Friday, November 30, 2012

அஸ்ஸாமில் "ரிஹாப் இந்தியா" செய்வது என்ன?அஸ்ஸாம் அகதிகள் முகாம்களின் அவல நிலை - நேரடி ரிப்போர்ட்


அஸ்ஸாமில் கடந்த ரமலான் மாதத்தின் போது முஸ்லிம்கள் மீது “போடோ” தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்தும், இதனால் தமது சொந்த வாழ்விடங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் அகதிகளாக்கப்பட்டது குறித்தும் கடந்த மாத விடியலில் விரிவாக குறிப்பிட்டிருந்தோம்.இதனைத் தொடர்ந்து “ரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன்” சார்பாக அஸ்ஸாம் சென்ற நிவராணக் குழுவில் பங்கேற்ற பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினரும், NCHRO என்ற மனித உரிமை அமைப்பின் மாநில பொதுச் செயலாளருமான வழக்கறிஞர் ஏ. முஹம்மது யூசுப் அவர்கள் நேரடி கள ஆய்வு தகவல்களை விடியல் வாசகர்களுடன் இந்த இதழில் பகிர்ந்து கொள்கிறார்.


ரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் 

ரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் என்ற அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனம் (NGO ) டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2008ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது. இந்திய தேசத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, பொருளாதார, சமூக மேம்பாட்டிற்காக பாடுபடுவதை நோக்கமாகக் கொண்டு இந்த தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. 
எஸ்.டி.பி.ஐ. என்ற தேசிய அரசியல் கட்சியின் தலைவர் இ.அபூபக்கர் ரிஹாப் இந்தியா தொண்டு நிறுவனத்தின் சேர்மனாகவும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஓ.எம்.ஏ. அப்துல் சலாம் இதன் பொதுச் செயலாளராகவும் இருந்து வருகின்றனர். 
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல மூத்த வழக்கறிஞரும், NCHRO  அமைப்பின் மாநிலத் தலைவருமான பவானி. பா. மோகன் மற்றும் பாப்புலர் ஃப்ரண்டின் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் அஸ்கர் (எ) கே.எஸ்.எம். இப்ராஹிம் ஆகியோர் இதன் உறுப்பினர்களாக உள்ளனர்.மேலும் அஸ்ஸாமை சேர்ந்த கல்லூரி விரிவுரையாளரான டாக்டர் அபுல்பவுஸ் மற்றும் கவுஹாத்தி உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் நஃபீல் ரஷீத் சவுத்ரி ஆகியோரும் இதன் உறுப்பினர்களாக செயல்பட்டு வருகின்றனர். 


சுயதொழில் மற்றும் கல்வி உதவி 

டெல்லி, மேற்குவங்க மாநிலத்தில் முர்ஷிதாபாத் ஆகிய இடங்களில் சுய தொழில் உதவி, சைக்கிள் ரிக்ஷா வழங்குதல், நாட்டின் பல பகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கடன் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்குதல் ஆகிய பணிகளை ரிஹாப் தொண்டு நிறுவனம் செய்து வருகிறது. 



 



அஸ்ஸõமில் பிரம்ம புத்திரா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் 1993-94 ல் போடோ தீவிரவாதிகளால் விரட்டியடிக்கப்பட்டு இன்று வரை அகதிகள் முகாம்களில் வசித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கும் வீடு கட்டிக் கொடுக்கும் பணி  கடந்த 2009ம் ஆண்டு இந்த நிறுவத்தால் துவக்கப்பட்டு இதுவரை 60 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதில் 49 வீடுகள் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு விட்டன. 11 வீடுகள் வருகின்ற டிசம்பர் மாதம் வழங்கப்பட்டது .அறிய இதனை அறிய இந்த  லிங்கை கிளிக் செய்யவும், பெங்கே காவ் மாவட்டம் ஹபாசாரா கிராம பஞ்சாயத்தில் புதிதாக உருவõக்கப்பட்டுள்ள ரிஹாப் மாதிரி கிராமத்தில்இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஒரு இலவச மருத்துவ மையமும் இந்த கிராமத்தில் செயல்பட்டு வருகின்றது. 


கடந்த 2009ம் ஆண்டு முதலே அஸ்ஸாம் முஸ்லிம்களுடன் ரிஹாப் தொண்டு நிறுவனம் தொடர்புடன் இருந்து வருகின்றது. அவர்களுடைய பிரச்சனைகளையும், பாதிக்கப்பட்டோரையும் அறிந்து அவர்களுøக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றது. 

நிவாரணப் பணியில் முதலில் களமிறங்கிய ரிஹாப் 


கடந்த ஜுலை மாதம் ரமலான் நோன்பு காலத்தில் போடோ தீவிரவாதிகளால் முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டு, அகதிகள் முகாம்களில் தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில் உடனடியாக களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரிஹாப் தொண்டு நிறுவனத்தின் தன்னார்வ தொண்டர்கள் முதல் முதலில் நிவாரண உதவிகளை செய்தனர். 


பெருநாளன்று புத்தாடை 

நோன்புப் பெருநாளை நாமெல்லாம் சந்தோஷமாகக் கொண்டாடும் அதே வேளையில், அகதிகள் முகாம்களிலேயே அல்லாடிக் கொண்டிருக்கும் எம் சமுதாயச் சொந்தங்களையும் மறந்திடக் கூடாது என்ற உள்ளக் கிடக்கையின் வெளிப்பாட்டினால் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள புத்தாடைகளை அவர்களுக்கு வழங்கியது ரிஹாப் தொண்டு நிறுவனம். 


10 லட்ச ரூபாய் நிவாரணம் 

பாதிக்கப்பட்டவுடன் முதல் கட்ட நிவாரண உதவிகளாக ரிஹாப் தொண்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட ஆடைகள், டெண்ட் அடிப்பதற்கான பாலித்தீன், பிறந்த குழந்தைகள் மற்றும் கைக் குழந்தைகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள் , கொசுவலை, கொசுவத்திச் சுருள்கள் உள்ளிட்ட பல அடிப்படை நிவாரணப் பொருட்கள் மற்றும் இரண்டாம் கட்ட நிவாரண உதவிகளாக நோன்புப் பெருநாளை முன்னிட்டு வழங்கப்பட்ட புத்தாடைகள் ஆகியவற்றின் மதிப்பு 10 இலட்சத்து 49 ஆயிரம் ரூபாய் ஆகும்.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் கே.எம். ஷரீஃப் அவர்கள் நேரடியாக சென்று சிராங், பொங்கேகாவ், பார்பெட்டா, கொக்ரஜார் மற்றும் துப்ரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் ரிஹாப் தொண்டு நிறுவனம் வழங்கிய நிவாரணப் பணியில் பங்கேற்று உதவிகளை வழங்கினார். 


ரூபாய் 50 இலட்சம் வழங்கியது பாப்புலர் ஃப்ரண்ட் 

கடந்த நோன்புப் பெருநாளன்று நாடு முழுவதும் ஈத்கா திடல்களிலும்,பெருநாள் தொழுகை நடைபெற்ற மஸ்ஜிதுகளின் வாயில்களிலும் பல்லாயிரக்கணக்கான பாப்புலர் ஃப்ரண்டின் தொண்டர்கள் அஸ்ஸாம் நிவாரண நிதி வசூலித்தனர். தமிழகத்தில் வசூலிக்கப்பட்ட நிதி விபரம் கடந்த விடியலில் வெளியிடப்பட்டது.


இவ்வாறு நாடு முழுவதும் வசூலிக்கப்பட்ட நிதியிலிருந்து ரூ. 50 இலட்சம் ரூபாயை ஏற்öகனவே அஸ்ஸõம் முஸ்லிம்களுடன் தொடர்பில் இருந்து வரும் ரிஹாப் தொண்டு நிறுவனத்தின் மூலம் வழங்குவதற்கு பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரூ.50 இலட்சம் ரிஹாப் தொண்டு நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. 


மூன்றாம் கட்ட விரிவான நிவாரணப் பணியில் தமிழக பிரதிநிதிகள் பங்கேற்பு 


மூன்றாம் கட்ட விரிவான நிவாரணப் பணிகளைத் தொடங்குவதற்காக அமைக்கப்பட்ட அஸ்ஸாம் நிவாரணக் குழுவில் தமிழகம், கேரளா, கர்நாடாக ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பாப்புலர் ஃப்ரண்டின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.தமிழகத்திலிருந்து பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயலாளர் ஆரிஃப் ஃபைசல், மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஏ. முஹம்மது யூசுப், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தேசியச் செயலாளர் மௌலவி ஷாஹுல் ஹமீது பாகவி (சென்னை), கேரளத்திலிருந்து பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் சி. அப்துல் ஹமீது, எம். அப்துல் சமது மற்றும் பிரதிநிதிகளாக ஜக்கரியா, ஜாஃபர், வழக்கறிஞர் அப்துல் ரஹீம், கர்நாடகத்திலிருந்து மாநில செயற்குழு உறுப்பினர் ஃபாரூக் மைசூரி ஆகியோரும் இந்த நிவாரணக் குழுவில் பங்கேற்று 15 நாட்கள் களப்பணியாற்றினர். 

 
மூன்றாம் கட்ட சர்வே 

கடந்த செப்டம்பர் 7ம் தேதி அஸ்ஸாமில் வந்து இறங்கிய இக்குழு, அஸ்ஸாம் பிரநிதிகளுடன் இணைந்து ரிஹாப் மாதிரி கிராமத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. ரிஹாப் தொண்டு நிறுவனத்தின் அஸ்ஸாம் மாநில துணைத் தலைவரான டாக்டர் அபுல் பஷர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மூன்றாம் கட்ட நிவாரணப் பணிகளுக்கு தலைவராக அஸ்ஸாமை சேர்ந்த அமீனுல் ஹக் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
ஜமாத்தே இஸ்லாமி, ஜம்இயத்துல் உலமா ஹிந்த், ஏ.ஐ.யு.டி.எஃப். உள்ளிட்ட மற்ற பல இஸ்லாமிய அமைப்புகளும் அந்த மக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியிருந்தன. முகாம்களில் உள்ள மக்களின் தேவைகள் என்னென்ன என்பது குறித்து சரியான  கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் நிவாரண உதவிகள் வழங்க கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. (ஆனால் எவ்வளவு கொடுத்தாலும் அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்பதை நமது நேரடிக் கள ஆய்வில் நாம் கண்டோம். அவர்களின் கஷ்டம் அந்த அளவிற்கு உள்ளது). 


அஸ்ஸாமை சேர்ந்த 250 ரிஹாப் தொண்டர்களுடன், தென் மாநில பாப்புலர் ஃப்ரண்ட் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து 5 சர்வே (கணக்கெடுப்பு) குழுக்கள் அமைக்கப்பட்டன.சாலையில்லாத ரோடுகள், மின்சாரமில்லாத இருளடைந்த கிராமங்கள், உண்ண உணவு கிடைக்காத தொலைதூரப் பகுதிகள் ஆகியவற்றின் வழியாக தனது பயணத்தை தொடர்ந்த இக்குழுக்கள் பல நாட்கள் நடத்திய கள ஆய்வில் 5 மாவட்டங்களில் 129 அகதிகள் முகாம்களிலுள்ள மக்களை சந்தித்தனர்.இந்தக் களஆய்வில் 24,434 குடும்பங்களைச் சேர்ந்த 99,160 மக்களை நேரடியாக சந்தித்து துல்லியமான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 171 அகதிகள் முகாம்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் நம்மால் 129 முகாம்களுக்கு மட்டுமே செல்ல முடிந்தது. அடிக்கடி அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு, பாதுகாப்பு பிரச்சனை ஆகிய காரணங்களால் பல முகாம்களை நாம் சென்றடைய முடியவில்லை. 


சுகாதாரம், உடல் நலம், கர்ப்பிணிப் பெண்கள், உணவுப் பொருட்கள், பிறந்த குழந்தைகளுக்கான உணவு, விறகு, உடைகள், உயிரிழப்பு, பொருட்சேதம், காணாமல்போனவர்கள், காயமடைந்தவர்கள், அத்தியாவசிய தேவைகள், பொதுவான தேவைகள் மற்றும் சொந்த கிராமங்களில் மீள் குடியேற்றத்தில் உள்ள பிரச்சனை ஆகியவை குறித்து கள ஆய்வுப் படிவம் மூலம் கணக்கெடுக்கப்பட்டது.இந்த 129 முகாம்களுக்கு உட்பட்டவர்களில் கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள் 35 பேர், படுகாயமடைந்தவர்கள் 56 பேர், காணாமல் போனவர்கள் 13 பேர், சொத்துக்களின் சேதம் 90% (பலகோடி ரூபாய் மதிப்பு) 


அகதிகள் முகாம்களின் அவல நிலை 


அரசு பள்ளிக்கூடங்கள், தனியார் பள்ளிக்கூடங்கள், மதரஸாக்கள் ஆகியவற்றில் இந்த அகதிகள் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. மிகவும் நெருக்கடியான சூழலில் மக்கள் (முஸ்லிம்கள்) தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதிலும் இடம் பற்றாக்குறையால் ஏராளமானோர் பள்ளிக்கு வெளியே சாலையோரத்தில் தற்காலிகமாக கூடாரமைத்து தங்கியுள்ளனர்.50 பேர் பயிலும் வகுப்பறையில், அந்த வகுப்பறை நிரம்பி வழியும் அளவிற்கு மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் பெண்களும், குழந்தைகளும் பள்ளிக்கூடத்திற்குள் படுத்துக் கொள்வதால் ஆண்கள் உள்ளே படுக்க இடமின்றி பள்ளிக்கூடத்திற்கு வெளியே வெட்டவெளியில் படுக்கின்றனர். மழைவந்தால் அவர்களின் நிலையோ அந்தோ பரிதாபம்!பல பள்ளிக்கூடங்களில் மண் தரை தான் உள்ளது. அதில் பிறந்த குழந்தை முதல் பருவமடைந்த பெண் வரை படுத்து உறங்குகின்றனர். கீழே விரிப்பதற்குக் கூட எதுவும் இல்லை. 


பள்ளி நிர்வாகத்தின் நெருக்கடி 

பள்ளிக்கூடங்கள் அகதிகள் முகாம்களாக மாற்றப்பட்டு விட்டதால் விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. அந்த பள்ளியில் பயிலும் குழந்தைகளும், மாணவ, மாணவிகளும் கல்வியை இழந்து வருகின்றனர். அவர்களின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திற்கு நெருக்கடி தருவதால், பள்ளி நிர்வாகிகள் அங்கு தங்கியிருக்கும் முஸ்லிம்களை வெளியேறச் சொல்லி நிர்பந்திக்கின்றனர்.சில பள்ளிக்கூடங்களில் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டும் உள்ளனர். அவ்வாறு வெளியேற்றப்பட்டவர்கள் சாலையோரத்தில் தற்காலிக கூடாரமைத்து தங்கியுள்ளனர். 


மழையில் தத்தளிக்கும் கூடாரங்கள் 

இது தொடர் மழைக்காலம். தினமும் கடும் மழை பெய்கிறது. மழை வந்தால் சாலையோரத்தில் உள்ள கூடாரங்கள் மழை வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. ஆண்களும், பெண்களும், சிறு குழந்தைகளும், முதியோர்களும், மூதாட்டிகளும் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருக்கின்றனர். 


கல்வி 

தங்கள் சொந்த கிராமங்களில் படித்துக் கொண்டிருந்த குழந்தைகள் அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிக்கே வழியில்லாத நிலையில் கல்வியையும் இழந்து நிற்கின்றனர். கல்வியை இழந்த இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருக்கின்றது. 


கழிவறைகள் 

கழிவறைக்கான பீங்கான்களை தரையில் பதித்து தற்காலிகமாக கழிவறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை சுற்றிலும் பிளாஸ்டிக் பேப்பரால் அடைக்கப்பட்டுள்ளன. அதுவும் 400 பேருக்கு ஒரு கழிவரை என உள்ளது. வடிகால் வசதி இல்லாததால் கடும் மழை காரணமாக அந்த கழிவறையும் நிரம்பி வழிகிறது. இதனால் பெண்களும், ஆண்களும், வெட்ட வெளியில் மர ஓரங்களில் இயற்கைத் தேவையை பூர்த்தி செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.


சுகாதாரம் 

அளவுக்கு அதிகமாக மக்கள் அடைக்கப்பட்டுள்ளதாலும், பள்ளிக்கூடங்களின் சுற்றுப்புறச் சூழல் சரியில்லாததாலும் சுகாதாரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. சேரிகளை விட மோசமான சூழலில் பள்ளிக்கூட அகதிகள் முகாம்களும், வெட்டவெளி அகதிகள் முகாம்களும் காட்சியளிக்கின்றன. இதனால் நோய்த் தொற்று வாய்ப்புகள் அதிகம். அரசு மருத்துவர்கள் அடிக்கடி வந்து மருத்துவ பரிசோதனை செய்தாலும் அடைபட்டுள்ள மக்களின் எண்ணிக்கைக்கு அது போதுமானதாக இல்லை. 

உணவு 

அரசு ரேஷன் பொருட்கள் வழங்குகிறது. ஆனால் அதனைக் கொண்டு தங்களுடைய தேவையை பூர்த்தி செய்ய மிகவும் சிரமப்படுகிறார்கள். சமயலறையின்றி வெட்டவெளியில் அடுப்பு மூட்டி பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து சமைத்து உண்கிறார்கள். குழந்தைகளுக்கு கூட சத்தான உணவுகள் இல்லை. 


ஆடைகள் 

பெண்கள் சேலை அணிந்துள்ளனர். ஆனால் ஜாக்கெட், உள்பாவாடை போன்ற அத்தியாவசிய ஆடைகள் போதுமான அளவில் இல்லாமல் தவிப்பதாக கண்ணீர் மல்க ஏராளமான பெண்கள் நம்மிடம் கூறினர். நிவாரணப் பொருட்கள் கொண்டு வரும் அனைவரும் சேலைகளை வழங்குகிறார்கள். ஆனால் ஜாக்கெட், உள்பாவாடை போன்றவை கிடைப்பதில்லை என அவர்கள் கூறினர்.ஆண்கள் பெரும்பாலும் கைலி, உள் பனியன் ஆகியவற்றுடன் மட்டுமே காட்சியளிக்கின்றனர். சட்டை போடுவது மிகவும் அபூர்வமாகவே உள்ளது.குழந்தைகளின் நிலையோ பரிதாபம். வெறும் ஜட்டியுடன் தான் அவர்கள் இருக்கின்றனர். பலருக்கு அதுவும் கிடையாது. 
டீன் ஏஜ் வயதுப் பெண்களுக்கு சுடிதார் போன்ற ஆடைகள் கிடைப்பதில்லை. அவர்கள் பெரியவர்கள் உடுத்தும் சேலையையும் எங்களால் அணிய முடியவில்லை என தங்கள் கஷ்டங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டனர். 


பாதுகாப்பின்மை 

மீள் குடியேற்றம் குறித்து அந்த மக்களிடம் கேட்டபோது, “ஏற்கெனவே எங்களை அடித்து துரத்தி விட்டனர். நாங்கள் மீண்டும் எங்கள் வீடுகளுக்குச் சென்றால் எங்கள் உடலில் உயிர் மிஞ்சாது. அரசு பாதுகாப்பளித்தால் மட்டுமே நாங்கள் அங்கு செல்ல முடியும். அதுவும் அங்கு எங்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பு வேண்டும். ஏனென்றால் “போடோக்கள்” துப்பாக்கி, வெடிகுண்டு போன்ற ஆயுதங்களுடனும், போலீஸ் (சி.ஆர்.பி.எஃப்) மற்றும் இராணுவ உடையணிந்தும் எங்களைத் தாக்கினர். எங்கள் வீடுகளை கொள்ளைடியத்தனர், எங்கள் வீட்டிலிருந்த கால்நடைகளையும் கொன்றனர். எங்கள் வயல் வெளிகளை தீயிட்டு கொளுத்தி விட்டனர். இறுதியாக எங்கள் வீடுகளையும் தீ வைத்துக் கொளுத்தி, புல்டோசர் வைத்து தரைமட்டமாக்கி அனைத்தையும் வெட்ட வெளி சமதளங்களாக ஆக்கிவிட்டனர். இனி நாங்கள் அங்கே சென்றாலும், எங்கே சென்று எங்கள் வீடுகளைத் தேடுவோம்? எங்கள் வயல் வெளிகளில் எப்படி உழுது அறுவடை செய்வோம்? 


1993 முதல் இதேப்போன்று நடைபெற்ற “போடோ தீவிரவாதி”களின் தாக்குதலில் வெளியேற்றப்பட்டு இன்று வரை அகதிகள் முõகம்களில் வாடிக்கொண்டிருக்கும் அப்துல் ஸலாம் என்பவர் நம்மிடம் கூறியதை கேளுங்கள்.“அப்போது எனக்கு வயது 5 அல்லது 6 இருக்கும். ‘போடோ’க்கள் எங்கள் வீடுகளிலிருந்து அடித்து துரத்தினர். நாங்கள் பொங்கே காவ் அகதிகள் முகாம்களில் இருந்தோம். இதனால் எனது படிப்பு பாழானது. அரசு எங்களுக்கு வழங்கியதோ வெறும் 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம். ஆறு மாதம் கழித்து அரசு பாதுகாப்பு கொடுப்பதாக வாக்குறுதியளித்து எங்களை மீண்டும் எங்கள் கிராமங்களில் மீள் குடியமர்த்தியது. சில மாதங்கள் மட்டுமே பாதுகாப்பு வழங்கியது. 


அதன் பிறகு நாங்கள் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளானோம். எங்கள் மீன் பண்ணைகளை அவர்கள் நாசப்படுத்தினர். சந்தைக்கு வியாபாரம் செய்யச் செல்லும் போது எங்களை தாக்கினர். வயல் வெளிகளில் உழுது விவசாயம் செய்ய முடியவில்லை.சாப்பாட்டிற்கு வழியின்றி திண்டாடினோம். மீண்டும் அச்சுறுத்தலுக்கு ஆளானோம். எனவே ஆறு மாதத்திற்கு எங்கள் கிராமங்களில் வசிக்க முடியாமல் மீண்டும் அகதிகள் முõகம்களுக்கே வந்துவிட்டோம். அதன்பிறகு எனக்கு பள்ளிப்படிப்பு கிடைக்கவில்லை. மதரசாவில் ஓதி பட்டம் பெற்று இப்போது ஆலிமாக இருக்கின்றேன். எங்கள் ஊரில் எங்களுக்கு 60 பக்கா (20 ஏக்கர்) நிலம் சொத்தாக இருந்தது. அவை அனைத்தையும் இழந்து 18 வருடங்களாக இப்போதும் நாங்கள் அரசு உருவாக்கிய அகதிகள் முகாம்களில் வாடிக் கொண்டிருக்கின்றோம்” என கண்ணீர் மல்க கூறினார். 


 













தேவையான நிவாரணப் பொருட்கள் 


நமது சர்வேயில் இப்போதைக்கு தேவையான அடிப்படை என்னென்ன என்பதை கண்டறிந்து அவøற்றை ஒவ்வொரு கட்டமாக வழங்க திட்டமிட்டுள்ளோம். 


1. குழந்தைக்ளுக்கான உணவு 12,000 

2. ஆண்களுக்கான லுங்கி மற்றும் டி.சர்ட் 35,483 

3. பெண்களுக்கான ஆடைகள் 
சேலை, ஜாக்கெட்,உள்பாவாடை மற்றும் சுடிதார், மேக்ஸி 33,411 

4. குழந்தைகளுக்கான ஆடைகள் டவுசர், டி.சர்ட். ஃப்ராக் 22,399 


குடிநீர் வைக்க மூடிபோட்ட பக்கெட் 24,434 


சாப்பாட்டு தட்டு 24,434 


சர்வே ரிப்போர்ட் 


சர்வே நடத்தப்பட்ட மாவட்டங்கள் 5 


மொத்தம் உள்ள அகதிகளின் 


எண்ணிக்கை 99,160 


முகாம்களின் எண்ணிக்கை 129 


குடும்பங்களின் எண்ணிக்கை 24,434 


ஆண்களின் எண்ணிக்கை 40,485 


பெண்களின் எண்ணிக்கை 36,101 


குழந்தைகளின் எண்ணிக்கை 22,399 


கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை 609 


ஆதிவாசிகளும் 


போடோ தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பயந்து ஆதிவாசிகளும் அகதிகள் முகாம்களில் முஸ்லிம்களுடன் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


போட்டி முகாம்கள் 

இக்கலவரத்தில் போடோக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு மாயையை ஏற்படுத்துவதற்காக போலியான போட்டி முகாம்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 50 முகாம்களில் (நாம் பார்த்த எண்ணிக்கை அல்ல, கேட்ட எண்ணிக்கை) போடோக்களும் தங்கி தமக்கு நெருக்கடி கொடுப்பதாக முஸ்லிம் அகதிகள் நம்மிடம் கூறினர். 


மூன்றாவது கட்ட நிவாரண பணிகள் 

ரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் சார்பாக மூன்றாவது கட்ட நிவõரண பணிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணை தலைவர் முஹம்மது அலி ஜின்னா அவர்கள் செப்டம்பர் 19,2012 அன்று தொடங்கி வைத்தார். குழந்தைகளுக்கான உணவு பொருட்கள், சமையல் பாத்திரங்கள், துணிமனிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் சிராங் மாவட்டத்தின் ஒன்பது நிவாரண முகாம்களில் வழங்கப்பட்டன. கோரைமாரி துவக்க பள்ளி, கோரைமாரி மதரஸா, லோகிபூர் துவக்கப்பள்ளி, கவாதிக்கா துவக்க பள்ளி, கவாதிக்கா இடைநிலை பள்ளி, கவாத்திகா சிசு பர்ஸாலா, மோமோகாஷா துவக்க பள்ளி, மோமோகாஷா மதரஸõ மற்றும் டுடூரி டுலோமி மாடர்ன் அகாடமி ஆகிய இடங்களில் நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. 


ஆரிஃப் ஃபைசல் (தமிழ்நாடு செயலாளர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா) வழக்கறிஞர் முஹம்மது யூசுஃப் (தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா) அப்துல் ஹமீது மற்றும் அப்துல் ஸமது (கேரள மாநில செயற்குழு உறுப்பினர்கள், பாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா) அமீனுல் ஹக், ரஃபீகுல் இஸ்லாம், ஆஸம் கான் (ரிஹாப் ஒருங்கிணைப்பாளர்கள்) ஆகியோரும் நிவாரண பொருட்களை வழங்குவதில் ஈடுபட்டனர்.முதல் தினத்தில் மட்டும் 1032 குடும்பங்களை சõர்ந்த 4,654 மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அமாதங்கள் முழுவதும் பல்லாயிரகனகான மக்களுக்கு உதவிகள் வழங்கபட்டது. மேலும் அறிய இந்த லிங்கை கிளிக் செய்யவும் 
 
நான்காம் கட்ட உதவிகள் 


  

அரசின் உறுதியான நடவடிக்கை தேவை 

199394 கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வீடுதிரும்ப முடியாமல் 18 வருடங்களாக இன்றும் அகதிகள் முகாம்களில் உள்ளனர். இப்போது நடைபெற்ற கலவரத்திலும் இலட்சக்கணக்கானோர் புதிய அகதிகளாக மாற்றப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் உள்ளனர். 


வெற்று வாக்குறுதிகளை வழங்கிய மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்ப்பட்டு இந்த மக்களின் மீள் குடியேற்றத்திற்கான உறுதியான நடவடிக்கைகளை காலம் தாழ்த்தாது போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். மேலும் அந்த மக்களுக்கு அச்சத்தைப் போக்கும் வகையில் நிரந்தரப் பாதுகாப்பு வழங்க வேண்டும். கலவரத்தில் ஈடுபட்ட “போடோ தீவிரவாதி”கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே மனசாட்சியுள்ள மக்களின் வேண்டுகோள்! நிறைவேற்றுமா அரசு?

நன்றி :
விடியல் வெள்ளி நவம்பர் மாத இத

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza