Saturday, July 30, 2011

‘மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு’ சட்ட மசோதாவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு

 
jayalalithaசென்னை:மத வன்முறையை தடுக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு சட்ட மசோதாவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

 மத்திய அரசின் இந்த சட்ட மசோதா மாநில அரசுகளின் உரிமையில் தலையிடும் வகையில் அமைந்துள்ளது என்றும், ஜனநாயக விரோதமான இந்த சட்ட மசோதாவை அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு மசோதாவை தாக்கல் செய்ய உள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த மசோதாவுக்கு அதிமுக சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மசோதாவின் நோக்கம் மத வன்முறையை தடுப்பது என்று கூறப்பட்டிருந்தாலும் இந்த மசோதாவின் நோக்கமே தெளிவில்லாமல் இருக்கிறது. இந்த மசோதாவை மேலோட்டமாக பார்க்கும்போதே அது உள்நோக்கம் கொண்டது என்பது புரிகிறது. மசோதா அதன் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அமையவில்லை.

மிகத் தீவிரமாக மத உணர்வுகளை வெளிப்படுத்த அனுமதிக்க முடியாது என்றாலும், இந்தியா போன்ற பல்வேறு மத மற்றும் மொழி பேசும் மக்களை கொண்ட நாட்டில் மத மற்றும் திட்டமிட்ட வன்முறைக்கு இடமில்லை என்பதையும் மதச்சார்பற்றவர்கள் ஒப்புக் கொள்வார்கள். ஆனால், இந்த மசோதாவானது அதன் நோக்கத்தை சிறிதளவு கூட நிறைவேற்ற முடியாததாக உள்ளது.

அது மட்டுமல்லாமல் இந்த மசோதா பல்வேறு பிரிவினரிடையே நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி விமர்சன, எதிர்ப்பு கருத்துக்களை தெரிவிக்கும் பிரிவினர் மீது அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த வழி செய்யும். சுருக்கமாக சொல்வதானால் மத வன்முறையை தடுக்க முயலும் இந்த மசோதா முன்வைக்கும் தீர்வு, நோயை விட மோசமாக உள்ளது. இந்த மசோதாவின் மூன்றாவது பிரிவில் ஒரு பிரிவினருக்கு எதிரான துவேஷமான சூழ்நிலைக்கான விளக்கம், மற்ற விஷயங்களோடு ஒருவரது அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த மசோதாவின் ஷரத்துக்களை விரும்பிய வகையில் அர்த்தப்படுத்திக் கொள்ளும் வாய்ப்புள்ளது. எந்த சட்டமும் அதன் நோக்கத்தில் தெளிவானதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது. இந்த மசோதா மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தொடர்பான குற்றங்களை பட்டியலிட்டுள்ளது.

8வது பிரிவில் துவேஷ பிரச்சாரத்திற்கான வரையறையில் துவேஷத்தை தூண்டக் கூடிய அல்லது பரப்பக்கூடிய தன்மை கொண்டவை என்று கருதக் கூடிய வகையில் தகவல்களை வெளியிடுபவர்கள் அல்லது விளம்பரம் அல்லது சுவரொட்டிகளை வினியோகிப்பவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரையறையும் தெளிவில்லாமல் இருக்கிறது. அதிகாரத்தில் உள்ளவர்கள் தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்பு கொண்டதாக உள்ளது.

இந்த மசோதாவின் 13வது பிரிவு கடமையை செய்யத் தவறியது பற்றி வரையறுக்கும் போது மத மற்றும் திட்டமிட்ட வன்முறையை தடுக்கும் வகையில் பொது ஒழுங்கை பராமரிக்க வேண்டிய அரசு அதிகாரிகளின் கடமையை விவரிக்கும் 18வது பிரிவை குறிப்பிடுகிறது.

மேலும் மத மற்றும் திட்டமிட்ட வன்முறை நடைபெற வாய்ப்பு இருப்பது பற்றி தகவல் பெற்று மத வன்முறையை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க தவறுவதும், கடமையை நிறைவேற்ற தவறியதாக கருதப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி மூத்த அதிகாரிகள் தங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டலாம் என்பதால் இது மிகவும் ஆபத்தானதாகும்.

மசோதாவின் 14வது பிரிவின்படி கீழே உள்ள அதிகாரிகள் தங்கள் கடமையை நிறைவேற்ற தவறினால் தலைமை அல்லது மேற்பார்வை நிலையில் உள்ள அதிகாரி இந்த சட்டம் அல்லது வேறொரு பொருந்தக் கூடிய சட்டத்தின் கீழ் தனது பொறுப்பை நிறைவேற்ற தவறியதாக கருதப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. உயரதிகாரிகள் தங்கள் பொறுப்புக்களை தட்டிக்கழிக்க முடியாது என்றாலும் மூத்த அதிகாரிகளை குற்றஞ்சாட்டுவது சரியாக இருக்காது.

இந்த மசோதாவின் 20வது பிரிவு மாநிலங்களின் சுயாட்சி மீதான நேரடி தாக்குதலாக அமைந்துள்ளது. இந்த பிரிவானது அரசியல் சாசனம் மற்றும் சர்க்காரியா கமிஷன் உள்ளிட்ட பல்வேறு கமிஷன்களின் பரிந்துரைக்கு எதிராக உள்ளது. இந்த பிரிவானது மத மற்றும் திட்டமிட்ட வன்முறை அரசியல் சாசனத்தின் 355வது பிரிவின்கீழ் குழப்பமாக பொருள் கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது எப்போதுமே மாநில அரசுகளின் தலை மீது தொங்கிக் கொண்டிருக்கும் கத்தி போன்றது. மேலும் இந்தப் பிரிவானது இத்தகைய வன்முறைகளை தடுக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த பிரிவின் கீழ் மத்திய அரசுக்கான அதிகாரமானது மாநில அரசுகளின் சுயாட்சி கொள்கைக்கு எதிரானது. இந்த மசோதாவின் கீழ் மாநில அரசுகளுக்கு இந்த சட்டத்தின் கீழான குற்றங்களில் சிறப்பு அரசு வழக்கறிஞர்களை நியமிப்பதற்கான அதிகாரம் கூட இல்லை.

மசோதாவின் 8வது அத்தியாயம் மத வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் பொறுப்பு மாநில அரசுகளுக்கு உரியது என்று குறிப்பிடுகிறது.

சட்டம்ஒழுங்கை பராமரிப்பதில் இவை மாநில அரசுகளின் வழக்கமான கடமையாகும். இவற்றின் மீது மத்திய அரசு தனது மேற்பார்வை அதிகாரத்தை செலுத்த முயல்கிறது. இந்த மசோதாவானது அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள், மேல் அதிகாரிகளின் உத்தரவை ஏற்று நடக்காமல் இருப்பதை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால் குழப்பம் ஏற்பட்டு சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் நிலை உள்ளது. மத வன்முறையை தடுக்க முயற்சி எனும் போர்வையில் இந்த சட்டமானது மாநில அரசுகளை விலக்கி அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசிடம் குவிக்கும் முயற்சியை தவிர வேறொன்றுமில்லை.

அதுமட்டுமல்லாமல் மாநில அரசுகளை எப்போதுமே டிஸ்மிஸ் செய்யப்படும் அபாயத்தில் வைத்திருக்க முயல்கிறது. இவற்றின் காரணமாக இந்த சட்டமானது தேவையில்லாதது. இந்த சட்டத்தின் பல்வேறு நோக்கங்கள் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

குறிப்பாக இந்த சட்டத்தின் கீழ் வானளாவிய அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதால் அவை தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது. மத மற்றும் திட்டமிட்ட வன்முறையை கையாள்வதில் மாநிலங்களை முற்றாக விலக்கி அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசிடம் இந்த சட்டம் குவிக்க முயல்கிறது.

நீதிபதி சர்க்கார்யா கமிஷனில் குறிப்பிடப்பட்டுள்ள மத்தியமாநில அரசு உறவுகள் தொடர்பான நெறிமுறைகளுக்கு இது எதிராக அமைந்துள்ளது. அரசியல் சாசன பிரிவு 356யை இஷ்டம் போல பயன்படுத்துவதற்கான இன்னொரு வழியாகவே இந்த சட்டம் அமைந்துள்ளது.

இந்த மசோதா சட்டமானால் மத்தியில் ஆட்சியில் உள்ளவர்கள், எதிர்க்கட்சியால் ஆளப்படும் மாநிலங்களில் குழப்பத்தை ஏற்படுத்த சதி செய்யும் அபாயம் உள்ளது. வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மாநில அரசு விமர்சனத்திற்கு உள்ளாகும். அதே நேரத்தில் வன்முறை வெடித்ததாக கூறி இந்த சட்டத்தின் கீழ் மாநில அரசை கலைக்கும் வாய்ப்பு உள்ளது.

உலக வல்லரசாக உருவாகும் நம் தேசத்தின் நலனுக்கு இத்தகைய நிலை ஏற்றதல்ல. இந்த சட்டமானது ஜனநாயக விரோதமான மற்றும் பாசிச தன்மை கொண்டதாகும். அரசியல் சாசனத்தின் அடிப்படைக்கே எதிரானது. மத்திய அரசு உள்நோக்கத்தோடு இந்த சட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் அறிமுக நிலையிலேயே இந்த சட்ட மசோதாவை முழுமூச்சுடன் எதிர்த்து இதனை நிறைவேறாமல் தடுக்க வேண்டும். கட்சி வேறுபாடின்றி அனைத்து கட்சிகளும், தலைவர்கள், அறிஞர்கள் மற்றும் ஊடகங்கள், இந்த சட்ட மசோதாவை முழுமூச்சுடன் எதிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza