Saturday, January 29, 2011

அரசின் வேலைவாய்ப்பு முகாமில் அலைக்கழிக்கபட்ட பட்டதாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிய பெண்கள்

கீழக்கரையில் நடந்த வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்புக்கு மாறாக நடந்ததால், ஆயிரக்கணக்கான பட்டதாரி பெண்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். அரசு சார்பில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் வேலை வாய்ப்பு அளிக்கும் சிறப்பு முகாமுக்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை பதிவு நடந்தது. 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்தனர். இதன் முகாம் கீழக்கரையில் நேற்று நடந்தது. காலை 5 மணி முதல் பெண்களும், இளைஞர்களும் குவிந்தனர். சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆண்களுக்கும், சதக் இன்ஜினியரிங் கல்லூரியில் பெண்களுக்கும் நடந்தது. 58 தனியார் நிறுவனங்களும் கலந்து கொண்டன. எதிர்பார்ப்புடன் வந்த பட்டதாரிகள் அங்கு தெரிவிக்கப்பட்ட சம்பளத்தை அறிந்ததும் அதிர்ச்சியடைந்தனர்.இதையறிந்த ஏராளமான பெண்கள் முகாமில் பங்கேற்காமலே பெற்றோருடன் வீடு திரும்பினர். முகாமில் கலந்து கொண்ட பட்டதாரிகளில் இந்திராணி (எமனேஸ்வரம்)கூறியதாவது : இந்த முகாமில் எவ்வித பலனும் இல்லை. 4000 ரூபாய் சம்பளத்திற்கு டெய்லரிங் நிறுவனத்திற்கு அழைக்கின்றனர். இரண்டு நாள் அலைந்து பெயர் பதிவு செய்தும் பயனில்லை. இதை நடத்தியதால் அரசுக்குதான் கெட்டபெயர் .இது ஒரு தேர்தல் ஸ்டண்ட். ரிஸ்வான் (பரமக்குடி): முகாமுக்காக பதிவு செய்யும் போது கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற்றமடைந்து நிற்கிறோம்.பட்டதாரிகளுக்கு இங்கு வேலை இல்லை. மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்குவதாக தெரிவித்தனர். இரண்டு மாடி ஏறி இறங்கியது தான் மிச்சம். எவ்வித பலனும் இல்லை. மாற்றுத்திறனாளிகளையும் தேவையில்லாமல் அலைக்கழிப்பு செய்துள்ளனர், என்றார். மிகக் குறைவானவர்களே வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கோமகன் : 18 ஆயிரத்து 730 பேர் பங்கேற்றனர். பெண்கள் மட்டும் அதிகபட்சமாக 10 ஆயிரத்து 746 பேர் வந்திருந்தனர். 4665 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 506 பேர் காத்திருப்போர்பட்டியலில் உள்ளனர். 10, பிளஸ் 2 மற்றும் டிப்ளமோ தகுதியுடையவர்களை எடுக்கும் கம்பெனிகளே அதிகம் வந்திருந்தன. என்றார்.
உதயசூரியன் சின்னத்துடன் தி.மு.க.,எம்.பி.,உதயசூரியன் சின்னம் வைக்கப்பட்ட வேன் சகிதமாக முகாம் நடக்கும் இடத்திற்கு வந்த ரித்தீஷ்குமார் எம்.பி., வேனில் நின்றபடி பேசியது தேர்தல் பிரசாரத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது போல் இருந்தது.இதை "தினமலர்' நிருபர் படம் எடுப்பதை அறிந்ததும், வேனின் மேல் இருந்த உதய சூரியன் சின்னம் பேப்பர் கொண்டு மறைக்கப்பட்டது. ராமநாதபுரத்தில் இருந்து இயக்கப்பட்ட அரசு பஸ்களில் சிறப்பு பஸ் என்ற பெயரில் ஆறு ரூபாய்க்கு பதிலாக பத்து ரூபாய் வசூலித்தனர்.

செய்தி : தினமலர்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza