Saturday, December 3, 2011

போபால் விஷவாயு விபத்து:27 ஆண்டுகள் நிறைவு

Bhopal-Gas-Tragedy1
போபால்:போபாலில் விஷவாயு விபத்து நிகழ்ந்து 27 ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டன. ஆனால் இந்த துயர சம்பவத்தில் எத்தனை பேர் இறந்தார்கள் என்பதில் அரசிடம் முறையான விபரம் இல்லை.

1984-ஆம் ஆண்டு டிசம்பர் 2-ஆம் தேதி நள்ளிரவில் போபால் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இருந்து மீதைல் ஐஸோஸைநேட் வாயு கசிய துவங்கியது. அடுத்த தினமும் வாயு கசிய துவங்கியவுடன் உலகம் கண்ட மிகப்பெரும் விபத்து நிகழ்ந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் விஷவாயுவை சுவாசித்து மரணித்தனர். அதனை விட அதிகமானோர் நிரந்தர நோயாளிகளாக மாறினர்.

அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களை விட மிகவு அதிகமானது உண்மையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடும் போபால் க்ரூஃப் ஃபார் இன்ஃபர்மேசன் அண்ட் ஆக்‌ஷன்(பி.ஜி.ஐ.எ) மற்றும் போபால் க்யாஸ் பீடித் மஹிளா உத்யோக் ஸங்கதன் ஆகிய அமைப்புகள் கூறுகின்றன. 5,295 பேர் மரணித்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப்பத்திரத்தில் மத்தியபிரதேச அரசு கூறியுள்ளதாக பி.ஜி.ஐ.எ உறுப்பினர் ரச்னா டிங்க்ரா கூறுகிறார். ஆனால், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மற்றொரு மனுவில் 15,248 பேர் மரணித்துள்ளதாக அரசு கூறுகிறது என அவர் சுட்டிக்காட்டுகிறார். இதில் எது சரி? என்பதை விளக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு என அவர் கூறியுள்ளார்.

யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இருந்து விஷவாயு கசிவை தொடர்ந்து உருவான உடல்நல கோளாறுகளை குறித்து ஆராய்ச்சி செய்த இந்தியன் கவுன்சில் ஃபார் மெடிக்கல் ரிசர்ச்சின்(ஐ.சி.எம்.ஆர்) அறிக்கையில் கூறுவது என்னவெனில் 1985 ஆம் ஆண்டு மட்டும் 2,500 பேர் மரணித்துள்ளார்கள் என்பதாகும். 1984-ஆம் ஆண்டிற்கும், 1989-ஆம் ஆண்டிற்கும் இடையே 3,500 கர்ப்ப சிதைவுகள் நடந்துள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர் அறிக்கை கூறுகிறது. 1985-ஆம் ஆண்டிற்கும் 1993-ஆம் ஆண்டிற்கும் இடையே 9667 பேர் மரணித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

போபால் விஷவாயு விபத்தின் விளைவாக ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 1985-93 காலக்கட்டத்தை விட 1994-2001 காலக்கட்டத்தில் பகுதியாகவும், 2002-2009 காலக்கட்டத்தில் நான்கில் ஒரு பகுதியாகவும் குறைந்துள்ளது. 2009-ஆம் ஆண்டு போபால் விஷவாயுவால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 22,917 என ஐ.சி.எம்.ஆரின் அறிக்கை கூறுகிறது. மேலும் தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்தும் சரியான தகவல் இல்லை.

2004-ஆம் ஆண்டு வரை 3.5 லட்சம் பேர் போபால் மெமோரியல் மருத்துவமனையில் சிகிட்சைக்கு வருகை தந்துள்ளனர் என டிங்க்ரா கூறுகிறார்.

போபால் விஷவாயு விபத்திற்கு பிறகு 15,274 பேர் மரணித்துள்ளதாகவும், 5.73 லட்சம் பேர் காயமடைந்துள்ளதாகவும் போபால் க்யாஸ் பீடித் மஹிளா உத்யோக் ஸங்கதன் அமைப்பின் கன்வீனர் அப்துல் ஜப்பார் கூறுகிறார். அதேவேளையில் மருத்துவ சான்றிதழின் அடிப்படையில்தான் மத்தியபிரதேச அரசு மரண எண்ணிக்கையை கணக்கிட்டதாக அம்மாநில விஷவாயு துயர்துடைப்பு அமைச்சர் பாபுலால் கவுர் கூறுகிறார்.

போபால் விஷவாயு விபத்தின் 27-ஆம் ஆண்டு நினைவு நிகழ்ச்சிகள் இன்று நடைபெறும். இன்று முதல்வரின் வீட்டிற்கு முன்பாக தர்ணா போராட்டம் நடத்தவும், ரெயில் மறியல் போராட்டம் நடத்தவும் பல்வேறு அமைப்புகள் தீர்மானித்துள்ளன.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza