Friday, February 24, 2012

சிரியா:நிராயுதபாணிகளை கொலைச்செய்ய உத்தரவு – ஐ.நா குற்றச்சாட்டு

டமாஸ்கஸ்:சிரியாவில் நிராயுதபாணிகளான பெண்களையும், குழந்தைகளையும் தாக்குவதற்கு அந்நாட்டின் ராணுவ-போலீஸ் துறைகளின் மேலிடத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா கூறியுள்ளது.

மக்கள் வசிக்கும் பகுதிகளில் குண்டுவீச்சை நடத்தவும், காயமடைந்து சிகிட்சை பெறும் எதிர்ப்பாளர்களை தாக்கவும் போலீஸ்-ராணுவ மேலிடம் உத்தரவிட்டுள்ளது என்று ஐ.நா வின் சுதந்திர விசாரணை கமிஷன் அறிவித்துள்ளது. கொடூரமான தாக்குதல்களுக்கு உத்தரவிட்ட அதிகாரிகளின் பெயர் விபரங்களை ரகசியமாக கண்டறிந்துள்ளதாகவும், இவர்களை சட்டத்தின் முன்னால் கொண்டுவருவோம் என்றும் ஐ.நா குழு கூறியுள்ளது.

நிராயுதபாணிகளான எதிர்ப்பாளர்களை கொலைச்செய்தல், உத்தரவை மீறும் ரானுவத்தினரை கொலைச் செய்தல், காரணம் இல்லாமல் சிறையில் அடைத்தல், சிறையில் அடைத்தவர்களிடம் மனித தன்மையற்ற முறையில் நடந்துகொள்ளுதல் ஆகிய உத்தரவுகளை ராணுவத்தினர் பிறப்பித்துள்ளதாக ஐ.நா குழு ஐ.நா மனித உரிமை கமிஷனுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளது. உத்தரவு பிறப்பித்தவர்களில் அதிபர் பஸ்ஸாருல் ஆஸாத் முதல் மத்திய நிலையில் உள்ள அதிகாரிகள் வரை இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். சிரியா விவகாரம் குறித்து கூடுதல் விசாரணை மேற்கொள்ளப்படுபொழுது இவர்களின் பெயர் விபரங்கள் தேவைப்படும் என்று ஐ.நா குழுவிற்கு தலைமை வகித்த ஃபவ்லா பின்ஹேரா கூறியுள்ளார்.

சிரியா விவகாரத்தை சர்வதேச க்ரிமினல் நீதிமன்றத்திடம்(ஐ.சி.சி) ஒப்படைக்க ஐ.நா மனித உரிமை அமைப்பின் மூத்த அதிகாரிகள் முன்னர் கோரிக்கை விடுத்திருந்தனர். ஐ.நா மனித உரிமை குழு இவ்விவகாரம் குறித்து விவாதிக்க அடுத்த வாரம் ஜெனீவாவில் கூடும்.அன்றைய தினம் ஐ.நா குழுவின் அறிக்கை அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்படும்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza