Monday, April 15, 2013

குழந்தை தொழிலாளர்களை பள்ளியில் இணைப்போம் - பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு தீர்மானம்


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் ஏப்ரல் 13,14 ஆகிய தேதிகளில் சென்னை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.மாநில தலைவர் A.S.இஸ்மாயில் அவர்கள் தலைமை வகித்தார்.மாநில பொது செயலாளர் A.ஹாலித் முஹமது வரவேற்ப்புரை நிகழ்த்தினார்.தேசிய செயலாளர் M.முகமது அலி ஜின்னா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இந்த செயற்குழுவில் கீழ்காணும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

1.பள்ளி செல்வோம் பிரச்சாரம் - GO TO SCHOOL

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக பள்ளி செல்வோம் பிரச்சாரம் கடந்த பலவருடங்களாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி இந்த வருடம் மே மற்றும் ஜூன் ஆகிய மாதங்களில் இந்த பிரச்சாரத்தை மாநிலம் முழுவதும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த பிரசாரத்தின் துவக்க நிகழ்ச்சி திண்டுக்கல்லில் நடைபெறுகின்றது. அதை தொடர்ந்து குழந்தை தொழிலாளர்களை கண்டறியும் சர்வே எடுப்பது , அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க முயற்சிப்பது ,மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க இச் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏழை எளிய மாணவர்கள் பயன் அடையும் விதத்தில் ஜூன் மாதம் பள்ளி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2.இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்து

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்ப்படையால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதை இந்த செயற்குழு வண்மையாக கண்டிக்கின்றது. மத்திய அரசு இது விசயத்தில் தொடர்ந்து மெத்தனமாக செயல்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். கேரள மீனவர்கள் இத்தாலி வீரர்களால் படுகொலை செய்யப்பட்டதற்கு காட்டிய அக்கறையை போன்று தமிழக மீனவர்கள் விசயத்தில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை இந்த செயற்குழு கேட்டுக்கொள்கின்றது.

3.காவல்துறையின் தொடரும் மனித உரிமை மீறல் ...

சமீப காலமாக தமிழக காவல்துறையினர் தொடர் மனித உரிமை மீறல் சம்பவங்களிலும் ,சட்ட முரணான நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று சித்திரவதை செய்வது, பொய்வழக்கு போடுவேன் என மிரட்டுவது , பொய்வழக்கு போடுவது, உரிமைக்காக ஜனநாயக அடிப்படையில் போராடும் மக்கள் மீது தடியடி நடத்துவது, வீடுகளில் அனுமதி இன்றி உள்ளே நுழைவது போன்ற செயல்கள் இங்கு சட்டத்தின் படி ஆட்சி நடந்து வருகின்றதா என்ற சந்தேகத்துடனே மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்படிப்பட்ட மனித உரிமை மீறல் மற்றும் சட்ட முரணான நடவடிக்கைகளை இச்செயற்குழு வண்மையாக கண்டிக்கின்றது. தமிழக அரசு இது விசயத்தில் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை இந்த செயற்குழு கேட்டுக்கொள்கின்றது.

4.வக்ஃப் சொத்துக்கள் பாதுகாப்பு

முஸ்லீம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக 6 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் முன்னோர்களால் வக்ஃப் செய்யப்பட்டுள்ளது. முஸ்லீம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு வக்ஃப் சொத்திலிருந்து வரும் வருமானமே போதுமானது என சச்சார் கமிட்டி தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது வக்ஃப் சொத்துக்கள் சரியான பராமரிப்பு இல்லாததால் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. முறையான நிர்வாகம் இல்லாததால் வக்ஃப் வாரியம் வருமானம் இன்றி இருந்து வருகின்றது. எனவே தமிழக அரசு இது விசயத்தில் உடனடியாக தலையிட்டு வக்ஃப் சொத்துக்கள் முறையாக பராமரிப்பதற்கும் , ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களை மீட்பதற்கும் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

வக்ஃப் சொத்துக்களை பாதுகாக்க கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஏப்ரல் 26 அன்று தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. முஸ்லீம் சமூகத்தின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லீம்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு முஸ்லீம் சமூகத்தை இந்த செயற்குழு கேட்டுக்கொள்கின்றது.


இப்படிக்கு , 

A.ஹாலித் முஹம்மது
மாநில பொது செயலாளர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
தமிழ்நாடு.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza