Tuesday, December 6, 2011

பாப்ரி மஸ்ஜிதை மீட்க மதசார்பற்ற சக்திகள் ஒன்று திரளவேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட் தமிழக தலைவர் கோரிக்கை

Flag
சென்னை:பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு19 ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாப்ரி மஸ்ஜிதை மீட்க மதசார்பற்ற சக்திகள் ஒன்று திரளவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முஸ்லிம்களின் இறை இல்லமான பாப்ரி மஸ்ஜித் சங்க்பரிவார மதவெறியர்களால் தகர்க்கப்பட்டு இன்றோடு19 வருடங்கள் நிறைவடைகின்றன. ஆனால் முஸ்லிம்களுக்கு இன்றும் நீதி கிடைக்கவில்லை.

பாப்ரி மஸ்ஜித் இடிப்பை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி லிபர்ஹான் கமிஷன்,ஏறத்தாழ 8 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை அதற்காக செலவிட்டு, 17 வருடங்கள் அதனை விசாரித்து சங்க்பரிவார தலைவர்கள் உள்ளிட்ட 68 பேரை இதில் குற்றவாளிகள் என கடந்த 2009-ஆம் ஆண்டு மத்திய அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்தது. ஆனால் அந்த அறிக்கையின் மீது எந்த வித நடவடிக்கையுமின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

பட்டப்பகலில் ஒட்டுமொத்த உலகமும் பார்த்துக் கொண்டிருந்த போது நடைபெற்ற பாப்ரி மஸ்ஜித் இடிப்பை பல்வேறு தொலைக்காட்சி சேனல்கள் அவற்றை ஒளிபரப்பு செய்தன. குற்றவாளிகள் யார் என தெளிவாக அதில் தெரிந்தது. லிபர்ஹான் கமிஷனும் குற்றவாளிகளை அடையாளம் காட்டியது. ஆனாலும் அந்த சங்க்பரிவார குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு ஏன் தண்டிக்கப்படவில்லை? என நடுநிலையாளர்கள் அனைவரும் கேள்வி எழுப்புகின்றனர்.

முஸ்லிம்களுக்கு சொந்தமான பாப்ரி மஸ்ஜிதை மூன்றாக பங்கு வைத்து இந்துக்களுக்கு2 பங்கு, முஸ்லிம்களுக்கு ஒரு பங்கு என பாப்ரி மஸ்ஜித் நில உரிமை வழக்கில் கடந்த வருடம் செப்டம்பர் 30-ஆம் நாள் அலகபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பிற்கு பிறகும் முஸ்லிம் சமூகம் அமைதி காத்தது. இதற்கு காரணம் நீதியின் வாயில்கள் இன்னமும் அடைபடவில்லை; உச்ச நீதிமன்றத்திலாவது நமக்கு நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையுமே அது காட்டுகிறது.

பாப்ரி மஸ்ஜித் ஆக்கிரமிப்பு மற்றும் இடிப்பு விவகாரத்தில் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு உச்சநீதிமன்றம் அநீதி இழைத்த போதிலும், அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய சட்டவிரோத தீர்ப்பிற்கு தடைவிதித்ததன் மூலம் பாப்ரி மஸ்ஜித் நில உரிமை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தங்களுக்கு நீதி கிடைக்கும் என முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கின்றது. அதே போன்று நீதி கிடைக்கும் என பாப்புலர் ஃப்ரண்டும் நம்புகிறது.

நீதிக்கான போராட்டம்

அநீதி இழைக்கப்பட்ட சமூகம் – வஞ்சிக்கப்பட்ட சமூகம் நீதிக்காக தொடர்ந்து போராட வேண்டும். நீதியின் கதவுகள் திறக்கும் வரை அது போராட வேண்டும். நீதிக்காக ஒரு சமூகம் ஏங்கிக் கொண்டிருக்கின்றது என்ற குரல் ஆட்சியாளர்களின் கவனத்தை எட்டவேண்டும். ஏனென்றால் அநீதி இழைக்கப்பட்ட தமது குடிமக்களுக்கு அதனை மீட்டுத்தரும் வகையில் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவது அரசின் கடமை.

ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும்பொழுது தங்களுடைய சுயலாபத்தை மனதிற்கொண்டு பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க பாடுபடுவதாக போலி வாக்குறுதி அளிப்பதை விட்டுவிட்டு, உண்மையிலேயே முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்க மதசார்பற்ற அரசியல் கட்சிகள் முன்வரவேண்டும். இதனை வலியுறுத்தும் விதமாக நீதி கிடைக்கும் வரை நாம் தொடர்ந்து போராடவேண்டும்.

பாப்புலர் ஃப்ரண்டின் போராட்ட வியூகங்கள்

தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்தின் அவல நிலையை கண்டு, இளைஞர்கள் விரக்தியின் விளிம்பிற்கு சென்று தவறான பாதையை தேர்ந்தெடுத்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில், நீதியின்பால் நம்பிக்கை கொண்டு, சட்டரீதியாகவும், ஜனநாயக வழிமுறைகளிலும், போராடுவதற்கு கடந்த பல வருடங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மக்களை பயிற்றுவித்துக் கொண்டிருக்கின்றது.

தமிழகம் முழுவதும் கடந்த பல வருடங்களாக டிசம்பர் 6 அன்று பல்வேறு கருத்தரங்குகளை நடத்தி பாப்ரி மஸ்ஜித் மீட்பின் அவசியத்தை மக்களிடையே கொண்டு செல்கிறோம். பாப்ரி மஸ்ஜித் மீட்பு ஓர் வரலாற்று கடமை என்ற தலைப்பில் இந்த வருடம் சென்னை, கோவை, மதுரை, நெல்லை ஏர்வாடி, கும்பகோணம் ஆகிய இடங்களில் மாபெரும் கருத்தரங்குகளும், தமிழகம் முழுவதும் வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் வழியாக விழிப்புணர்வு நடத்துகின்றோம்.

பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் அதே இடத்தில் கட்டி தருவதாக காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரியும், நீதிபதி லிபர்ஹான் கமிஷன் பரிந்துரைத்த சங்க்பரிவார குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று தரக்கோரியும், அந்த அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்தக் கோரியும், பாப்ரி மஸ்ஜித் நில உரிமை வழக்கில் உச்சநீதிமன்றம் விரைந்து முஸ்லிம்களுக்கு நீதி வழங்கக் கோரியும் இந்த பிரச்சாரத்தை பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தி வருகின்றது.

மதசார்பற்ற சக்திகள் ஒன்று திரளவேண்டும்

பாப்ரி மஸ்ஜித் மீட்பிற்கான போராட்டத்தில் முஸ்லிம் சமூகத்துடன் மதசார்பற்ற சக்திகள் அனைத்தும் ஓரணியில் ஒன்று திரளவேண்டும். ஏனென்றால் பாப்ரி மஸ்ஜித் முஸ்லிம்களின் இறையில்லம் என்பது மட்டுமல்ல. நமது தேசத்தின் 450 ஆண்டுகால வரலாற்று சின்னம். மேலும் இது நமது தேசத்தின் மிகப்பெரும் சிறுபான்மையினரான முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக தேச விரோதிகளான சங்க்பரிவார ஃபாசிஸ்டுகள் நடத்திவரும் சதிச்செயலின் ஒரு பகுதியாகும். நாட்டின் இறையாண்மையையும், ஜனநாயகத்தையும்,மதசார்பற்ற தன்மையையும் பாதுகாக்க மதசார்பற்ற சக்திகள் அனைத்தும் ஓரணியில் ஒன்று திரள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும் என பாப்புலர் ஃப்ரண்ட் வேண்டுகோள் விடுக்கின்றது. இவ்வாறு ஏ.எஸ்.இஸ்மாயீல் கூறியுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza