Tuesday, January 31, 2012

கூடங்குளம் போராட்டக்கா​ரர்கள் மீது இந்து முன்ன​ணி தீவிரவாதிக​ள் தாக்குதல் – ​10 பேர் கைது

kudankulam-nuclear-plant-295
திருநெல்வேலி:இந்தியாவின் நச்சுக்கிருமியாக மாறியுள்ள ஹிந்துத்துவா பாசிச பயங்கரவாதிகள் எப்பொழுதுமே மக்கள் நலனையோ, நாட்டு நலனையோ கருத்தில் கொள்ளமாட்டார்கள் என்பது அடிக்கடி அவர்களின் நடவடிக்கைகளே நிரூபித்து வருகின்றன.

நாட்டின் பொருளாதாரத்தையும், மக்களின் நல்வாழ்வையும் கருத்தில் கொண்டு மத்திய அரசால் திட்டமிடப்பட்ட சேது சமுத்திரத் திட்டத்தை முறியடிக்க ராமர் பாலம் என்ற பொய்யை பரப்பி அத்திட்டத்தை சீர்குலைத்தார்கள்.

ஆனால் கூடங்குளம் அணுமின்நிலையத்தால் ஏற்படும் தற்கால, எதிர்கால அபாயங்களைக் குறித்து அஞ்சி அப்பகுதி சார்ந்த மக்களும், அணு உலை எதிர்ப்பாளர்களும் நடத்திவரும் மனம் தளராமல் தொடர்ந்து நடத்திவரும் போராட்டத்தை ஆரம்பம் முதலே நாடு மற்றும் மக்கள் நலனில் கிஞ்சிற்றும் அக்கறையில்லாத இந்து முன்னணி போன்ற ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் தேசப்பற்று என்ற போலியான போர்வையை போர்த்திக்கொண்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள்.

இந்நிலையில் நீதிக்காக போராடும் ஆர்வலர்கள் மீது ஹிந்து முன்னணி பாசிச வெறியர்கள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இச்சம்பவம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடந்துள்ளது. இத்தாக்குதல் தொடர்பாக போலீசார் 10 பேரை கைது செய்துள்ளனர்.

கூடங்குளம் அணு உலை தொடர்பாக எதிர்ப்பாளர்களுடன் மத்திய அரசு அமைத்த குழு இன்று 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த இருந்தது. இதற்காக 12பேர் கொண்ட அரசு குழுவினர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருந்தனர்.

இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக கூடங்குளம் போராட்டக் குழு நிர்வாகிகளுடன் இடிந்தகரையைச் சேர்ந்த 50-க்கு மேற்பட பெண்களும் ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்திருந்தனர். அப்போது நெல்லை மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் துணைத் தலைவர் ஜெயக்குமார் தலைமையிலான ஒரு குழுவினரும் அங்கு வந்தனர்.

நாட்டுக்கு அவசியமான அணு உலையை எதிர்க்கும் தேச துரோகிகளுடன் ஏன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர். இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறில் தொடங்கிய மோதல் வன்முறையாக மாறியது.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் வந்த வாகனங்கள் கல்வீசித் தாக்கப்பட்டன. அவர்கள் மீது காலணிகளும் வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுமார் 20 நிமிட நேரம் நெல்லை மாவட்ட் ஆட்சியர் அலுவலகம் போர்க்களமாக மாறியது. இதனால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதற்றமான சூழல் நிலவியது.

தாக்குதலை நடத்தியோரை கைது செய்ய வலியுறுத்தி நெல்லை மாவட்ட் ஆட்சியர் அலுவலகம் முன்பாக கூடங்குளம் போராட்டக் குழுவினர் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் இனி மத்திய அரசு அமைத்துள்ள குழுவுடன் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என்று அறிவித்துவிட்டு கூடங்குளத்துக்கு அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

கூடங்குளம் போராட்டக்குழுவினர் தாக்குதலைத் தொடர்ந்து பேச்சுவார்த்தையைப் புறக்கணித்து விட்டு வெளியேறியதால், 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

மேலும் தங்களை இந்து முன்னணியினருடன் காங்கிரஸ் கட்சியினரும் இணைந்து தாக்கியதாக போராட்டக் குழுத் தலைவர் உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனிடையே இத்தாக்குதல் தொடர்பாக இந்து முன்னணியைச் சேர்ந்த 10 பேரை கைது செய்திருப்பதாக நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கருணாசாகர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் சம்பவத்தால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்காக வந்திருந்த மத்திய குழுவுடன் நெல்லை மாவட்ட கலெக்டர் அவசர ஆலோசனை நடத்தினார். இதுகுறித்த விவரம் வெளியிடப்படவில்லை.

கூடங்குளத்தில் பதட்டமான சூழல்

போராட்டக் குழுவினர் மீது குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட செய்தி காட்டுத் தீயாக பரவியது. தாக்குதலைக் கண்டித்து கூடங்குளம் அணு உலையை 500 க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டுள்ளனர்.

கூடங்குளம், இடிந்தகரை, உவரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் தேவாலய மணி அடிக்கப்பட்டு பொதுமக்கள் ஒன்று திரண்டனர். தாக்குதலுக்குள்ளான போராட்டக் குழுவினரும் கூடங்குளம் நோக்கி விரைந்தனர்.

கூடங்குளத்தில் வாகனப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. கூடங்குளம் சுற்றுவட்டார கிராமங்களில் பதட்டமான சூழல் நிலவுவதால் பெருமளவிலான போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza