏ முஷாவரத் மாநாடு கூட்டப்பட்டது. ஜெயப்பிரகாஷ் நாராயணன், நவகிருஷ்ண சவுதரி, ஆனந்த சங்கரராய், சாரு சந்திர பந்தாரி முதலியோர் இந்துத்துவ சக்திகளைக் கடுமையாகக் கண்டித்தனர். 1964ல் தான் விசுவ இந்து பரிசத் உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

எனவே, கடுமையான வன்முறைகளையும் சொத்திழப்பையும் உயிரிழப்புகளையும் எதிர்கொண்ட போதும் எல்லாவற்றி லிருந்தும் தாம் ஒதுக்கப்படுவதாக உணர்ந்த போதும்தான் முஸ்லிம்கள் ஒன்றிணையக் கூடிய நிலை ஏற்பட்டது. 1961க்குப் பிறகு இது நிகழ்ந்தது. இதை மறைத்து ஷாபானு விவகாரத்தை ஒட்டித்தான் (1985) முஸ்லிம்கள் திரண்டதாகச் சொல்வது அப்பட்டமான இந்துத்துவத் தந்திரம். அடிப்படைவாத நோக்குடன்தான் முஸ்லிம்கள் திரண்டனர் என நிறுவ முயலும் குள்ளநரித்தனம்.

 எல்லோருக்கும் பொதுவான சிவில் சட்டம் என்பது ஒரு நியாயமான கோரிக்கைதானே! அதை ஏன் முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள்?


தொடரும் இன்ஷா அல்லாஹ்.......!

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza