Friday, December 2, 2011

முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரித்த ஊடகங்கள்

6429014957_7fe2f73f29
பாட்னா:பீகார் மாநிலம் மதுபானி மாவட்டதில் கடந்த 24ஆம் தேதி ஜமாலி மற்றும் முஹம்மது அஜ்மல் ஆகிய இரு இளைஞர்களை டெல்லி காவல்துறையினர் அப்பகுதி காவல்துறையினரின் உதவியோடு  கைது செய்தனர். அவர்கள் மீது என்ன குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது? அவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை டெல்லி காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் சில பத்திரிக்கைகள் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் தீவிரவாதத்தோடு தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டுள்ளனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத இயக்கத்தோடு தொடர்புடையவர்கள் என்று ஒரு சில பத்திரிக்கைகளும், டெல்லி, ஜும்மா மஸ்ஜித் மற்றும் பெங்களூர் கிருஷ்ண சாமி மைதானத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பிற்கு காரணமானவர்கள்  என்று சில பத்திரிக்கைகளும் செய்திகளை வெளியிட்டுள்ளது. மதுபானி மாவட்ட காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் ஜமாலி என்ற இளைஞர் வைக்கப்பட்டுள்ளார். இவர் மதரஸா பயிலும் மாணவர். பக்ரீத் பண்டிகயை கொண்டாடுவதற்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவரது தந்தை நஸருல் ஜமால் ஒரு ஹோமியோபதி மருத்துவராவார். ஜமாலி தனது வீட்டில் இருக்கும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

முஹம்மது அஜ்மல் என்ற இளைஞர் சிங்கானிய சவுக் என்ற ஊரில் மதுபானி காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார்.

டாக்டர் நஸருல் ஜமால் தன் மகன் ஜமாலி மீது சுமத்தப்பட்டிருக்கும் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மறுக்கிறார். “என் மகன் மீது அபாண்டமாக பொய் குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். இவை அனைத்தும் ஆதாரமற்றது. அவனுக்கு வயது 24 தான் ஆகிறது. தர்பங்காவிலுள்ள ஒரு மதரஸாவில் படித்துக்கொண்டிருக்கிறான். என் மகன் சிறந்த மார்க்க பேச்சாளர். அருகிலுள்ள சிறு கிராமங்களுக்குச் சென்று நிறைய மார்க்க சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளான். அரபியிலிருந்து உருதுவிற்கு மொழி மாற்றம் செய்வதில் திறமை வாய்ந்தவன். அவன் ஒரு போதும் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டதில்லை. அவனது வாழ்க்கையில் பீகார் மாநிலத்தை விட்டு மும்பையை தவிற  வெளியூர் சென்றதே இல்லை. அதற்கும் தனது சொந்தக்காரர்களை பார்ப்பதற்காக கடந்த 2009 ஆம் ஆண்டு தான் மும்பை சென்றிருந்தான்.” என்று ஜமாலியின் தந்தை கூறுகிறார்.

காவல்துறையினர் எனது மகனை கைது செய்ய வந்த போது ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் எனது மகன் பெயரில் பாஸ்போர்ட் கண்டெடுக்கப்பட்டதாக் கூறினர். ஆனால் எனது மகனிற்கு பாஸ்போர்டே கிடையாது. சமீபத்தில் அவன் மதரஸாவிற்கு பேருந்தில் சென்ற போது அவனது பை தொலைந்துவிட்டது. அதில் அவனுடைய பேன் கார்டு, புகைப்படங்கள், முகவரி ஆதாரங்கள் மற்றும் செல்ஃபோன் ஆகியவை தொலைந்து போனது.

அவனை கைது செய்வதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு காவல்துறையினர் ஃபோன் செய்து உனது மகனை இந்த வழக்கிற்காக தேடுகிறோம் என்று கூறினர். நான் உடனே எனது மகனை சிறிது காலம் தலைமறைவாக இருக்கும் படி சொன்னேன். அதற்கு அவனோ “நான் எந்த தவறும் செய்யவில்லை, எதற்காக காவல்துறையினர் என்னை கைது செய்யவேண்டும்” என்று கேட்டுவிட்டு மறுத்துவிட்டான்.

ஒரு நாள் எனது மகன் குளித்துக்கொண்டிருந்த சமயம் ஒரு நபர் வீட்டிற்கு வந்து உங்களது மகனின் பாஸ்போர்ட் தொலைந்துவிட்டதா? என்று கேட்டார். பின்னர் தான் தெரிந்தது வந்தவர் காவல்துறை அதிகாரின் என்று. இவ்வாறு ஜமாலியின் தந்தை நஸருல் ஜமால் கூறினார்.

கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் டெல்லி கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் காவல்துறை அவர்களை எதற்காக கைது செய்துள்ளது என்பதை பத்திரிக்கைகளுக்கு தெரிவிக்கவில்லை. அப்பகுதி காவல்துறையினர் கூறும்போது போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

தர்பங்கா மண்டல காவல்துறை அதிகாரி ஆர்.கே மிஸ்ரா கூறும் போது கைது செய்யப்பட்ட இருவர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உண்டு என்பதை உறுதியாக கூறமுடியாது. எதுவாயினும் விசாரணைக்கு பின்பே தெரியவரும் என்று கூறினார்.

தர்பங்கா மண்டல டி.ஐ.ஜியும் சுதன்சுவும் இதனையே கூறியுள்ளார். டெல்லி காவல்துறையினர் எங்களுடைய உதவியை நாடினர். அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து இருவரையும் கைது செய்ய உதவிசெய்தோம். ஆனால் எதற்காக கைது செய்யப்படுகிறார்கள் என்பதை டெல்லி காவல்துறையினர் வெளியிடவில்லை என்று சுதன்சு கூறினார்.

பீஹார் மாநில உள்துறை அதிகர் அமீர் சுபுஹானி கூறும் போது தர்பங்கா காவல் நிலையத்தில் அவர்கள் மீதான எந்த ஒரு எஃப்.ஐ.ஆர் (தகவல் முன் அறிக்கை) எதுவும் பதிவு செய்யப்படவில்லை. போலி பாஸ்போர்டு விவகாரத்தில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதேபோன்று பீகார் டி.ஜி.பி அபயானந்தாவும் கைது செய்யப்பட்டவர்களை தீவிரவாதிகளாக கூறவில்லை. டெல்லி காவல்துறையினர் கொடுத்த தகவலில் பேரிலேயே அவர்களை கைது செய்தோம் என்று கூறினார்.

இப்படி காவல்துறையினரும் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தார்களும் அவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதே இல்லை என்று கூற ஊடகங்கள் மட்டும் அந்த இரு இளைஞர்களை தீவிரவாத சக்திகளோடு தொடர்பு படுத்தி செய்தி வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பீகார் மாநிலத்திற்கே தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று செய்தி வெளியிட்டுள்ளது.

போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்க ஊடகங்கள் அவர்களை தீவிரவாதிகளோடு தொடர்பு படுத்துகின்றன. ஆங்கில முன்னோடி நாளிதழான “டைம்ஸ் ஆஃப் இந்தியா” தனது தலைப்பில் கூறும்போது “தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக 2 இளைஞர்கள் கைது” என்று செய்தி வெளியிட்டுள்ளது. இதே போன்ற செய்திகளை ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் பாட்னாவில் வெளிவரும் டெய்லி டெலிகிராஃப் போன்ற நாளிதழ்களும் வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் குற்றவாளிகளா? இல்லையா? என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அவர்கள் குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் அல்லது எத்தனையோ அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் இன்று கைது செய்யப்படுவதுபோல் அவர்களும் கைது செய்யப்பட்டிருக்கலாம். எதுவாயினும் அவற்றை முடிவு செய்யும் அதிகாரம் நீதிமன்றங்களில் கைகளில் உள்ளது.

ஆனால் இந்த ஊடகங்கள் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதில் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொள்கின்றனர். இவர்கள் வெளியிடும் இத்தகைய தவறான செய்திகளால் பல அப்பாவி இளைஞர்களில் வாழ்க்கை சீரழிந்து கொண்டிருக்கிறது.

கைது செய்யப்பட்டவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று நீதிமன்றங்கள் தெரிவித்தாலும் பெரும்பாலான பத்திரிக்கைகள் அதனை வெளியிடுவதில்லை. அப்படியே வெளியிடும் சில பத்திரிக்கைகள் மறுப்பு என்ற பெயரில் ஓரிரு வரிகளில் முடித்துவிடுவர். ஆனால் அவர்கள் வெளியிட்ட பொய்யான செய்தியால அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை இவர்களால் நிவர்த்தி செய்ய முடியுமா?

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza