சென்னை:தமிழகத்தில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் முதல்வர் ஜெயலலிதா மக்களின் அன்றாட தேவைகளான பால் மற்றும் பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளார்.
தமிழக அரசின் இத்தகைய மக்கள் விரோத போக்கை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவ்வமைப்பின் தமிழக தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தொடர்ந்து ஏறிவரும் பெட்ரோல் விலை அதன் எதிரொலியாக ஏற்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை எப்படி சமாளிப்பது என மக்கள் திக்குமுக்காடி கொண்டிருக்கும் வேளையில் மக்களின் தினசரி தேவைகளான பால் மற்றும் பேருந்து கட்டணத்தை உயர்த்தியிருப்பது பகிரங்கமான மக்கள் விரோத மனிதாபிமானமற்ற செயலாகும்.
இந்த விலை உயர்வினால் வழக்கம்போல் பாதிப்பிற்குள்ளாகப் போவது நடுத்தர மக்கள்தான். ஆடு வழங்குகிறேன், மாடு வழங்குகிறேன் என்று சொல்லிவிட்டு மனிதனின் அன்றாட தேவைகளை பன்மடங்கு உயர்த்தியிருப்பது “யானைக்கும் பானைக்கும் சரியாப்போச்சு” என்பது போன்று உள்ளது.
ஏற்கனவே மறைமுகமாக உயர்த்தப்பட்டுள்ள பேருந்து கட்டணத்துடன் இப்போதைய கட்டண உயர்வு, பால்விலை உயர்வு மற்றும் உயரவிருக்கும் மின்கட்டணம் என பொதுமக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி, திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வுகளை வன்மையாக கண்டிக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் உடனே இந்த விலை திரும்பப் பெற வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கின்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:
Post a Comment