Sunday, June 1, 2014

அப்படி என்னதான் இருக்கிறது அந்த ‘370‘ல்?

க்னி நட்சத்திரம் முடிந்துவிட்டதாக நினைக்கிறீர்களா? இல்லை, இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. 5 ஆண்டுகளுக்குக் குறையாமல் இந்(து)த வெப்பம் நீடிக்கும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதியை வழங்கும் இந்திய அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு இனியும் நீடிப்பதா என்ற விவாதத்தை எதிர்பார்த்தது போலவே தொடங்கிவைத்து உக்கிரமான உஷ்ணத்தைக் கிளப்பிவிட்டுள்ளது பா.ஜ.க அரசு.
பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான இணையமைச்சர் ஜிதேந்திர சிங், காஷ்மீர் மாநிலத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370–வது பிரிவின் நிறை, குறைகளை பற்றி விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. 
இந்த பிரச்சினையை, பா.ஜனதா, தொழில்முறையாக அணுகி வருகிறது. காஷ்மீரில் நிறைய சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்தோம். அதில், சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது குறித்து சிலரை சம்மதிக்க செய்து விட்டோம். சம்மதிக்காதவர்களை சம்மதிக்க செய்ய முயற்சி நடந்து வருகிறது“ என்று நெருப்பைப் பற்ற வைத்தார். 370ஐ நீக்கினால் இந்தியாவின் பகுதியாக காஷ்மீர் இருக்காது என்கிறார் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதல்வர் ஒமர் அப்துல்லா 370வது பிரிவை நீக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது என்கிறது பா.ஜ.கவை வழிநடத்தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு.. எக்காரணம் கொண்டும் 370வது பிரிவை நீக்கக்கூடாது என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத்.

காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் குரலும் இதேபோல ஒலிக்கிறது. மாநில சுயாட்சியை வலியுறுத்தும் தி.மு.க போன்ற மாநிலக்கட்சிகள் 370வது சட்டப்பிரிவை ஆதரித்தே வருகின்றன. 370ஐ எதிர்ப்பவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்றவர்கள் தரப்பின் குரலாகவும், அதனை ஆதரிப்பவர்களின் குரல் தேர்தல் களத்தில் இம்முறை படுதோல்வி அடைந்தவர்களின் குரலாகவும் உள்ளது. ‘வென்றவர் சொல்வதே வேதம்’ என்பது மக்களின் மனநிலை. இந்தியாவில்தானே காஷ்மீர் மாநிலமும் இருக்கிறது அதற்கு எதற்கு தனிப்பட்ட சட்டம் எனத் திருவாளர் பொதுஜனத்திடமிருந்தும் குரல்கள் கேட்கின்றன?

இந்தியாவில்தான் காஷ்மீர் இருக்கிறது. ஆனா, அது எப்படி இந்தியாவுக்குள் வந்தது என்பதை இன்றைய திருவாளர் பொதுஜனத்தில் பெரும்பான்மை யானவர்கள் அறியமாட்டார்கள். இந்தியா சுதந்திரம் பெற்றபோது 526 சமஸ்தானங்கள் இருந்தன. இவற்றில் பெரும்பாலானவை இந்தியாவுடன் இணைந்துவிட்டன. இணைய மறுத்த ஹைதராபாத் சமஸ்தானத்தை ராணுவ பலத்தால் இணைத்தார் அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல். காஷ்மீர் சமஸ்தானத்தை இந்து மன்னரான ஹரிசிங் ஆட்சி செய்தவந்தார். அங்கே உள்ள மக்களில் பெரும்பான்மையானவர்கள் இஸ்லாமியர்கள். இதனால் காஷ்மீர், இந்தியாவுடன் இணைவதா, பாகிஸ்தா னுடன் இணைவதா என்ற குழப்ப நிலை நீடித்தது.

பாகிஸ்தானுடன் இணைந்தால் தனி சமஸ்தானத் தகுதியுடன் நீடிக்கலாம் என்றும், இந்தியாவுடன் இணைந்தால் ஏற்கனவே உள்ள மாநிலங்களில் ஒன்றாகி, தனித்தன்மையை இழக்கவேண்டி வரும் என்றும் மன்னர் ஹரிசிங்கிடம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு, தனது பூர்வீகமான காஷ்மீர், இந்தியாவுடன் இணைந்திருக்கவேண்டும் என விரும்பினார். இதனை கௌரவப்பிரச்சினையாகக் கருதினார். காஷ்மீரைத் தன்னுடன் இணைப்பதில் விருப்பம் காட்டிய பாகிஸ்தான் தனது ராணுவத்தை நிலை நிறுத்தியது. இந்தியாவின் உதவியை நாடினார் மன்னர் ஹரிசிங்.

இந்திய எல்லையிலிருந்து இந்திய ராணுவமும், பாகிஸ்தான் எல்லையிலிருந்து அந்நாட்டு ராணுவமும் காஷ்மீருக்குள் ஊடுருவின. காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதியை பாகிஸ்தான் கைப்பற்றிக் கொண்டது. அது சுதந்திர காஷ்மீர் (Azad Kashmir) என்று பாகிஸ்தான் கூறுகிறது. அதனை ஆக்கிரமிப்பு காஷ்மீர் (Pakistan Occupeid Kashmir-POK) என்று இந்தியா கூறுகிறது. பாகிஸ்தான் கைப்பற்றிய பகுதி போக, எஞ்சிய மூன்றில் இரு பங்கு பகுதியை இந்திய ராணுவம் கைப்பற்றிக் கொண்டது. காஷ்மீர் மீதான உரிமைக்கு இருநாடுகளும் போட்டியிட்டன.

இந்த விவகாரம் 1948-ல் ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்றது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 21-4-1948 அன்று தீர்மாணம் (எண் 47) நிறைவேறியது. இதன்படி இருநாடுகளும் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யவேண்டும். ஊடுருவிய பகுதியிலிருந்து ராணுவம் வெளியேறவேண்டும். ஆனால், இது நிறைவேறவில்லை. இந்தியாவும் பாகிஸ்தானும் தனது செயலைச் சட்டப்பூர்வமானது என்று நிரூபிக்க இயலாததால், காஷ்மீர் மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தி தீர்வு காண்பதாக ஐநா சபையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்புகிறார்களா? பாகிஸ்தானுடன் இணைய விரும்புகிறார்களா? அல்லது தனிநாடாகவே இருக்க வேண்டும் என விரும்புகிறார்களா? என்ற மூன்று கேள்விகள் அடிப்படையில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும், ஓட்டெடுப்பின் மூலம் கிடைக்கும் மக்கள் கருத்தை இந்தியாவும் பாகிஸ்தானும் மன்னரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் ஐ.நா. அவையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம். 

காஷ்மீர் இந்தியாவுடன் முழுமையாக இணையவேண்டும் என்கிற நேருவின் கருத்துக்கு ஆதரவாக இருந்தார் மாநில முதல்வரான (அப்போது அதற்கு பிரதமர் பதவி எனப் பெயர்) ஷேக் அப்துல்லா. அவருக்கு ஐ.நா.சபையின் தலையீடு பிடிக்கவில்லை. பொதுவாக்கெடுப்பிலும் ஆர்வமில்லை. நேரு தலைமையிலான இந்திய அரசாங்கமோ பொதுவாக்கெடுப்புக்கு ஒப்புக்கொண்டிருந்தது. ஆனால், பாகிஸ்தான் தன்னுடைய ராணுவத்தை வெளியேற்றினால்தான் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என இந்தியா கூறியது.

நேருவுடன் ஷேக்அப்துல்லா நட்பு பாராட்டுவதாலும், இந்திய ராணுவம் நிலை கொண்டிருப்பதாலும் காஷ்மீர் மக்களால் சுதந்திரமாக வாக்களிக்க முடியாது என பாகிஸ்தான் கூறியது. உலகநாடுகளின் தலையீட்டில் இருதரப்பு ராணுவத்தையும் வெளியேற்றலாம் என்றும் பாகிஸ்தான் தெரிவித்தது. காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை விரும்பவில்லை எனக்கூறி, பாகிஸ்தானின் யோசனையை நிராகரித்த இந்தியா, பொதுவாக்கெடுப்பு என்கிற ஒப்பந்தத்தையும் நிறைவேற்றாமல் கைகழுவியது.


அதே நேரத்தில் காஷ்மீரைத் தக்கவைத்துக்கொள்வதில் இந்தியா முழுமையாகக் கவனம் செலுத்தியது. அதன் விளைவுதான், காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புத் தகுதி தரும் 370வது அரசியல் சட்டப் பிரிவின் உருவாக்கம். இந்த சிறப்புத் தகுதியைப் பெறுவதன் மூலம் காஷ்மீரின் சுயநிர்ணய உரிமையைப் பாதுகாக்கலாம் என நினைத்தார் ஷேக் அப்துல்லா. பொதுவாக்கெடுப்பைத் தவிர்க்க இது நல்ல வழி என நினைத்தது நேரு அரசாங்கம். 1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்த சட்டப் பிரிவு நடைமுறைக்கு வந்தது.


இந்திய அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தற்காலிகமாக சிறப்புத் தகுதியை அளிக்கிறது. இந்த சிறப்புத் தகுதியின்படி இந்திய மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் மட்டுமே பெருமளவில் மாநில சுயாட்சியை கொண்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் மாநில ஆட்சி 6 ஆண்டுகளாகும். 
காஷ்மீர் மக்கள் தங்களுக்கு என்று சிறப்புச்சட்டங்கள் இயற்றி அதன்கீழ் வாழ்கிறார்கள். இதில் குடியுரிமை, சொத்துரிமை, அடிப்படை உரிமைகள் போன்றவை அடங்கும்.
இந்த சிறப்பு சட்ட பாதுகாப்பு காஷ்மீருக்கு மட்டுமல்லாமல், இமாசலபிரதேசம், அருணாசல பிரதேசம், அந்தமான் நிகோபார் தீவு, நாகாலாந்து உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கிற பழங்குடியி னருக்கும் உண்டு.சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இந்திய பாராளுமன்றத்தில் ராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம் ஆகிய துறைகளைத் தவிர்த்து மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்த சட்டமும் ஜம்மு காஷ்மீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி அம்மாநிலத்தில் செல்லாது.

(இந்த சட்டப்பிரிவு பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள விரும்புவோருக்காக அதன் விவரங்கள், கட்டுரையின் இறுதிப்பகுதியில் தரப்பட்டுள்ளது)..
இந்த 370வது பிரிவின் மீது, இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையும் நேரு அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்தவருமான பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் விருப்பம் காட்டவில்லை. ஷேக் அப்துல்லாவுடன் இவ்விவகாரத்தில் அவர் முரண்பட்டிருந்தார்.

பிரதமர் நேருவின் நம்பிக்கைக்குரியவரும் அவரது அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்தவரும், காஷ்மீர் மகாராஜாவான ஹரிசிங்கின் முன்னாள் திவானுமான தமிழகத் தைச் சேர்ந்த கோபால்சாமி அய்யங்கார்தான் இச்சட்டப்பிரிவை வடிவமைப்பதில் முன்னின் றார். உள்துறை அமைச்சர் பட்டேலின் ஒத்துழைப்பையும் கோபால்சாமி அய்யங்கார் பெற்றார். இதன் காரணமாக, 370வது சட்டப்பிரிவு நிறைவேறியது.

மேலும், இந்தியாவுக்குத் தனியாக அரசியல் சாசனம் இருப்பது போல் காஷ்மீருக்குத் தனியாக அரசியல் சாசனம் உருவாக்கிக் கொள்ள இந்திய அரசு ஒப்புக்கொண்டு அதன் படி காஷ்மீருக்குத் தனி அரசியல் சாசனச் சட்டம் உருவாக்கப்பட்டு 17-11-1956ல் நிறைவேற்றப்பட்டது. இது, 26-1-1957ல் இந்தியாவின் 8வது குடியரசு நாளில் நடைமுறைக்கு வந்தது. காஷ்மீருக்கெனத் தனி தேசியக்கொடியும் அமைத்துக்கொள்ள சட்டம் அனுமதித்தது. அதன்படி, காஷ்மீர் தேசியக்கொடியும் உருவானது.(விவரங்கள் கட்டுரையின் இறுதியில் உள்ளன)

பொது வாக்கெடுப்பு நடத்தாமல் காஷ்மீரைத் தக்கவைத்துக் கொள்ள விரும்பிய இந்தியா, எக்காரணம் கொண்டும் காஷ்மீரை இழந்துவிடக்கூடாது என நினைத்ததால்தான் சிறப்புத் தகுதி வழங்கும் 370வது பிரிவுக்கு வழி வகுத்தது. 1974ஆம் ஆண்டு போடப்பட்ட இந்திராகாந்தி-ஷேக் அப்துல்லா ஒப்பந்தத்திலும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவின்படி ஜம்மு-காஷ்மீரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. எனினும், இதனை மாற்று வழிகளில் அடிக்கடி மீற முயற்சிப்பது இந்தியத் தரப்பின் வழக்கமாக இருக்கிறது. பாதுகாப்பு என்ற பெயரில் அளவுக்கதிகமாக ராணுவத்தைக் குவிப்பது, மாநில அரசைக் கலைத்துவிட்டு குடியரசுத்தலைவர் ஆட்சியை அமைப்பது, தீவிரவாதிகளை ஒடுக்குவது என்ற பெயரில் இளைஞர்களை வேட்டையாடுவது, பெண்களை பாலியல் கொடுமைகளுக்குள்ளாக்குவது என 370வது பிரிவுக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகள் காஷ்மீரில் அதிகம்.

சிறப்புத் தகுதியை வழங்கும் 370வது பிரிவினால் காஷ்மீர் மக்களுக்கு நேரடிப் பலன் தரும் அம்சங்கள் சில மட்டுமே. அவற்றில் முக்கியமானது, காஷ்மீரிகளைத் தவிர வேறுயாரும் அங்குள்ள நிலங்களை வாங்க முடியாது என்பதாகும். இதனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மலிவு விலையில் நிலத்தை தாரை வார்க்கும் புதிய பொருளாதாரக் கொள்கையின் முயற்சி அங்கு பலிக்கவில்லை. அதேநேரத்தில், காஷ்மீரில் நிரந்தரமாக வாழ்பவர்களுக்கே நிலம் உரிமை என்பதால், வெளிமாநிலத் தவரைத் திருமணம் செய்துகொள்ளும் காஷ்மீர் பெண்களுக்கு நிலம் தொடர்பான சொத்துகளில் உரிமை இல்லை என மறுக்கப்பட்டது. எனினும், வெளிமாநிலப் பெண்களைத் திருமணம் செய்துகொள்ளும் காஷ்மீர் ஆண்களுக்கு நிலமும் அதனைச் சார்ந்த சொத்துகளும் உரிமையுடையனவாக இருந்தன.

இந்தப் பாலின பாகுபாட்டுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், 2002 ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீர் மாநில உயர்நீதிமன்றத்தின் முழு அமர்வு வழங்கிய தீர்ப்பின் மூலம், வேறு மாநிலத்தைச் சேர்ந்ததவரைத் திருமணம் செய்துகொண்டாலும் காஷ்மீர் பெண்களுக்கான சொத்துரிமை நீடிக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் ஏன் இந்த சிறப்புத் தகுதி என்று பொதுவாகக் கேட்கப்பட்டாலும், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் சிலவற்றுக்கும் அந்தந்த மாநிலங்களின் தன்மைக்கேற்ப இதுபோல சிறப்புத் தகுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சாசனத்தின் 371வது பிரிவின்படி மகாராஷ்ட்ராவின் விதர்பா, மரட்வாடா, குஜராத்தின் சவுராஷ்ட்ரா, கட்ச் ஆகிய பகுதிகளுக்கும் வளர்ச்சி நோக்கத்தின் அடிப்படையில் சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. 371.ஏ பிரிவு நாகலாந்தில் உள்ள ஒரு மாவட்டத்திற்கும், 371 ஜே பிரிவு ஹைதராபாத்துக்கும் சிறப்புத் தகுதிகளை வழங்குகிறது.

நமது அரசியல் சாசனத்தின் தொடக்கத்திலேயே, “இந்தியா, அதாவது பாரதம் பல மாநிலங்களின் ஒன்றியம்’ (INDIA that is Bharat, shall be a Union of States) என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் மொழி,இனம், பண்பாடு, மக்களின் வாழ்க்கைமுறை இவற்றின் அடிப்படையில் அவர்களின் உரிமைகள் காக்கப்பட சில சிறப்பு சட்டப்பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்துத்வா என்கிற நெ(வெ)றியைத்தவிர வேறெதுவும் இந்த மண்ணில் இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் செயல்படும் பா.ஜ.கவும் அதன் மூளையான ஆர்.எஸ்.எஸ்ஸூம் காஷ்மீர் மாநிலத்திற்குத் தரப்பட்டுள்ள சிறப்புத் தகுதியை நீக்குவதற்கான முதற்கட்ட முயற்சிகளை, இத்தகைய விவாதங்கள் மூலம் தொடங்கியுள்ளன. பதவியேற்ற இரண்டாம் நாளிலேயே தேசிய அளவிலான இத்தகைய சர்ச்சை உருவாகியிருப்பது குறித்து 48 மணி நேரம் வரை பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து எந்த வார்த்தையும் வெளிப்படவில்லை. (இக்கட்டுரை பதிவேறும்வரை அவர் எதுவும் தெரிவிக்கவில்லை) குஜராத் கலவரத்தின்போதே இரண்டு நாட்கள் கண்டுகொள்ளாமல் இருந்து, அதன்பின் ‘அமைதி’யை உருவாக்கிய வளர்ச்சியின் நாயகராயிற்றே அவர்! காஷ்மீரிலும் ‘அமைதி’யை நிலைநாட்டக்கூடும்.
370 வது பிரிவு கூறுவது என்ன?

370. (1) இந்த அரசியல் சாசனத்தில் யாது கூறப்பட்டிருப்பினும்

அ) 238 ஆவது கோட்பாட்டில் உள்ளவற்றை ஜம்மு நாடாளுமன்றத்திலுள்ள அதிகாரம்

(ஆ) அந்த மாநிலம் சம்பந்தமாக சட்டம் இயற்றுவத்ற்கு நாடாளுமன்றத்திலுள்ள அதிகாரம்

(1) அந்த மாநிலத்தைக் குடியேற்ற நாடான இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளும் போது எழுதப்பட்ட ஆவணத்தில் அந்த மாநிலம் பற்றிக் குடியேற்ற நாடான இந்தியாவுக்குச் சட்டம் இயற்றுவதற்கான அதிகாரமுள்ளதாகக் குறிப்பிடப்பட்ட விவகாரங்களுக்கும் அதோடு ஒத்திருக்கும் விவகாரங்களுக்கும் மத்தியப் பட்டியலிலும் மத்திய மற்றும் மாநிலப் பட்டியலில் இருக்கின்றவை எனக் குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்படும் விவகாரங்கள் பற்றி அந்த மாநில அரசைக் கலந்தாலோசித்த பின்னரும்

(2) அந்த மாநில அரசின் ஒப்புதலுடன் குடியரசுத் தலைவர் தம் உத்தரவில் குறிப்பிடத்தக்க அத்தகைய பட்டியல்களில் உள்ள வேறு விவகாரங்கள் பற்றியும் மட்டுமே சட்டம் இயற்ற வேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.

விளக்கம் : இந்தக் கோட்பாட்டில் வரும் மாநில அரசாங்கம் என்ற சொல் குடியரசுத் தலைவரால் தற்காலிகமாக ஜம்மு காஷ்மிரின் மகாராஜா என்று அங்கீகரித்துள்ள நபரைக் குறிக்கும். அந்த மகாராஜா 1948 மார்ச்சு மாதம் 16 ஆம் நாள் வெளியிட்டுள்ள பிரகடனப்படியுள்ள தம் அமைச்சரவையின் அறிவுரைக்கு ஏற்பச் செயல்பட வேண்டும்.

(இ) இந்தக் கோட்பாடும் மற்றும் ஒன்றாவது கோட்பாடும் அந்த மாநிலத்துக்கு அனுசரிக்கப்பட வேண்டும்.

(ஈ) குடியரசுத் தலைவரின் உத்தரவில் குறிப்பிடும் விதி விலக்குகளுக்கும் மாற்றங்களுக்கும் உட்பட்டு இந்த அரசியல் சாசனத்தில் உள்ள மற்ற விதிகளும் அனுசரிக்கப்படலாம்.

ஆனால் (ஆ) கிளைக் கூறின் (1) ஆவது பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதும், அந்த அந்த மாநிலத்தை இணைத்துக் கொள்ளும் போது எழுதப்பட்டதுமான ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவகாரங்கள் பற்றி அந்த மாநில அரசரைக் கலந்தாலோசிக்காமல் எத்தகைய உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது, இதற்கு முந்தைய விதியில் கூறப்படாத விவகாரங்கள் பற்றி அந்த மாநில அரசரைக் கலந்தாலோசிக்காமல் எத்தகைய உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது.

(2) (1) வது கூறின் (ஆ) கிளைக் கூறின் (2)வது பத்தியில் உள்ளபடி அல்லது அந்தக் கூறின் (ஈ) இணைக் கூறின் இரண்டாவது விதியில் உள்ளபடி மாநில அரசாங்கத்தின் சம்மதத்தை அந்த மாநிலத்தின் அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கு முன்னர் பெற்றிருந்தால் அதனை அரசியல் நிர்ணய சபையில் அத்தகைய முடிவு எடுக்கப்படுவதற்காகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

(3) இந்தக் கோட்பாட்டில் இதற்கு முன்னர் யாது கூறப்பட்டிருப்பினும் தாம் குறிப்பிடும் அத்தகைய நாளிலிருந்து இந்தக் கோட்பாட்டில் உள்ளவை செயல் இழக்கும் அல்லது அத்தகைய மாற்றங்களூக்கும் விதி விலக்குகளுக்கும் உட்பட்டுச் செயல்படுத்தப்பட வேண்டும் என்று ஒரு பொது அறிவிக்கை மூலம் குடியரசுத் தலைவர் அறிவிப்பு தரலாம்.

எனினும் அத்தகைய அறிவிப்பை செய்வதற்கு முன் (2) வது கூறிலுள்ளபடி அந்த மாநிலத்தின் அரசியல் நிர்ணய சபையால் அந்த அறிவிப்பு பரிந்துரை செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரைப் பகுதி இதுதான்..
ஜம்மு - காஷ்மீர் மக்களாகிய நாங்கள், 1947 அக்டோபர் 26 அன்று இம்மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவும், மேலும் இந்திய ஒன்றியத்தோடு இந்த மாநிலத்துக்கு உள்ள தொடர்பை வரையறை செய்ய வேண்டியும் ... ... எங்கள் மாநில அரசியல் அமைப்பு அவையில், 1956 நவம்பர் 17 அன்று நாங்கள் நிறைவேற்றியும் ஏற்றும் எங்களுக்கான இந்த அரசமைப்பை அமைத்துக் கொண்டோம்'' எனக் கூறுகிறது. இந்தியாவுடன் இணைக்கப்பட்டதை ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் ஜம்மு - காஷ்மீருக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான உறவு - தொடர்பு பற்றிய ஒரு விளக்கத்தையும் அல்லது வரையறையையும் தங்களுக்குத் தாங்களே செய்து கொண்டனர்..-எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின் விதி 144 அந்நாட்டுக்கு உரிய தேசியக் கொடியின் அமைப்பை விவரிக்கிறது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான கொடி நீண்ட சதுர வடிவத்தில் சிவப்பு வண்ணத்தில் இலங்கும். அக்கொடியின் கம்பை ஒட்டி சமமான இடைவெளிகளைக் கொண்ட சமமான அகலம் கொண்ட செங்குத்தான வடிவில் - வெள்ளை நிறத்தில் மூன்று கோடுகள் இருக்கும். கொடியின் நடுவில் வெள்ளை வண்ணத்தில் ஏர் வரையப்பட்டிருக்கும். ஏரின் முனை வெள்ளைக் கோடுகளை நோக்கி இருக்கும்.
(இணையத்தில் பெறப்பட்ட தகவல்களின் உதவியுடன்)

Source : inneram.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza