Sunday, October 21, 2012

உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் மனு- தமிழகத்திற்கு இழைக்கப்படும் துரோகம்:கருணாநிதி!


சேது சமுத்திரத் திட்டம் தேவையில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அரசு தாக்கல் செய்துள்ள மனு, தமிழகத்திற்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் என்று முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்:

சேது சமுத்திரத் திட்டம் தமிழகத்திற்கு எத்தனை அவசியமானது என்பதைப்பற்றி நான் 2 நாட்களுக்கு முன்பு கூட கடிதம் எழுதியிருந்தேன், திராவிடர் கழகத் தலைவர் இளவல் வீரமணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தோழர் ஜி. ராமகிருஷ்ணனும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தா. பாண்டியனும், பா.ம.க. சார்பில் நிறுவனர் ராமதாசும் அறிக்கை வெளியிட்டிருந்தார்கள்.


இதுமட்டுமா, சேது சமுத்திரத் திட்டத்திற்காக எழுச்சி நாள் கொண்டாடும்படி 1967ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த போதே ஆணையிட்டுள்ளார்.

முதலமைச்சராக எம்.ஜி.ஆர்.  இருந்தபோது, 1985-1990ஆம் ஆண்டுக்கான ஏழாவது ஐந்தாண்டுத் திட்டத்தைச் சமர்ப்பித்தபோது சேது சமுத்திரத் திட்டம் மன்னார் வளைகுடாவை பாக் ஜலசந்தியுடன் இணைப்பதற்கு பாம்பனுக்கு அருகே உள்ள குறுகிய பகுதியில் கப்பல் போக்குவரத்துக் கால்வாயை வெட்டுவதற்கு வகை செய்யும் திட்டம் என்றும், பயண தூரம், பயண நேரம் ஆகியவை குறையும் என்றும் எடுத்துக் கூறி அத்திட்டத்தை நிறைவேற்றியே தீரவேண்டுமென்றும் கூறியிருக்கிறார்.

1981ஆம் ஆண்டு சேது சமுத்திரத் திட்டம் பற்றி ஆராய எச்.ஆர். லட்சுமி நாராயணன் தலைமையில் அமைந்த குழு தமிழகத்திற்கு வந்த போது, எனது கோரிக்கையினை ஏற்று,அன்றைய முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., அந்தக் குழுவிடம் சேது சமுத்திரத் திட்டத்தின் முக்கியத்துவம் பற்றிப் பேசினார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்தியிலே அமைந்த போது கப்பல், சாலை போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற டி.ஆர். பாலு இத்திட்டத்திற்கு முழு வடிவம் தந்து மிக வேகமாக திட்டப் பணிகள் நடந்தன.

இதற்கிடையே, 2002ம் ஆண்டு பிரதமருக்கு நான் எழுதிய கடிதத்தில், தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான சேது சமுத்திரத் திட்டத்தை உடனே நிறைவேற்றக் கோரி வலியுறுத்தியிருந்தேன்.

மேலும், சேதுக் கால்வாய் திட்டம் என்பது, பாக் ஜலசந்தியையும் மன்னார் வளைகுடாவையும் இணைக்கும் ஆடம்ஸ் பாலத்தின் குறுக்கே வெட்டப்பட வேண்டிய கால்வாயின் பெயராகும்.

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றினால், இந்தியாவிற்கு அன்னியச் செலாவணியும், கிழக்கு கடற்கரையோரமாய்க் கப்பல் போக்குவரத்தும் எளிதாக இருக்கும்.

இத்திட்டத்தின் பயனைப் பற்றி 1981-82ஆம் ஆண்டு மத்திய அரசின் குழு பின்வருமாறு ஆராய்ந்து மதிப்பிட்டது.

1. இந்தியாவின் கிழக்குக் கடற்கரையோரத்தில் தொடர்ச்சியான கடல் வழிப் போக்குவரத்திற்கு தற்போது வழியில்லை. இத்திட்டத்தை செயல்படுத்தினால் இந்து மகா சமுத்திரமும் வங்கக் கடலும் இணைய வாய்ப்புள்ளது. பாறைகளால் அமைந்த ஆடம்ஸ் பாலத்தை வெட்டி இணைத்தால் கடல் வழிப் போக்குவரத்திற்கு மிகவும் வசதியாக இருக்கும்.

2. சேது கால்வாய்த் திட்டமும், தூத்துக்குடித் துறைமுகத் திட்டமும் ஒருங்கிணைந்தவைகளாகும். சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்தினால் தூத்துக்குடி துறைமுக வளர்ச்சியும் முழு அளவு அதிகரிக்கும். தூத்துக் குடியிலிருந்து பின்வரும் துறைமுகங்களுக்குப் பயணம் செய்யும் நேரமும் குறையும்.

அ. தூத்துக்குடியிலிருந்து சென்னை 434 மைல் (மிச்சப்படும் தூரம்)

ஆ. தூத்துக்குடியிலிருந்து விசாகப்பட்டினம் 376 மைல் (மிச்சப்படும் தூரம்) இ) தூத்துக்குடியிலிருந்து கல்கத்தா - 340 மைல் (மிச்சப்படும் தூரம்)

3. இக்கால்வாயினால் பயணம் செய்யும் தூரம் குறைவதால் கப்பலின் எரி பொருள் மிச்சப்படும். இதனால் இந்தியாவின் அன்னியச் செலாவணி செலவில் சுமார் 130 கோடி ரூபாய் ஒவ்வொரு ஆண்டும் மிச்சப்படும்.

4. இந்தியாவிற்கு அன்னியச் செலாவணி கணிசமான அளவு உயரும். இந்தக் கால்வாயின் மூலம் தமிழகத்தின் குளச்சல், முட்டம், தூத்துக்குடி, ராமேசுவரம்,நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், பாண்டிச்சேரி, சென்னை மற்றும் விசாகப்பட்டினம், கல்கத்தா வரையுள்ள கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள் வளர்ச்சி அடையும்.

5. இக்கால்வாய் வெட்டப்பட்டால் தூத்துக்குடித் துறைமுகத்தின் வளர்ச்சி ஏற்பட்டு அதன்மூலம் பொருளாதார ரீதியாக நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர்,காரைக்குடி, திருப்பத்தூர், மதுரை, நாகர்கோவில் ஆகிய பிற்படுத்தப்பட்ட பகுதிகள் முழுதும் தொழில் ரீதியாக வளர்ச்சி பெறும்.

6. இந்தக் கால்வாய் வெட்டப்பட்டால், இந்தியாவின் தென் பகுதியில் அன்னியச் சக்திகள் ஊடுருவாமல் அது ஓர்அரணாக விளங்கும்.

7. இக்கால்வாயின் மூலம் மீன் பிடித் தொழில் தென்னிந்தியாவில் வளர்ச்சி பெறும். மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு இது ஒரு பாதுகாப்பு வளையமாகத் திகழும்.

8. நிலம் வழியாகச் செல்லும் நிலக்கரி, சிமெண்ட், உப்பு, உரங்கள், கடல் உணவு வகைகள், பருப்பு வகைகள், பருத்தி போன்ற பொருள்களைக் கிழக்குக் கடற்கரை மார்க்கமாக இந்தியாவின் பிற பகுதிகளுக்குக் கொண்டு செல்ல இக்கால்வாய் மிகவும் உதவியாக இருக்கும்.

9. சேதுக் கால்வாய் மூலமாக கப்பல்கள் சென்றால், புயல் அபாயம் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை.

10. இக்கால்வாய் ஒரு சுற்றுலா மையமாக அமைந்து உலகின் பல பகுதிகளில் இருந்து பயணிகளை ஈர்க்க வாய்ப்புள்ளது.

11. ஏற்றுமதி, இறக்குமதித் தொழில்கள் இக்கால்வாயினால் பெருகி, இந்தியாவின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

12. இக்கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால் ஏற்படும் செலவை சுமார் பத்து அல்லது பனிரெண்டு ஆண்டுகளில் ஈடுசெய்து விடலாம்.

13. இத்திட்டம் பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் சாதகமானதாகும். இந்தியாவின் நலன் கருதி உடனடியாக இத்திட்டம் நிறை வேற்றப்பட வேண்டும் என்று இந்திய அரசாங்கத்தின் கப்பல் மற்றும் கடல் வழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் 1981-82ஆம் ஆண்டின் மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கை தெளிவாகக் கூறுகிறது.

எனவே பொருளாதார ரீதியாக எவ்வாறெல்லாம் இத்திட்ட தாமதத்தினால் இழப்பு ஏற்படுகிறது என்பதை என் கடிதம் மூலம் தாங்கள் அறிவீர்கள். எனவே பொருளாதார வளர்ச்சியுடன் வேலை வாய்ப்புகள் வழங்கிடும் இத்திட்டத்தை நாட்டு வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு தாங்கள் தலையிட்டு தாமத மில்லாமல் நிறைவேற்றும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

இந்த கடிதம் அனுப்பியது குறித்து தினமணியில் தூங்காத கருணாநிதி என்ற தலைப்பில் தலையங்கம் ஒன்றும் வெளியிடப்பட்டது.

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் திட்டம் தேவையில்லை என்று தமிழக அரசின் முதல் அமைச்சரே உச்ச நீதிமன்றத்திலே, அதுவும் பல கோடி ரூபாய் மக்கள் பணத்தை செலவு செய்து திட்டத்தின் 75 சதவிகிதப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அறிக்கை கொடுத்திருப்பது முறைதானா என்பதை அரசியல் கட்சி வேறுபாடுகளை யெல்லாம் மறந்து, தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்வை ஒருக்கணம் எண்ணிப் பார்த்து அனைவரும் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே இதனை எழுதியுள்ளேன்.

இவ்வாறு கருணாநிதி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza