Monday, October 3, 2011

மத துவேஷ கருத்து – சுப்பிரமணியம் சாமி மீது டெல்லி போலீஸ் வழக்குப் பதிவு

ssamy
புதுடெல்லி:மதங்களுக்கு இடையே மோதலையும், துவேஷத்தையும் ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை வெளியிட்டதாக கூறி ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி மீது டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சுப்பிரமணியம் சாமி மும்பையின் பிரபல செய்தித் தாளில் எழுதியிருந்த கட்டுரையில், இந்துக்கள் மற்றும் முஸ்லீ்ம்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அவர் கூறுகையில், இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக இந்துக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செய்ல்பட வேண்டும். அந்த மனப்பான்மை இந்துக்களுக்கு வர வேண்டும்.

தான் ஒரு இந்து வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று ஒவ்வொரு இந்திய முஸ்லீமும் உணர வேண்டும், ஒப்புக் கொள்ள வேண்டும். இதை ஒப்புக் கொள்ளும் முஸ்லீம்களை மட்டுமே இந்துஸ்தான் எனப்படும் இந்து சமூகத்தில் ஒரு அங்கமாக நாம் ஏற்க வேண்டும். மாறாக, தாங்கள் இந்து பூர்வீகத்திலிருந்து வந்தவர்கள் என்பதை ஏற்க மறுப்பவர்களை நாம் வெளிநாட்டினராகவே கருத வேண்டும். பதிவு பெற்ற இந்திய குடிமக்களாகவே அவர்களை நாம் கருத வேண்டும். அவர்களை இந்தியாவில் வசிக்க அனுமதிக்கலாம். ஆனால் வாக்குரிமை தரக் கூடாது. அவர்கள் எம்.பி., எம்.எல்.ஏக்களாக பதவி வகிக்க அனுமதிக்கவும் கூடாது என்று கூறியிருந்தார் சாமி.

சாமியின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சாமியின் இந்த விஷமக் கருத்து குறித்து தேசிய சிறுபான்மையினர் ஆணையம் பரிசீலித்தது. பின்னர் சாமி மீது வழக்குத் தொடர முடிவு செய்தது. இந்த நிலையில் மூத்த வழக்கறிஞர் ஆர்.கே.ஆனந்த் சாமி மீது டெல்லி போலீஸில் புகார் கொடுத்தார்.

புகாரின் அடிப்படையில் தற்போது டெல்லி குற்றப் பிரிவு போலீஸார் ஐபிசி 153ஏ பிரிவின் கீழ் சாமி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து சாமி கைது செய்யப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza