Friday, February 21, 2014

இராமநாதபுரத்தில் நள்ளிரவில் அத்துமீறி வீடுபுகுந்து முஸ்லீம்கள் கைது! தமிழக முதல்வர் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை!!


இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட பொதுச்செயலாளர் பி.எஸ்.ஐ.கனி இன்று (21.02.2014)வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பிப்ரவரி 17 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் இராமநாதபுரத்தில் அனுமதி பெற்று நடைபெற்ற ஊர்வலத்தில் காவல்துறையினர் வேண்டுமென்றே திடீரென அனுமதியை மறுத்து கலவரச்சூழலை ஏற்படுத்தினர்.மேலும் கண்ணீர் புகைகுண்டு,தடியடி,இரும்பு கம்பி,கற்கள் ஆகியவற்றை கொண்டு பொதுமக்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.இதில் வழக்கறிஞர்களும் தாக்கப்பட்டனர்.காவல்துறையினரின் இக்கொடூர தாக்குதலால் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் கைது செய்யும் படலத்தை துவங்கியுள்ளனர்.நள்ளிரவில் வீடு புகுந்து உறங்கி கொண்டிருந்த முஸ்லீம்களை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்றுள்ளனர்.இதனால் மாவட்டம் முழுவதும் முஸ்லீம்களிடயே பதற்றம் ஏற்பட்டுள்ளது.பொது மக்களும் அச்சமடைய துவங்கியுள்ளனர்.கைது செய்யும் போது எந்தவிதமான சட்டநடைமுறையும் பின்பற்றப்பட்டதாக தெரியவில்லை.முஸ்லீம்களின் முக்கிய தினமான வெள்ளிக்கிழமை அன்று இக்கைது சம்பவம் நடைபெற்றுள்ளது.முஸ்லீம்களின் வீடுகளில் கதவுகள் காவல்துறையினரால் உடைக்கப்பட்டு பெண்கள் மிரட்டப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் நடைபெறுகின்ற குற்றச்செயல்களை தடுத்து நிறுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டிய காவல்துறையினர் , சட்ட விதிமுறைகளை மீறி, குற்றவாளிகளை போல் பொதுமக்களையும்,அப்பாவிகளையும் கைது செய்வதில் தீவிரம் காட்டுவதை எஸ்.டி.பி.ஐ கட்சி வன்மையாக கண்டிக்கிறது.அத்து மீறி வீடுகளில் புகுந்து கைது செய்வதை காவல்துறையினர் உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும் தமிழக முதல்வர் இவ்விசயத்தில் தலையிட்டு விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza