Sunday, December 4, 2011

முல்லைப் பெரியாறு:பேச்சு வார்த்தையில் பங்கேற்க தமிழக அரசு மறுப்பு

Mullaperiyar-Dam

சென்னை:முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை தொடர்பாக டெல்லியில் நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தையில் தமிழக அரசு பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற திங்கள் கிழமை(டிசம்பர் 5) அன்று தமிழக-கேரள அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தைக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதிகாரப்பூர்வமற்ற இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்று தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. இதனை தமிழக தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி அறிவித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள பகுதியில் கடந்த 5 மாதங்களில் பலமுறை நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அணை உடையும் அபாயம் இருப்பதாகவும் கேரள அரசு கூறி வருகிறது. இதையடுத்து, இரு மாநிலங்களுக்கிடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது.

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. இந்த விவகாரத்தில் தலையிட்டு, கேரளாவின் விஷம பிரசாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கேரள முதல்வர் உம்மன்சாண்டி கடிதம் எழுதியதுடன்,  பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று முன்தினம் டெல்லியில் நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார்.

இதையடுத்து, பிரச்னைக்கு தீர்வு காண தமிழகம், கேரளா ஆகிய இரு மாநில அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டுமாறு, மத்திய நீர்வளத்துறைக்கு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டார். இதையடுத்து, டெல்லியில் மத்திய அரசு அதிகாரிகளின் முன்னிலையில் தமிழக, கேரள அதிகாரிகளின் கூட்டம் நாளை நடைபெறும் என்று மத்திய நீர்வளத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதுகுறித்து, தமிழக கவர்னர் ரோசய்யாவை நேற்று சந்தித்து அவர் மனு கொடுத்தார். பல கட்சி தலைவர்களும் இந்த பேச்சுவார்த்தையில் தமிழக அரசு கலந்துகொள்ளக் கூடாது என வலியுறுத்தினர்.

இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக டெல்லியில் நாளை நடக்க உள்ள பேச்சுவார்த்தையில் தமிழக அரசு பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் எம்.சாய்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “முல்லைப் பெரியாறு பிரச்னை தொடர்பாக டெல்லியில் 5ம் தேதி நடக்க உள்ள அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தையில், தமிழக அரசு ஏற்கனவே செய்த முடிவின்படி கலந்து கொள்ளாது என தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார்.”  என்று கூறியுள்ளார். பேச்சுவார்த்தையை தமிழக அரசு புறக்கணித்துள்ள நிலையில் டெல்லியில் நாளை இக் கூட்டம் ரத்து செய்யப்படும் என கருதப்படுகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza