Thursday, October 11, 2012

மோடிக்கும் நிலம் அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறது டி.எல்.எப். ?


சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வட்ராவுக்கு டி.எல்.எப். நிறுவனம் மிக மலிவான விலையில் நிலங்களை விற்றுள்ளதாக ஊழலுக்கு எதிரான இந்தியாவின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டி பரபரப்பை உண்டாக்கியுள்ள நிலையில், டி.எல்.எப். நிறவனம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு இலவசமாகவே நிலம் வழங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.

குஜராத் மாநிலம் காந்திநகரின் மிக முக்கியமான பகுதியில் ஒரு இலட்சம் சதுர மீட்டர்கள் (சுமார் 10 இலட்சத்து 76 ஆயிரம் சதுர அடிகள்) பரப்பளவு கொண்ட இடத்தை 2007ஆம் ஆண்டு குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு டி.எல்.எப். நிறுவனம் அன்பளிப்பாகக் கொடுத்துள்ளது.


இதுதொடர்பாக குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் குடியரசு முன்னாள் தலைவர் பிரதீபா பாட்டீலிடம் கடந்த 2011 ஜூன் மாதம் 3ஆம் தேதி மனு ஒன்றை அளித்தனர். அதில் இந்த இடத்தை டி.எல்.எப். நிறுவனத்துக்கு ஏல முறையின்றி ஒதுக்கியதன் மூலம் குஜராத் அரசுக்கு 253 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் உண்மையான இழப்பு 142.28 கோடி ரூபாய் என்றும் கூறப்பட்டுள்ளது.

டி.எல்.எப். நிறுவனத்துக்கு இந்த இடம் சிறப்புப் பொருளாதார மையம் அமைப்பதற்காக வழங்கப்பட்டது. ஆனால் பின்னர் இங்கு தொழில்நுட்ப பூங்கா அமைக்க அனுமதி தருமாறு டி.எல்.எப். குஜராத் அரசை கேட்டுக் கொண்டது. மோடி அரசு 2009ஆம் ஆண்டு இதற்கு அனுமதி அளித்தது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

சதுர அடி 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இடத்தை வெறும் 5 ஆயிரம் ரூபாய்க்கு மோடி அரசு டி.எல்.எப். நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது என்பது காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு.

சோனியா காந்தியையும் மன்மோகன் சிங்கையும் சராமரியாகத் தாக்கிப் பேசி வரும் நரேந்திர மோடி, டி.எல்.எப். நிறுவனம் சோனியாவின் மருமகனுக்கு குறைவான விலையில் மனைகளை ஒதுக்கியது குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza