Monday, July 4, 2011

பணம் பாக்கி:இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விற்பனை நிறுத்தப்படும்-ஈரான்

images
டெஹ்ரான்:எண்ணெய் இறக்குமதி செய்த வகையில் பாக்கியுள்ள தொகை கிடைக்காவிட்டால் இந்தியாவுக்கு சுத்திகரிக்கப்படாத கச்சா எண்ணெய் வழங்குவதை நிறுத்துவோம் என ஈரான் எண்ணெய் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

40 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொகையை இந்தியா ஈரானுக்கு பண பாக்கி வைத்துள்ளது. இத்தொகையை இந்தியாவுக்கு அளிக்க முடியாவிட்டால் கச்சா எண்ணெய் வழங்குவதை நிறுத்த ஆலோசிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என ஈரானின் தேசிய எண்ணெய் கம்பெனியின் தலைவர் அஹ்மத் காலிபானியை மேற்கோள்காட்டி பார்ஸ் செய்தி ஏஜன்சி நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதே வேளையில், இந்தியாவுடனான வர்த்தகத்தை தொடரவே விரும்புவதாகவும் அரசு கட்டுப்பாட்டிலுள்ள எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவிற்கு அடுத்து அந்நிறுவனம் அதிகமாக எண்ணெய் ஏற்றுமதி செய்வது இந்தியாவிற்காகும்.

ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் வங்கிகள் மூலமாக ஈரானுக்கு இந்தியா பணம் அளித்துவந்தது. ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் தடையை தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த வழி தடைப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் 200 கோடி டாலர் இந்தியா ஈரானுக்கு அளிக்கவேண்டியுள்ளது என எண்ணெய் அமைச்சக அதிகாரிகள் பத்திரிகைகளிடம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் நிர்பந்தத்தை தொடர்ந்து இந்திய வங்கிகள் வழியாக பணம் அளிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்திவைத்துள்ளது. இந்தியாவின் 12 சதவீத சுத்திகரிக்கப்படாத எண்ணெயை அளிப்பது ஈரான் ஆகும். கடந்த டிசம்பர் முதல் தினந்தோறும் நான்கு லட்சம் பேரல் சுத்திகரிக்கப்படாத எண்ணெயை ஈரான் கடனாக அளித்துவருகிறது.

ஈரானுக்கு ஒவ்வொரு ஆண்டும் அளிக்கப்படவேண்டிய 1300 கோடி டாலர் தொகையை அளிக்க வெளிநாட்டு வங்கிகள் அனுமதிப்பதில்லை. அதே வேளையில், பணத்திற்கு பதிலாக அதற்கு ஈடான மதிப்புடைய தங்கத்தை அளிப்பது குறித்து இந்தியா ஆலோசித்துவருகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza