Tuesday, September 25, 2012

ஐஸ், டீ குடித்தால் சிறுநீரக கல் உருவாகும்: அமெரிக்க பேராசிரியர் தகவல்!

Add caption
 தெம்பு தரும் குளிர்பானம் தானே... என்று ஐஸ், டீயை தொடர்ந்து விரும்பி சாப்பிடுபவர்களா நீங்கள்...? உங்கள் தேர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது என்று சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.சிறுநீரகங்களில் சாதாரண கற்கள் உருவாகுவதற்கு தொடர்ந்து ஐஸ், டீ குடிப்பதும் ஒரு முக்கியமான, மோசமான காரணம் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சிகாகோவில் உள்ள லயோலா மருத்துவ கல்லூரியின் சிறுநீரக இயல்துறையின் உதவி பேராசிரியர் டாக்டர் ஜான்மில்னர் சமர்ப்பித்துள்ள ஆராய்ச்சி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- 

ஐஸ், டீயில் அதிகமாக உள்ள ஆக்சலேட் என்னும் திடப்பொருள் கலவை சிறுநீரக கற்களை உருவாக்கும் மூல வேதியல் பொருள் என அறியப்பட்டுள்ளது. இவை சிறுநீரில் உப்பாகவும், தாதுக்களாகவும் தேங்கி நின்று சிறுநீரக கற்களை உருவாக்குகின்றன.

பொதுவாக, இந்த படிமங்கள் தீங்கற்றவையாக கருதப்பட்டாலும், இவை பெரிய அளவில் வளர்ந்து சிறுநீரக பாதையில் அடைப்பை ஏற்படுத்தும் அபாயமும் உண்டு.

தண்ணீரை விட சுவையாக உள்ளது. குறைந்த கலோரிகளை கொண்டது என்பதற்காக ஏராளமான மக்கள், அதிகமாக ஐஸ், டீயை பருகும் பழக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனால், சிறுநீரகத்திற்கு ஏற்படும் பாதிப்பை ஒப்பிட்டுப்பார்த்தால், அவர்கள் தங்களுக்கு தாங்களே தீங்கிழைத்துக் கொள்கின்றனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் தட்ப-வெப்ப நிலைக்கு ஏற்றவாறு ஐஸ், டீ குடிக்கும் பழக்கத்தை நாம் கைவிடவேண்டும். மேலும், ஆக்சலேட் எனப்படும் மூலப்பொருள் அதிகம் கொண்ட பசலைக்கீரை, சாக்லேட், உப்பு, பயறு மற்றும் இறைச்சி வகைகளும் சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கும் காரணிகளான பிற உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

சிறுநீரக கற்களின் வளர்ச்சியை எலுமிச்சைப்பழத்தில் உள்ள சிட்ரிக் அமிலம் கட்டுக்குள் வைக்கும். எனவே, நிறைய தண்ணீர், எலுமிச்சை ரசம், பார்லி போட்டு கொதிக்க வைத்த தண்ணீர் ஆகியவற்றை தொடர்ந்து பருகி வருவதன் மூலம் நம்மால் சிறுநீரக நோய்களில் இருந்து விடுபட முடியும்.

தகவல்: மாலைமலர்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza