Monday, July 9, 2012

பெரியப்பட்டிணத்தில் நடந்தது என்ன? – தூது நிருபரின் நேரடி அலசல்!


நேற்று முன்தினம் மதியம் கலைஞர் டி.வியில் பரபரப்பான ஃப்ளாஷ் நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது கண்டு பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டிணம் கடலோர கிராமத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வந்து பயிற்சி பெற்ற தீவிரவாதிகளை போலீஸ் பிடித்துச் சென்றது என்பதுதான் அந்த செய்தியின் சாராம்சம். இச்செய்தி பல்வேறு மீடியாக்களில் பலவிதமாக வெளியாகியிருந்தது.

அமைதிப் பூங்காவாக திகழும் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக மீடியாக்களில் வெளியான இச்செய்தியின் உண்மை நிலைக்குறித்து அறிய தூது சார்பாக விசாரணையை துவக்கினோம்.

இதுத்தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் காலித் அவர்களை நாம் தொடர்பு கொண்டோம். அப்பொழுது அவர் கூறியது: “வலிமையான இந்திய தேசத்தை உருவாக்கவேண்டும் என்ற அடிப்படையில் ‘ஆரோக்கியமான சமுதாயம்! ஆரோக்கியமான தேசம்!’ என்ற கொள்கையை வகுத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு உடற்பயிற்சிகள், சுயமுன்னேற்றம், நல்லொழுக்க பயிற்சிகளை அளித்து வருகிறது. இப்பயிற்சிகள் வெளிப்படையாக அதுவும் காவல்துறையினருக்கு தெரிந்தே நடைபெறுவதால் இதில் ரகசியம் எதுவும் இல்லை.

இப்பயிற்சியின்  ஒரு பகுதியாகத்தான் இயற்கையான சூழலில் அமைந்துள்ள கடலோர கிராமமான பெரியப்பட்டிணத்தில் பாப்புலர் ஃப்ரண்டிற்கு சொந்தமான திடலில் வைத்து கடந்த 22-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை தனி மனிதனை பன்படுத்துதல், சுய முன்னேற்றம், நேரம் நிர்வாகம், தகவல் தொடர்பு பரிமாற்றம், யோகாசனம், மெல்லோட்டம், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்கல்வி, பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண மேலாண்மை ஆகிய வகுப்புகள் நடந்து வந்தன. இப்பயிற்சி முகாமில் வட மாநிலங்களில் இருந்தும் பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

நாங்கள் மேற்கொள்ளும் எல்லாப் பயிற்சிகளைப் பற்றியும் ஒவ்வொரு முறையும் காவல் துறையினருக்கு முறையாக தகவல் தெரிவத்துவிடுவது வழக்கம். இந்த முறை வேலை பளுவுக்கு மத்தியில் காவல் துறையினடரிடம் இப்பயிற்சி பற்றி PFI-ன் மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் மாவட்ட காவல் துறைக்கும் நடக்கும் நிகழ்ச்சி பற்றி முழுவதுமாகத் தெரியும்.”


தூது நிரூபர்:நீங்கள் கூறுவதைப் பார்க்கும்பொழுது கடந்த 22-ஆம் தேதியில் இருந்து காவல்துறைக்கு நீங்கள் பயிற்சி முகாம் நடத்துவது முழுமையாக தெரிந்துள்ளது. அவ்வாறெனில் காவல் துறை நேற்று ஏன் ‘இந்த அதிரடி சோதனை நடத்தியது’, அதுவும் எல்லா மீடியாக்களையும் இராமநாதபுரத்திற்கு வரவழைத்து எப்படி இந்த திட்டத்தை நடத்தியது மற்றும் இதன் பின்னணி என்ன? இதுப்பற்றிய முழுமையாக கூற முடியுமா?

காலித்:25/06/2012 அன்று பகல் 2.30 மணி இருக்கும், 19 வேனில் 4 டி.எஸ்.பிக்கள்,  12 இன்ஸ்பெக்டர்கள்,  26 சப் இன்ஸ்பெக்டர்கள்,  50க்கும் மேற்ப்பட்ட அதிரடிப் படையினரும் தனியார் நிலத்தின் உரிமையாளரிடம் எந்த ஒரு அமைதியின்றி திடுதிப்பென சரியாக அனைவரும் ‘ஓய்வு நேரத்தில்’ இருக்கும் பொழுது அந்த தோட்டத்திற்குள் நுழைந்தனர். அங்கு இருந்த அனைவரையும் எந்த ஒரு சட்ட நடைமுறைகளையும் பின்பற்றாமல் கொண்டு வந்த வேனில் ஏற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லாமல் முன்பாகவே திட்டமிட்டு இருந்தபடி ராமநாதபுரம் ரிசர்வ் போலீசாருக்கான தங்குமிடத்தில் உள்ள ‘சமூக கூடத்தில்’ வட மாநிலத்தைச் சார்ந்த PFI  உறுப்பினர்களை அடைத்து வைத்தனர். அங்கு சென்ற PFI உறுப்பினர்களையும், சந்திக்க முயன்ற என்னையும் (காலித்) உள்ளே அனுமதிக்கவில்லை.

இந்த ஜனநாயக நாட்டில் எங்களது உறுப்பினர்களைக் கூட சந்திக்க அனுமதி வழங்க என்ன பிரச்சினை என்று வாக்குவாதம் கிளப்பியதும் PFI-ன் ராமநாதபுரம் மாவட்டத் தலைவரான என்னை உள்ளே அனுமதித்தனர்.
இதில் என்னவென்றால், இந்த சதித் திட்டத்தை முன் கூட்டியே திட்டமிட்டுள்ளனர் என்பதை நமது PFI-ன் ராமநாதபுர மாவட்ட உறுப்பினர்களும், பொது மக்களும் வந்து குவிய ஆரம்பிக்கும் பொழுது வந்திருந்த மீடியாக்கள் அனைத்தும் படம் பிடித்ததில் இருந்து புரிந்துகொள்ள முடிந்தது.

தமிழகத்தில் உள்ள ஏறத்தாழ முப்பது மீடியாக்களை முன் கூட்டியே அழைத்திருந்தனர் காவல் துறையினர்.
அங்கிருந்து ஒரு டி.எஸ்.பியோ, இது ஒரு ஃபார்மல் என்கொயரி தான். உடனே விட்டு விடுவோம் என்று 3:40-க்கு உறுதி கொடுத்தும் இரவு 8:30 மணியான பிறகும் விடுவிக்கவில்லை.
இந்தியாவில் உள்ள அனைத்து உளவு நிறுவனங்களும், SIU, RAW, IB, OCU மற்றும் கிட்டத்தட்ட  10 உளவு நிறுவனங்களும் அங்கு குவிந்து விட்டனர்.

கைது செய்த PFI-ன் வட மாநில உறுப்பினர்களில் அனைவரின் பெயர், முகவரி, கை ரேகை ஆகியவற்றை பதிவுச்செய்து ஒவ்வொருவருக்கும்  கோப்புகளை உண்டாக்குவதற்கே அவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டனர்.

PFI-ன் உறுப்பினர்கள் அனைவரும் போலீஸ் மற்றும் உளவுத் துறையினரின் அனைத்து விசாரணைக்கும் எவ்வித தயக்கமும் இன்றி முழுமையாக ஒத்துழைத்தனர்.

இதற்கிடையில் ராமநாதபுர மாவட்ட PFI உறுப்பினர்களும், பொது மக்களும் தொடர்ந்து வடமாநில பி.எஃப்.ஐ உறுப்பினர்களை அடைத்து வைத்திருந்த சமூக கூடத்திற்கு வெளியே குவியத் தொடங்கினர். PFI-யினரின் அழகிய கட்டுப்பாட்டினை இதில் பார்க்கமுடிந்தது.

தேசிய நெடுஞ்சாலையில் எந்த வித போக்கு வாரத்திற்கும் இடைஞ்சல் இன்றி ரோட்டின் ஓரத்திலேயே மக்ரிப் மற்றும் இஷா தொழுகையை சேர்த்து மொத்தமாக பொது மக்களும் பி.எஃப்.ஐ உறுப்பினர்களும் நடத்தினர்.

தொடர்ந்து கைது செய்யப்பட்ட PFI உறுப்பினர்கள் விடுவிக்காததால் PFI-ன் சட்டக் குழு (அட்வகேட் அலாவுதீன், அட்வகேட் அப்பாஸ், அட்வகேட் நிஜாமுதீன் மற்றும் அட்வகேட் ஒலி) அங்கு வந்து சேர்ந்தது. அவர்களையும் சமூகக் கூடத்திற்கு உள்ளே விடாமல் தடுத்தனர்.

“ஜனநாயக நாட்டின் உடற்பயிற்சி செய்யும் எங்களது இயக்க உறுப்பினர்களை சந்திக்க வழக்கறிஞகளுக்கே அனுமதி இல்லையா?” என்று வாக்குவாதம் நடத்தியதும் சட்டக் குழுவை உள்ளே செல்ல அனுமதித்தனர்.

“இந்திய சமூகத்தில் முஸ்லிம்கள் ‘தண்டால்’ எடுப்பது குற்றம் என்றால் நீதிமன்றத்தில் ஒரு சட்டம் கொண்டு வாருங்கள் அல்லது தீர்ப்புப் வழங்குங்கள் என்று நமது சட்டக் குழு காரசார விவாதம் நடத்தியது.

எல்லா விசாரணைகளையும் முடித்திருந்த நிலையில் யாருடைய உத்தரவிற்கோ உளவுத் துறையினரும், காவல் துறையினரும் காத்திருந்தது போல் தோன்றியது. வெளியே கூடியிருந்த பொது மக்களோ அமைதி இழந்து கொண்டு இருந்தனர். PFI-யின் உறுப்பினர்கள் பொது மக்களை தங்களது கட்டுப்பாட்டில் அமைதியாக வைத்திருந்தனர்.

பொது மக்களின் ஆதரவையும் குழுமியிருந்த இளைஞர்கள் அனைவரும் PFI பின்னால் நிற்பதை கண்ட அதிகாரிகள் வேறு வழியின்றி மேலிட உத்தரவுப் படி கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

PFI-யின் உடற்பயிற்சி வகுப்புகளின் இறுதி பயிற்சி 26.06.2012 பகல் முடிவடிவதால், வட மாநில PFI உறுப்பினர்களும் பொதுமக்களும் அனைவரும் அங்கிருந்து அமைதியாக பெரியபட்டினம் திரும்பினர். அன்று இரவே வந்திருந்த அனைவருக்கும் SDPI-யின் ராமநாதபுரம் துணைத்தலைவர் அப்பாஸ் ஆலிம் அவர்கள் அழகிய உரை ஒன்றை நிகழ்த்தினார்கள்.

“முஸ்லிம் சமூகத்தின் மிகப் பெரிய வெற்றி இது. கைது செய்து ஆறு மணி நேரத்தில் எல்லாரையும் விடுவித்தது, நம் சமூகத்தின் ஒற்றுமையின் பலன், சக்தி” என்று எடுத்தியம்பினார்கள். அதே சமயம் ‘ஒற்றுமையின்றி சமூகத்தை காட்டிக் கொடுக்கும் வேலையை செய்தால் நடக்கும் தீமைகளையும் விவரித்தார்கள்’. அப்படிச் செய்தால் ‘சமூகம் வீணாகிப் போகும்’ என்றார்கள். இந்த இரவு நிகழ்ச்சி 40 நிமிடங்கள் நடந்தது.

தூது நிருபர்: இச்சம்பவத்தை மீடியாக்கள் எவ்வாறு பார்த்தது?

காலித்:விசாரணை நடக்கும் பொழுதே கலைஞர் டி.வி தான் முத்த முதலாக அவதூறு செய்தியை பிளாஷ் நியூசாக ஒளிபரப்பியது.

‘வட மாநிலத் தீவிரவாதிகள் பயிற்சி, 30 பேர் கைது’ என்று உடனே அதனைக் காப்பியடித்து சத்யம் டி.வியும் அவதூறு பரப்பியது.

விசாரணை நடக்கும் இடத்திலேயே PFI-யின் பிரஸ் மீட் நடந்தது. PFI-யின் பணி பற்றிய செய்தியை பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் முதலில் வந்த அவதூறுச் செய்திகளே தொடர்ந்து வந்துகொண்டிருந்தது.

நாம் அளித்த ப்ரஸ் மீட்டிற்கு பின்னர் தினத்தந்தி, தினகரன் ஆகிய பத்திரிகைகள் PFI-யின் மறுப்புச் செய்தியை வெளியிட்டது.

சத்யம் டிவியும் பிளாஸ் நியூசை உடனடியாக நிறுத்தி விட்டது. PFI-யின் அனைத்துப் பணிகளும் அங்கே அழகாக எடுத்துரைக்கப்பட்டது. சத்யம் டிவியினர் தங்களது தவறை உணர்ந்து மன்னிப்புக் கோரினர்.

அனைத்து ஊடகங்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட செய்திகள் காவல் துறையினர் பக்கம் இருந்து கொடுக்கப்பட்ட தவறான செய்திகள் என்று தங்களது மேலிடங்களுக்கு தெரிவித்தனர்.
 இவ்வாறு காலித் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று காலை (26.06.2012) PFI-யின் தமிழக பொதுச் செயலாளர் காலித், மாநில செயற்குழு உறுப்பினர் அட்வகேட் யூசுப், நஸ்ருதீன் மற்றும் PFI-யின் மாவட்டத தலைவர் காலித் ஆகியோர் ப்ரஸ் மீட்டினை(செய்தியாளர்கள் சந்திப்பு) நடத்தினர். தமிழகத்தில் உள்ள 22 ஊடகங்கள் இந்த ப்ரஸ் மீட்டில் கலந்துக் கொண்டன. நடந்த நிகழ்ச்சியினை விளக்குவதற்கு முன்பாக PFI-யின் சமூகப் பணியினை தெளிவாக எடுத்துரைத்த பொதுச்செயலாளர் காலித் அவர்கள், பின்னர் பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளித்தார்.

இச்சம்பவத்தை பொதுமக்கள் பார்த்த விதம்

அங்கு குழுமியிருந்த பொது மக்களிடம் இச்சம்பவம் குறித்து கருத்து கேட்டபொழுது அவர்கள் கூறியது:

‘PFI-யினர் எப்பொழுதும் போல் இன்றும் இந்த உடற்பயிற்சியை செய்தனர். இந்நிலையில் ஏன் இப்படியொடு கைது நாடகம் நடத்த வேண்டும்’ என்று ஆச்சரியத்துடன் கேட்டனர்.

ஒரு பெண்மணி: இது என்ன புது கதையா இருக்கு என்றார். விசாரணை நடக்கும் பொழுது அங்கு இருந்த ஒரு போலீஸ்காரர், “ஆர்.எஸ்.எஸ் காரனும் பயிற்சி அளிக்கிறான். அது போல முஸ்லிம்களும் பயிற்சி எடுக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

இன்னொரு போலீஸ்காரர், “இளைஞர்கள் அனைவரும் இவர்களுக்கு(பி.எஃப்.ஐ) பின்னால் உள்ளனர்” என்று கூறியுள்ளார்.

நமது விசாரணையில் இருந்து தெரிய வருவது என்னவென்றால் இந்த முழுத் திட்டத்திற்கும் டி.ஐ.ஜி ராம சுப்ரமணியமும், எஸ்.பி காளிராஜ் மகேஷ் குமாரும் தான் காரணமாம். எஸ்.பி காளிராஜின் தலைமையில் தான் இந்த சதித்திட்டம் அரங்கேற்றப்பட்டதாக விஷயம் தெரிந்தவர்கள் கூறுகின்றார்கள்.
ஆர்.எஸ்.எஸ் போன்ற சங்க்பரிவார தீவிரவாத இயக்கங்கள் பகிரங்கமாக பல்வேறு மாநிலத்தவர்கள் கலந்துகொள்ளும் பயங்கரமான ஆயுதப் பயிற்சி உள்ளிட்ட முகாம்களை தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் நடத்தி வருகின்றன.

ஆனால், இதுக்குறித்து காவல்துறையோ, மீடியாக்களோ கண்டுகொள்வதேயில்லை. ஆனால், முஸ்லிம்கள் தங்களது வாழ்க்கையை முன்னேற்றி சிறந்த குடிமகனாக வாழத் தேவையான சுயமுன்னேற்றம் மற்றும் நல்லொழுக்க பயிற்சி முகாம்களை நடத்தினால் அவற்றை தீவிரவாதமாக சித்தரிக்கும் போக்கை காவல்துறையும், மீடியாக்களும் தங்களது வாடிக்கையாக மாற்றியுள்ளன. முஸ்லிம் விரோதப்போக்கு தமிழக காவல்துறையிடமும், மீடியாக்களிடமும் எவ்வளவு தூரம் புரையோடிப் போயிருக்கிறது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம் ஆகும்.

பிற மாநிலத்தைச் சார்ந்த முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகளாக சித்தரித்து அவர்களை கைது செய்ததால் சாதனையாளர்களாக மாறிவிடலாம் என்ற காவல்துறையின் திட்டத்தையும், செய்தி பஞ்சத்தைப் போக்க கொஞ்ச நாட்கள் தமிழக மக்களை பீதிவயப்படுத்தும் செய்திகளை வெளியிடலாம் என்ற மீடியாக்களின் கனவையும் பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்களும், பெரிய பட்டினம் மக்களும் தவிடு பொடியாக்கியுள்ளனர்.

அப்பாவிகளை கைதுசெய்த காவல்துறையின் அநீதமான நடவடிக்கையை எதிர்த்து ஒற்றுமையுடன் ஒன்றி திரண்டு காவல்நிலையத்தில் திரண்டு குரல் கொடுத்த பெரிய பட்டினம் கிராம மக்கள் மற்றும் பி.எஃப்.ஐயினருக்கு எமது பாராட்டுக்கள்.

தூது நிருபர்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza