Wednesday, October 17, 2012

மலாலாவின் மீதான தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா ?


இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதற்காக குரல் கொடுத்த இளம் சமூக சேவகியும் மாணவியுமான மலாலா யூசுப்ஜய் தாலிபான்களால் தாக்கப்பட்டார். உயிருக்கு போராடும் அவ்விளம்பெண் தற்போது இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பாக உலகெங்கும் தாலிபான்களுக்கு எதிராக கண்டனம் வலுத்து வரும் நிலையில் பாகிஸ்தானில் செயல்படும் ஹிஸ்புத் தஹ்ரீர் எனும் அமைப்பு இச்சம்பவத்தின் பின்னால் அமெரிக்காவின் பங்களிப்பு உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளது.


முஸ்லீம்களின் தூதர் முஹம்மது அவர்களை இழிவுபடுத்தி திரைப்படம் எடுத்ததற்கு உலகெங்கும் குறிப்பாக பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. வீதிகளில் போராடிய மக்கள் அமெரிக்காவுக்கு எதிராக கண்டனங்களை எழுப்பியதோடு இனி அமெரிக்கா பாகிஸ்தானில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்த கூடாது என்று கூறினர்.

இச்சூழலில் மீண்டும் எதிர்ப்பின்றி தாக்குதல் நடத்தவும் அமெரிக்காவுக்கு எதிரான சூழலை திசை திருப்பவும் அமெரிக்கா தன்னுடைய கூலி படை தீவிரவாதிகளான ரேமண்ட் டேவிஸ் வலைப்பின்னல் மூலம் மலாலா யூசுப்ஜய்யை கொல்ல முயன்றுள்ளது என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளது.

மலாலா மீதான தாக்குதலுக்கு பிறகு அறிக்கை வெளியிட்ட அமெரிக்க உள்துறை செயலர் விக்டோரியா நூலண்ட் பாகிஸ்தானின் நகரங்களில் எழுந்துள்ள தாலிபான் எதிர்ப்பலை தம்முடைய தாலிபான் வேட்டையை எளிதாக்கும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

source: inneram.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza