Saturday, December 3, 2011

வெறுப்பை தூண்டும் உரை: வருண் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

imagesCAL9M6V5
புதுடெல்லி:2009-ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலின்போது வெறுப்பை தூண்டும் வகையில் துவேசமாக பேசிய பா.ஜ.க எம்.பி வருண் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வெறுப்பை தூண்டு உரை நிகழ்த்திய வருண்காந்தியின் எம்.பி பதவியை ரத்துச் செய்யவேண்டும் என கோரி ஃபிலிபித் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட வி.எம்.சிங் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

வி.எம்.சிங் முன்னர் அளித்த மனுவை அலகபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடிச் செய்திருந்தது. இதனைக் குறித்து கேள்வி எழுப்பி உச்சநீதிமன்றத்தில் சிங் முறையீடு செய்துள்ளார். ஆதாரங்களை ஆராயமல் வி.எம்.சிங்கின் மனுவை அலகபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடிச் செய்துள்ளதாக அவருக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் எம்.என்.கிருஷ்ணமணி வாதாடினார்.

தேர்தல் விவகாரம் தொடர்பான புகார்களில் 6 மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்கவேண்டும் என நிபந்தனையை பொருட்படுத்தாமல் நீதிமன்றம் 2 வருடமாக வழக்கை நீட்டித்துள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.

ஹிந்துக்களை நோக்கி கையை உயர்த்துபவர்களின் இரு கைகளையும் துண்டிக்கவேண்டும் என வெறித்தனமாக வருண்காந்தி பேசினார். இந்தியாவில் முஸ்லிம்கள் மீண்டும் ஒரு பாகிஸ்தானை உருவாக்காமல் இருக்க பகவத் கீதையின் பெயரால் வாக்களிக்க வருண் வாக்காளர்களை தூண்டினார் என மனுவில் கூறப்பட்டுள்ளது.2

தேர்தலில் மனுத்தாக்கல் செய்யும் முன்பே இந்த சர்ச்சைக்குரிய உரையை வருண் காந்தி பேசியது சட்டரீதியாக பதவியை ரத்துச் செய்வதற்கு காரணமாகாது என கூறி உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடிச் செய்தது என வழக்கறிஞர் கூறினார். இதனைத் தொடர்ந்து நீதிபதிகளான அல்டமாஸ் கபீர், எஸ்.எஸ்.நிஜ்ஜார் ஆகியோரை கொண்ட பெஞ்ச் வருண் காந்தி பதிலளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza