Monday, March 28, 2011

மதுரை முஸ்லிம் ஜமாத் தலைவர்கள் ஒட்டுமொத்த தேர்தல் புறக்கணிப்பு


கடந்த 1.03.2011 அன்று மதுரை ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் மாட்டுத்தலை வீசப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் கடந்த 08.03.2011 முதல் அப்பாவி முஸ்லிம்களை சட்டவிரோத காவலில் வைத்து 4 நாட்கள் கடுமையான சித்திரவதை செய்து மாட்டுத்தலையை போட்டது நாங்கள்தான் என்று ஒத்துக்கொள்ளுமாறு அடித்து துன்புறுத்தி வாக்குமூலங்களை பொய்யாக தாங்களே எழுதி, கத்திகளை சந்தையில் வாங்கி, ஆதாரங்களை போலியாக தயாரித்து பொய் வழக்கு புனைந்து அப்பாவி முஸ்லிம்கள் 5 நபர்களை சிறையிலடைத்தனர்.

மேற்படி அத்துமீற‌ல் சம்மந்தமாகவும், மததுவேசமாகவும், நடந்து கொண்ட காவல்துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க கோரியும், போடப்பட்டுள்ள பொய் வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்ற ஆவண செய்யக்கோரியும் கடந்த 15.03.2011 அன்று மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரை மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத்தினரும், மதுரையில் உள்ள 90 பள்ளிவாசல்களின் நிர்வாகிகளுடனும் மற்றும் அனைத்து முஸ்லிம் இயக்கத்தினரும் நேரில் சந்தித்து மனு கொடுத்தோம். பின்னர் மேற்படி மனுவை உள்துறைசெயலாளரும், டி.ஜி.பி, ஏ.டி.ஜி.பி, தென்மண்டல ஐ.ஜி., ஆகியோரும் பதிவு தபாலில் அனுப்பினோம். பின்னர் மதுரை மா நகர காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் இது சம்பந்தமாக பல முறை புகார் செய்தோம்.

பின்னர் மேற்படி வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட கோரி மதுரை நெல்பேட்டை அண்ணாசிலை அருகில் மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைமையில் அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் கலந்து கொண்டு அமைதியான முறையில் அடையாள ஆர்ப்பாட்டம் நடத்தினோம். பின்னர் கடந்த 23.03.2011 அன்று மீண்டும் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு பரிந்துரை செய்ய கோரினோம்.

கடந்த 22.03.2011 அன்று பல்வேறு மனித உரிமை அமப்புகள் ஒன்றிணைந்து உண்மை கண்டறியும் குழு ஒன்றை பேராசிரியரும் பிரபல எழுத்தாளருமான அ. மார்க்ஸ் அவர்கள் தலைமையில் உருவாக்கி பல்வேறு உண்மைகளை கண்டறிந்து கடந்த 23.03.2011 அன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையிலும் மேற்படி வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டறிய சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் மேற்படி வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்ற இதுவரை உத்தரவிடாததால் மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைமையில் உள்ள 90 ஜமாத்தைச் சேர்ந்த முஸ்லிம்களும், அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஒன்றினைந்து எதிர்வரும் ஏப்ரல் 13ம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டுமொத்தமாக மதுரை வாழ் முஸ்லிம்களை அனைவரும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza