பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக அதிகாரமையங்கள் நாட்டின் பல பாகங்களில் மேற்கொண்டு வரும் அவதூறு, பொய்யான பரப்புரைகளின் போலித்தன்மையை மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்க்கும் வண்ணம் குறிவைக்கப்படும் முஸ்லிம் சமூகம் நீதிக்கான முழக்கம் என்ற தலைப்பில் இன்று (நவ.4) மதுரை மற்றும்
சென்னை மண்டல மாநாடுகள் நடைபெறுகின்றது. மக்களை சந்திப்போம்! உண்மையை சொல்வோம்! என்ற முழக்கத்துடன் இம்மாநாடு நடைபெறுகின்றது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒடுக்கப்பட்ட சமூகங்களை கல்வி, சமூக மேம்பாடு என அனைத்து தளங்களிலும் சக்திப்படுத்த ஜனநாயக வழிமுறைகளில் போராடும் தேசிய அளவிலான ஒரு மக்கள் பேரியக்கமாகும். ஒடுக்கப்பட்ட சமூகங்கள் சக்திபெறுவதை விரும்பாத ஆதிக்க சக்திகள் பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிராக பல அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். உளவுத்துறையிலும், காவல் துறையிலும் உள்ள ஒரு சில வகுப்பு வாத சிந்தனையுடைய அதிகாரிகளும், ஒரு சில ஊடகங்களும் இத்தகைய வதந்திகளை பரப்புவதில் தனி அக்கறை காட்டிவருகின்றனர். இதன் மூலம் ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கான உரிமைப் போராட்டங்களை சீர்குலைக்கின்றனர். அவதூறுப் பிரச்சாரங்களின் நோக்கம், ஒடுக்கப்பட்ட பிரிவினரை சக்திப்படுத்துவதற்காக பாடுபடும் பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிரான சூழ்ச்சியாகும். இது அரசியல் சாசனம் கூறும் மதச்சார்பற்ற ஜனநாயக விழுமியங்களை மறுப்பதாகும்.
ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்திற்கு தடைகளை போட முயற்சிக்கும் இத்தகைய அவதூறுகளுக்கு எதிராக அக்டோபர் 10 முதல் நவம்பர் 10 வரை “பாப்புலர் ஃப்ரண்ட் ஏன்? மக்களை சந்திப்போம்! உண்மையை சொல்வோம்!!” எனும் முழக்கத்துடன் தேசிய அளவிலான பிரச்சாரத்தை மேற்கொள்ள பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. தேசிய அளவில் இப்பிரச்சாரத்தினை பத்து இலட்சம் (ஒரு மில்லியன்) இந்திய கிராமங்கள், நகரங்களுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு அதனடிப்படையில் தமிழகத்தில் முழு வீச்சில் இப்பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கின்றது.
மேலும், சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகளின் விடுதலை செய்யக்கோரியும், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (UAPA) உள்ளிட்ட மக்கள் விரோத கருப்புச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் இப்பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கின்றது.
சென்னையில் நடைபெறும் மாநாட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய துணை தலைவர் M. முஹம்மது அலி ஜின்னா, மாநில தலைவர் A.S. இஸ்மாயீல், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் D. சையத் இப்ராஹிம் உஸ்மானி, SDPI கட்சியின் மாநில பொதுச் செயலாளர் S.M. ரஃபீக் அஹமது ஆகியோர் சிறப்புரையற்ற உள்ளனர்.
மதுரை முனிச்சாலை ஒபுளாபடித்துறையில் மாலை 6.45 மணியளவில் நடைபெறும் மதுரை மண்டல மாநாடு பாப்புலர் ஃப்ரண்டியாவின் மாநில செயற்குழு உறுப்பினரும், மதுரைமண்டல மாநாட்டு ஒருங்கிணைப்பாயருமான எஸ்.பி. முஹம்மது நஸ்ருதீன் தலைமையில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய பொதுச் செயலாளர் கே.எம். ஷரீஃப், மாநில பொதுச்செயலாளர் ஏ. காலித் முஹம்மது, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் ஏ.வி.ஏ. கஸ்ஸாலி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி, நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஏ. பாத்திமா ஆலிமா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கின்றனர்.
வஞ்சிக்கப்பட்டு கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்தினை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்திற்கு அனைவரும் பேராதரவு தரவேண்டும் என, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநிலத் தலைவர், A.S.இஸ்மாயீல் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 21ந்தேதி கோவையிலும், மாநாடு நடத்தப்பட்டது. மேலும் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் இம்மாநாடுகள் நடைபெற்று வருகின்றன.


0 கருத்துரைகள்:
Post a Comment