Wednesday, May 1, 2013

எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் தெஹ்லான் பாகவிவுடன் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் சந்திப்பு!


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி. அவர்கள் இன்று (30-04-2013) மாலை 4 மணியளவில், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவருடன் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரவிக்குமார், கட்சியின்செய்தி தொடர்பாளர் வன்னியரசு, மாநில பொருளாளர் யூசுப், பாவலன், ரஹ்மான் உட்பட பல்வேறு நிர்வாகிகளும் வருகை தந்தனர். அவர்களை மாநில தலைவர் தெஹ்லான் பாகவி உட்பட எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகள் வரவேற்றனர். சுமார் 1 மணிநேரம் உரையாடிய தொல் திருமா அவர்கள், தர்மபுரியில் தலித் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்குப் பின் தொடர்ந்து நடைபெற்று வரும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும், மரக்காணத்தில் தலித்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்தும், சமீபத்தில் நடைபெற்ற மாமல்லபுரம் மாநாட்டில் பாமக தலைவர்களால் பேசப்பட்ட உரைகள் குறித்தும் விளக்கினார்.

தலித்களின் உரிமைகளுக்காகவும் அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளுக்காகவும், எஸ்.டி.பி.ஐ கட்சி விடுதலை சிறுத்தைகளுடன் இணைந்து குரல் கொடுக்கும் என மாநில தலைவர் தெஹ்லான் பாகவி தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் அமீர் ஹம்சா, ரத்தினம், மத்திய சென்னை மாவட்ட தலைவர் நாஜிம், பொதுச்செயலாளர் இஸ்மாயில், வட சென்னை மாவட்ட தலைவர் ரஷீது உட்பட பல்வேறு நிர்வாகிகள் உடனிருந்தனர். 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza