Saturday, April 27, 2013

போலீஸ் நடவடிக்கையின் பின்னணியில் உயர் மட்ட சதி!-பாப்புலர் ஃப்ரண்ட்!


கோழிக்கோடு: கேரள மாநிலம் கண்ணூரில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த 21 பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்களை கைதுச் செய்ததை தொடர்ந்து அரங்கேறும் போலீஸின் நடவடிக்கைகள் ஓரவஞ்சனையும், ஜனநாயக விரோத செயலாகும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளது. பாப்புலர் ஃப்ர்ண்ட் ஆஃப் இந்தியாவுக்கு எதிராக உயர்மட்ட அளவில் நடக்கும் சதித்திட்டத்தின் அண்மை உதாரணம் தான் போலீஸ் நடவடிக்கை மூலம் வெட்ட வெளிச்சமானதாக கேரள மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச் செயலாளர் கே.ஸாதாத் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கூறியது:மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதியில் உள்ள கட்டிடத்தில் இருந்து பாப்புலர் ஃப்ர்ண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்களை கைதுச் செய்து அழைத்துச் சென்ற பிறகு அங்கிருந்து கைப்பற்றியதாக கூறி சில ஆயுதங்களை காட்சிக்கு வைத்ததே சதித்திட்டத்திற்கான முக்கிய ஆதாரம் ஆகும்.

கண்ணூரில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சி.பி.எம்(மார்க்சிஸ்ட் கட்சி) மையங்களில் இருந்து பெருமளவிலான வெடிப்பொருட்களும், ஆயுதங்களும் கைப்பற்றிய வேளைகளில் போலீசும், ஊடகங்களும் காண்பிக்காத வரம்புகடந்த ஆர்வமும், வேகத்தையும் அச்சம்பவங்களுடன் ஒப்பிடுகையில் கண்ணூர் நாராத் பகுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்களை கைதுச்செய்த மிகவும் சாதாரணமானதொரு சம்பவத்தில் வெளிப்படுத்துவது ஏராளமான சந்தேகங்களை எழுப்புகிறது. கண்ணூரில் சில கட்சி மற்றும் அமைப்புகளின் அலுவலகங்களில் இருந்து வெடிப்பொருட்களையும், ஆயுதங்களையும் கைப்பற்றியபோது அந்த கட்சி மற்றும் அமைப்புகளின் மாநில தலைமையங்கள், அலுவலகங்கள், கீழ் மட்ட அலுவலகங்களில் சோதனை நடந்ததாக வரலாறு இல்லை.

ஆனால், கண்ணூர் நாராத் சம்பவத்தின் பின்னணியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில கமிட்டி அலுவலகம் முதல் உள்ளூர் அலுவலகங்கள் வரை சோதனை நடத்தி பீதிவயப்படுத்தி வருகிறது போலீஸ். கண்ணூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு எதிராக பாரபட்சமான முறையில் ஏற்கனவே போலீஸ் கடைப்பிடித்த நிலைப்பாட்டின் தொடர்ச்சியே நாராத் பகுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்களின் கைதும், கடுமையான பிரிவுகளை சுமத்திய போலீசின் நடவடிக்கையுமாகும்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தினத்தை கொண்டாடுவது தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்ட வேளையில் கண்ணூரில் மட்டும் கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. சி.பி.எம்., ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகளுடன் கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்ற முடக்கு வாதத்தை கூறி மாவட்ட போலீஸ் தலைவர் பாப்புலர் ஃப்ரண்ட் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்தார். கண்ணூர் நாராத் பகுதியில் கைதுச் செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் மீது யு.ஏ.பி.ஏ உள்ளிட்ட கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவுச் செய்து ஜாமீன் மறுப்பதற்கான சதித்திட்டம் நடைபெற்று வருகிறது.

யு.ஏ.பி.ஏ என்ற கறுப்புச் சட்டத்திற்கு எதிராக வலுவான பிரச்சாரத்தை நடத்தி வரும் பாப்புலர் ஃப்ரண்டிற்கு எதிராக அதே கறுப்புச் சட்டத்தை உபயோகப்படுத்தி பலவீனப்படுத்துவதற்கான முயற்சியே இந்நடவடிக்கை. யு.ஏ.பி.ஏ சட்டத்திற்கு காங்கிரஸ், முஸ்லிம் லீக், சி.பி.எம் உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள சூழலில் கேரளாவில் முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிராக அச்சட்டத்தை பிரயோகிப்பதற்கான முயற்சி மாறுபாடாக உள்ளது. மே 3-ஆம் தேதி யு.ஏ.பி.ஏ சட்டத்திற்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பிரச்சாரத்தை துவக்க இருக்கும் வேளையில் கண்ணூர் நாராத் பகுதியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்களை இதே சட்டத்தில் கைதுச் செய்து சிறையில் அடைப்பதற்கான சதி நடக்கிறது. இவ்வாறு பாப்புலர் ஃப்ரண்டின் மாநில நிர்வாகிகள் தெரிவித்தனர்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச் செயலாளர் கே.ஸாதாத், துணைத் தலைவர் பி.அப்துல் ஹமீத், பொருளாளர் கே.ஹெச்.நாஸர், மாநில செயற்குழு உறுப்பினர் பி.நூருல் அமீன் ஆகியோர் பங்கேற்றனர்.

-popularfronttn.org

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza