Wednesday, October 13, 2010

இந்தியாவுடனிருப்பதே கஷ்மீரிகளின் விருப்பம் - ஜம்மியத்துல் உலமா

தேவ்பந்த்,அக்12:கஷ்மீர் மக்களின் விருப்பம் இந்தியாவுடன் இணைந்திருப்பதே என ஜம்மியத்துல் உலமாயே ஹிந்து கூறியுள்ளது. கஷ்மீர் மக்களை இந்திய முஸ்லிம் சமூகத்திலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது என்றும் திட்டவட்டமாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

பிரபல இஸ்லாமிய மார்க்க கல்வி கலாசாசலையான தேவ்பந்த் தாருல் உலூமின் மார்க்க அறிஞர்கள் தலைமை வகிக்கும் அமைப்பான ஜம்மியத்துல் உலமாயே ஹிந்தின் கஷ்மீர் பிரச்னை குறித்த மாநாடு உத்தரப் பிரதேசத்தில் உள்ள தேவ்பாண்ட் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அம்மாநாட்டில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன் விவரம்:
கஷ்மீரில் அமைதியைக் காக்க மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன. சட்டம்,ஒழுங்கை நிலைநாட்டத் தவறியதால்தான் நிலைமை இந்த அளவு மோசமானது. நாம் எல்லாம் இந்தியப் பிரஜைகள் என்ற வகையில் உங்களது (கஷ்மீர் மக்கள்) வருத்தங்களையும் கவலையையும் பகிர்ந்து கொள்கிறோம். உங்களது நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். அதே வேளையில் கஷ்மீர் மக்களின் நலன் பிற இந்திய முஸ்லிம்களின் நலன்களில் இருந்து வேறுபட்டது என்று ஒருபோதும் கருதக் கூடாது. இந்திய முஸ்லிம்களிலிருந்து கஷ்மீர் முஸ்லிம்களைப் பிரித்துப் பார்க்கக் கூடாது.

இந்திய அரசமைப்புச் சட்டத்துக்குட்பட்ட கஷ்மீர் மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.

ராணுவ சிறப்பு அதிகார சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்.

மக்கள் வசிக்குப் பகுதிகளில் தடைகள் நீக்கப்பட வேண்டும்.

கஷ்மீரில் மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்கவும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காணமல் போனது குறித்து விசாரிக்கவும் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்று மாநாட்டில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

பெரிய குற்றம் இழைக்காத போராட்டக்காரர்களை உடனடியாக விடுவித்துவிட வேண்டும். அதுபோல் போராட்டக்காரர்கள் வன்முறையைக் கைவிட்டு அமைதியான முறையில் கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டு கஷ்மீர் மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண மத்திய அரசுடன் பேச்சு நடத்த கஷ்மீர் தலைவர்கள் முன்வர வேண்டும் என்று ஜமியத் உலாமா ஹிந்த் அமைப்பின் செயலர் நியாஸ் அகமது பாரூக்கி கூறினார்.

இந்த மாநாட்டுக்கு, ஹுரியத் மாநாட்டு கட்சி அழைக்கப்படவில்லை. ஆனால் வேறு சில கஷ்மீர் மார்க்க அறிஞர்கள் பங்கேற்றதாக நியாஸ் அஹ்மத் தெரிவித்தார்.

கஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். அதற்கு மத்திய அரசும் கஷ்மீர் தலைவர்களும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார் பாரூக்கி.

கஷ்மீர் பிரச்னை தொடர்பாக 2-வது மாநாடு டெல்லியில் வரும் அக்டோபர் 31-ம் தேதி நடத்தப்படும். காஷ்மீர் பிரச்னையை ஆராய்ந்து வர எங்கள் அமைப்பின் சார்பில் பிரதிநிதிகள் குழு கஷ்மீருக்கு அனுப்பப்படும் என்றார் அவர்.

அதேவேளையில், ஜம்மியத்துல் உலமாவின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் ஹூர்ரியத் மாநாட்டு கட்சியின் தலைவரான மீர்வாய்ஸ் ஃபாரூக்.

ஜம்மியத்தின் தீர்மானம் குறித்து அவர் கூறியதாவது: "கஷ்மீர் பிரச்சனை என்பது ஹிந்து-முஸ்லிம் பிரச்சனையில்லை, அது ஒரு அரசியல் பிரச்சனை. இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் கஷ்மீரின் பிரச்சனைகள் தீர்ந்துவிடாது.

பலரின் தூண்டுதல் காரணமாகவே ஜம்மியத் இத்தகையதொரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

கஷ்மீர் விவகாரத்தில் அவர்கள் தலையிடாமலிருப்பதுதான் நல்லது." இவ்வாறு மீர்வாய்ஸ் ஃபாரூக் கூறியுள்ளார்.

செய்தி : பாலைவனத் தூது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza