Thursday, September 27, 2012

அவதூறு பிரச்சாரங்களுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய அளவிலான பிரச்சாரம்!

PFI
புதுடெல்லி:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக நடத்தப்படும் அவதூறுப் பிரச்சாரங்களை அதன் தேசிய செயற்குழு வன்மையாக கண்டித்துள்ளது.
அரசு மற்றும் போலீஸ்-உளவுத்துறை ஏஜன்சிகளைச் சார்ந்த சிலர் வகுப்புவாத சிந்தனையுடன் பாப்புலர் ஃப்ரண்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றனர். இதன் மூலம் ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கான உரிமைப் போராட்டங்களை சீர்குலைக்கின்றனர். அவதூறுப் பிரச்சாரங்களின் நோக்கம், இந்த பிரிவினரை சக்திப்படுத்துவதற்காக பாடுபடும் இயக்கத்திற்கு எதிரான சூழ்ச்சியாகும். இது அரசியல் சாசனம் கூறும் மதசார்பற்ற ஜனநாயக விழுமியங்களை மறுப்பதாகும். லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ள இவ்வியக்கத்தின் செயல்பாடுகள் சில சுயநலவாதிகளுக்கு எரிச்சலூட்டியுள்ளது. அதன் விளைவாகவே அவர்கள் இவ்வியக்கத்திற்கு எதிராக மறைமுக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

இத்தகையதொரு சூழலில் “Why Popular Front?” (பாப்புலர் ஃப்ரண்ட் ஏன்?) என்ற தலைப்பில் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் நவம்பர்10-ஆம் தேதி வரை தேசிய அளவிலான பிரச்சாரத்தை நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு தீர்மானித்துள்ளது. இப்பிரச்சாரத்தின் வாயிலாக பாப்புலர் ஃப்ர்ண்ட் ஆற்றி வரும் பணிகள், பாப்புலர் ஃப்ர்ண்டிற்கு எதிரான அவதூறுகளின் பின்னணி ஆகியன குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
கூடங்குளம் பிரச்சனை குறித்து மிகுந்த கவலையை தேசிய செயற்குழு வெளியிட்டது. மக்களுக்கு அரசியல் சாசனம் வழங்கும் பாதுகாப்பை உறுதிச் செய்யுமாறு தேசிய செயற்குழு அரசை வலியுறுத்தியது.
அஸ்ஸாம் அகதிகள் தங்கள் வீடுகளுக்கும், கிராமங்களுக்கும் திரும்பிச் செல்வதற்கான நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் மேற்கொள்ளவேண்டும். கலவரத்திற்கு காரணமானவர்கள் மற்றும் பணிகளில் தவறிழைத்த அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி தண்டனை வழங்க சிறப்பு நீதிமன்றத்தை நிறுவ வேண்டும்.
உள்நாட்டு வர்த்தகம் மற்றும் நாட்டின் பொருளாதார கட்டமைப்பிற்கும் கடுமையான பாதிப்புகளை உருவாக்கும் அந்நிய நேரடி முதலீட்டை(FDI) மத்திய அரசு மறு பரிசீலனைச் செய்யவேண்டும்.
தேசிய செயற்குழு கூட்டத்திற்கு தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கே.எம்.ஷெரீஃப் அறிக்கையை வாசித்தார். துணைத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza