Friday, November 25, 2011

இஷ்ரத்தை குறித்து அவதூறு பரப்பிய ஜி.கே.பிள்ளை மன்னிப்பு கேட்க பிரமுகர்கள் கோரிக்கை

புதுடெல்லி:குஜராத்தில் இஷ்ரத் ஜஹான் உள்பட நான்கு அப்பாவிகள் மோடி போலீசாரால் போலி என்கவுண்டரில் கொலைச் செய்யப்பட்டதாக சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை சமர்ப்பித்துள்ள சூழலில் பாலியல் ரீதியாக இஷ்ரத் மீது அவதூறு பரப்பிய முன்னாள் உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை மன்னிப்பு கோரவேண்டும் என ஜாமியா டீச்சர்ஸ் சோலிடாரிட்டி தலைமையில் பிரமுகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இஷ்ரத் ஜஹான் லஷ்கர்-இ-தய்யிபா உறுப்பினர் என உச்சநீதிமன்றத்தில் அளித்த பிரமாணப்பத்திரத்தில் கூறிய ஜி.கே.பிள்ளை அவருக்கு எதிராக பாலியல் ரீதியான அவதூறையும் சுமத்தியிருந்தார். பல ஆண்களுடன் ஹோட்டலில் தங்கியிருந்தார் என இஷ்ரத்தை குறித்து அவதூறை கூறியிருந்தார் ஜி.கே.பிள்ளை.

சுதந்திரமாக பயணம் செய்யும், பணி புரியும் இளம்பெண்ணை சந்தேகத்தின் நிழலில் நிறுத்துவதற்கான முயற்சிதான் ஜி.கே.பிள்ளையின் அவதூறு என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இஷ்ரத் உள்பட நான்குபேர் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டதாக சிறப்பு புலனாய்வு குழு கண்டிபிடித்தது. இவர்களுக்கு லஷ்கர்-இ-தய்யிபாவுடன் தொடர்பிருப்பதாக ஒரு ஆதாரம் கூட இல்லை. இந்நிலையில் இஷ்ரத்தை குறித்து அவதூறான கருத்தை தெரிவித்த ஜி.கே.பிள்ளை உடனடியாக மன்னிப்புக்கோர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சுதந்திர பத்திரிகையாளர் ஜோதி புன்வானி, எழுத்தாளர் கீதா ஹரிஹரன், வரலாற்றாசிரியர் ஸபா தேவன், ஜாமியா மில்லியா இஸ்லாமியா அசோசியேட் பேராசிரியர் ஸபீனா காதியோக், பேராசிரியர் ஜானகி ராஜன், பேராசிரியர் அனுராதா ஷினோய்(ஜவஹர்லால் நேரு பல்கலை கழகம்), ஸீமா முஸ்தஃபா(பத்திரிகையாளர்), கவிதா ஸ்ரீவஸ்தவா(பி.யு.சி.எல்) ஆகியோர் ஜி.கே.பிள்ளை மன்னிப்புக்கோர வலியுறுத்தும் அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza