Sunday, December 16, 2012

குஜராத்தில் மக்களின் கனவுகள் புறக்கணிக்கப்படுகின்றன! மோடியின் கனவுகளுக்கே முக்கியத்துவம்!- ராகுல் கடும் தாக்கு!

rahul gandi and modi 1

அஹ்மதாபாத்:குஜராத்தில் நரேந்திர மோடி கோப அரசியலை நடத்தி வருகிறார் என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தி தாக்கியுள்ளார். குஜராத் முன்னேற வேண்டுமென்றால் மாநில மக்கள் மகாத்மா காந்தி போதித்த அன்பு வழிக்கு மாற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். குஜராத்தில் 2ஆம் கட்டத் தேர்தல் வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதையொட்டி கட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ் பகுதியில் சனிக்கிழமை தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. அதில் பேசிய ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: மாநிலத்தில் உள்ள பிரச்னை என்னவென்றால் சாதாரண மக்களின் கனவுகள் நிறைவேற்றப்படுவதில்லை. தனிமனிதனின் (மோடி) கனவுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிறது. அது, மக்களுக்கு கோபத்தை உண்டாக்குகிறது.
மாநிலத்தில் சர்வாதிகார ஆட்சி நடப்பதுபோல் உள்ளது. கோபமுடன் உள்ள ஒரு மாநிலம் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியாது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு அன்பு தான் உதவும். தனக்கு (மோடி) முன் மாநிலத்தில் எந்த வளர்ச்சியும் இல்லை; தனக்குப் பின்தான் மாநிலம் வளர்ச்சி பெற்றது என்று மக்களை அவர் கூற வைத்துள்ளார்.
இது சிறந்த வர்த்தகமாக உள்ளது. உங்களது நிலம் கையகப்படுத்தப்பட்டு பெரிய தொழிலதிபர்களுக்கு அளிக்கப்பட்டன. உங்களுக்கு எத்தனை ரூபாய் கிடைத்தது. இதில் யார் மிகுந்த துன்பத்துக்குள்ளாகினர். மீனவ மக்களின் நிலை என்ன?. இதுபோன்ற எத்தனையோ கேள்விகள் இருந்தும் குஜராத் வளர்ச்சி அடைந்துவிட்டதாக மட்டும் பரவலாகப்
பேசப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை (ஆர்டிஐ) அமல்படுத்தியது. இச்சட்டத்தின்மூலம் சாதாரண மக்கள் கூட ஊழலுக்கு எதிராக குரல் எழுப்ப முடியும். குஜராத் குறித்து சுமார் 14 ஆயிரம் ஆர்டிஐ விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. மாநிலத்தில் ஒருவருக்கு வேண்டாம் என்பதால் லோகாயுக்தா நியமிக்கப்படவில்லை. தேர்தல் மூலம் மக்கள் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று ராகுல் தெரிவித்தார்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza