Monday, July 4, 2011

முஸ்லிம் இனப்படுகொலை ஆவணங்கள்:பல்டியடிக்கும் மோடி அரசு-பொய் கூறுவதாக காங்கிரஸ்

Godhra_riots_case
அஹ்மதாபாத்/புதுடெல்லி:2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடியின் தலைமையிலான பாசிச ஹிந்துத்துவா பயங்கரவாத வெறியர்கள் முஸ்லிம்களை கொடூரமாக கொன்று குவித்து மிகப்பெரிய இனப்படுகொலையை நிகழ்த்தினர். இக்காலக்கட்டத்தின் ஆவணங்களை அழித்துவிட்டதாக மாநில அரசின் வழக்கறிஞர் நானாவதி கமிஷன் முன்பு தெரிவித்திருந்தார்.

இது நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் முக்கிய ஆவணங்கள் பாதுகாப்பாக உள்ளதாக குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது.

ஆவணங்கள் பாதுகாப்பாக உள்ளன. அதற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தற்காலிகமானதும், முக்கியத்துவம் இல்லாததுமான ஆவணங்கள் தாம் சட்டப்படி அழிக்கப்பட்டன என குஜராத் மாநில உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மாநில உளவுத்துறையின் லாக் புக், இனப்படுகொலை நடந்த வேளையில் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் உள்ளிட்ட நிரந்தரமான ஆவணங்கள் அழிக்கப்படவில்லை. அது தற்போதும் கிடைக்கும் என அமைச்சகம் கூறியுள்ளது.

2002 ஆம் ஆண்டைய  குஜராத் மாநில உளவுத்துறையின் ஆவணங்களை கோரி மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் நானாவதி கமிஷனை அணுகியிருந்தார்.அப்பொழுது அரசு தரப்பு வழக்கறிஞர் ஆவணங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தார் என செய்திகள் வெளியாகின.

ஆனால், தற்போது அரசு தரப்பு வழக்கறிஞர் எஸ்.பி. வக்கீல் கூறியதை பத்திரிகைகள் திரித்து வெளியிட்டதாக குஜராத் மாநில அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வழக்கு தொடர்பான பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களில் அளித்துள்ளோம்.

கலவரம் தொடர்பாக நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நீதிமன்றங்கள் கோரிய அனைத்து ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளன. அவையெல்லாம் பாதுகாப்பாக உள்ளன என குஜராத் மாநில அதிகாரி கூறுகிறார்.

இதற்கிடையே, மாநில அரசு மற்றும் மூத்த அரசு வழக்கறிஞரின் முரண்பட்ட அறிக்கைக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி. இச்சம்பவத்தில் குஜராத் அரசு மக்களிடம் பொய் கூறுகிறது என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார். இனப்படுகொலை தொடர்பாக அரசு ஏராளமானவற்றை மறைத்துள்ளது என்பதற்கு இது ஆதாரமாகும்.

ஆவணங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக ஒருபுறம் அரசு வழக்கறிஞர் கூறுகிறார். மறுபுறம் உள்துறை அமைச்சகம் இல்லை என கூறுகிறது. அவ்வாறெனில் அரசு முதலில் கூறியது பொய்யாக இருக்க வேண்டும். அல்லது இரண்டாவதாக கூறியது பொய்யாக இருக்க வேண்டும்.

ஆவணங்கள் அழிக்கப்படவில்லையெனில் அவை எங்குள்ளன? ஆவணங்கள் வழக்கின் சட்ட நடவடிக்கைகளின் பகுதியாக அமைந்துள்ளனவா? இதனை நாடு அறிய விரும்புகிறது என சிங்வி தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza