Tuesday, May 31, 2011

சுடச்சுடக் கிடைக்கும் இட்டிலியும் சாம்பாரும்!!

உலகின் மக்கள்தொகையில் 500 மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கிறார்களாம்.ஒரு வருடத்தில் பட்டினியால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 15 மில்லியன் .உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  உலகின் மூன்றில் ஒருபங்கு மக்கள் மிதமிஞ்சிய ஊட்டமுள்ளவர்கள் என்றும்,
மற்றுமோர் பிரிவினர் நிறைவு பெற்றவர்கள் என்றும், மூன்றாம் பிரிவினர் பட்டினியால் உயிரிழந்து கொண்டிருப்பவர்கள் என்றும் தெரிவிக்கிறது.
 
நீங்கள் இதைப்படித்து முடிப்பதற்குள் 200 பேர் பட்டினியால் செத்திருப்பர்.
4 மில்லியன் இது இந்த வருட முடிவிற்குள் நிகழப்போகும் பட்டினிச்  சாவுகளின் எண்ணிக்கை.
இதில் கொடுமையான விஷயம் இவர்களில் மூன்றில் ஒன்று 5 வயதிற்குட்பட்ட குழந்தை..

உலகின் உணவுப்பற்றாக்குறை சதவீதத்தில் 50 % பேர் இந்திய துணைக்கண்டத்தில் வசிப்பவர்கள்.
 
40%பேர் ஆப்பிரிக்காவிலும் ஆசியாவின் மற்ற பகுதிகளிலும் வசிப்பவர்கள்.
ஒவ்வொரு 3.5 வினாடிக்கும் ஒரு உயிர் போகிறது பட்டினியால் .
உலகின் ஆபத்தான பணிகளிலும் மனிதன் ஈடுபடுவது ... ஒருவேளை சோற்றுக்காக.
 
கதிர்வீச்சு அபாயமிக்க சுரங்கப்பணிகளிலும், உயிருக்கு உத்தரவாதமில்லாத சூழ்நிலைகளிலும் பணியாற்றுவது சோற்றுக்காக.
 
முன் சொன்னது போல்,  கரைக்கு வந்தால் மீன் பிணம்,  வராவிட்டால் மீனவன் பிணம்... தெரிந்தும் போகிறானே எதற்கு ?

எல்லாம் ஒருவேளை சோற்றுக்கு. .. இதில் வரும் அனைத்தும் வெறும் எண்கள் மட்டுமா?  எண்ணிப்பாருங்கள் ...அத்தனையும் உயிர்கள்.!!
"தனியொருவனுக்கு உணவில்லையேல் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் " என்றான் பாரதி .
 
நாங்கள் அழிக்கக் கேட்கவில்லை ...ஆக்கம் வேண்டுகிறோம்.
"இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடு ..ஆயினும் பட்டினிச்சாவுகள் அதிகம் ஏன் ?
 
உள்ளவர்களுக்கு ஒன்றும் , இல்லாதவர்களுக்கு வேறொன்றும் என இரண்டு இந்தியாவா ?"
இதை நான் கேட்கவில்லை..இந்திய உயர்நீதிமன்றம் அரசைப்பார்த்துக் கேட்டது.
 
பணம் படைத்தவன் கொலைகாரனோ.. கொள்ளைக்காரனோ.. சிறையிலடை பட்டாலும் ..சுடச்சுடக் கிடைக்கும் இட்டிலியும் சாம்பாரும் !!
இல்லாதவன் பாடு.. எப்போதும் போல..அம்மா தாயே.. அம்மா தாயே.. உங்களைத்தான் கேட்கிறோம்..
 
தீர்க்கவேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்க..  முந்தைய அரசு கொண்டுவந்தது என்பதற்காக கல்வித்திட்டத்தை மாற்றுவதும்..சட்டமன்ற கட்டிடத்தை மாற்றுவதும் தேவையா ?
 
சமச்சீர் கல்வி எதற்கு பயன்பட்டதோ.. இல்லையோ கிராமத்துப் பிள்ளைகள் ஆசிரியருடன் இணக்கமான சூழலில் படிக்க மிகப்பயன்பட்டது.
உங்க ஆட்சியதிகாரத்தில் நன்மைசெய்வதை விட்டுவிட்டு ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் உதைச்சு விளையாட நாங்கதான் கிடைச்சோமா ?

தலைதனையன் சொன்னதுபோல இன்னும் நான்கு வருடங்கள் தான்.. இப்போ ஒருத்தர ஓய்வெடுக்க அனுப்பியிருக்கோம் ..அவருக்குத் துணையாக நீங்களும் போக வேண்டியிருக்கும்.
 
" உலகில் பாதிப்பேர் வறுமைக்கோட்டின் கீழ் வசிப்பவர்களாம்
பாவம் அவர்கள் வசித்துவிட்டுப்போகட்டும்..  அதுவும் இல்லையென்றால் வேறு எதன்கீழ் வசிப்பார்கள் ?"  ஒரு கவிஞனின் வேதனைவரிகள் மனதில்வருகிறது .
 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza