Saturday, May 28, 2011

ஏற்காட்டில் மாபெரும் மலர் கண்காட்சி!!

 சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 36வது கோடைவிழா மலர் கண்காட்சி 27.05.2011 அன்று தொடங்கியது. மலர் கண்காட்சியை கண்டு களிக்க நேற்று சுற்றுலா பயணிகள் திரளாக வந்திருந்தனர். ஏரியில் படகு சாவரி செய்யவும் கூட்டம் அதிகமாக இருந்தது.

ஏற்காட்டிற்கு அனைத்து தரப்பு மக்கள் மட்டுமன்றி அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா மாநிலத்திலிருந்து சுற்றுலா வருகின்றனர். கண்காட்சியில் சிறப்பு அம்சமாக 15 ஆயிரம் மலர்களைக் கொண்டு கிரிக்கெட் உலக கோப்பை வடிவ மலர் அலங்காரம் அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 200 வடிவங்களில் மலர் அலங்காரம் அழகுடன் அமைக்கப்பட்டுள்ளது. 100 க்கும் மேற்பட்ட மலர் வகைகள் சுமார் 10 ஆயிரம் பூந்தொட்டிகளில் பல வண்ணங்களில் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

மலர் கண்காட்சியில் காய்கறிகளைக் கொண்டு பறவைகள், மலர்கள், சிங்கம் மற்றும் மனித உருவம் போன்ற காய்கறி அலங்காரங்களும், உலர் மலர் வகை அலங்காரங்களும் பொதுமக்கள் பிரமிக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மலர் காட்சியின் நுழைவு வாயிலில் பலவகை பழங்களைக் கொண்டு தோட்டக்கலை அலங்கார வளைவும் மிக அழகாக அமைக்கப் பட்டுள்ளது.

மேலும் போன்சாய் வகை செடிகள், பழவகைகள், காய்கறி வகைகள், வாசனை பயிர்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களின் கருத்துக் காட்சியும் தோட்டக்கலைத்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் மலர் காட்சியினை சுமார் 50ஆயிரம் பேர் பார்வையிட்டதின் மூலம் சுமார் ரூ.4 லட்சத்து 52 ஆயிரத்து 760 நுழைவு கட்டணமாக பெறப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் இம்மலர் கண்காட்சியினை பார்வையிட சுமார் 1 லட்சம் பேர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza