Thursday, August 25, 2011

காணாமல் போன கஷ்மீரிகள் ஏராளம்: நேபாளம் ஒப்படைத்தவர்களைக் குறித்தும் தகவல் இல்லை

imagesCACGSKTM
புதுடெல்லி:கஷ்மீர் மாநிலத்திற்கு வெளியே காணாமல் போன கஷ்மீரிகளை குறித்து அதிகாரிகள் கைவிரிக்கின்றனர். டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் நடந்த போலி என்கவுண்டர்களில் கொல்லப்பட்ட கஷ்மீரிகளின் உடல்களை என்ன ஆனது? என்பதுக் குறித்த கேள்விக்கு பதில் இல்லை.

நேபாளம் உள்பட அயல்நாடுகளில் இந்தியாவின் உத்தரவின் பேரில் கைதுச் செய்யப்பட்ட கஷ்மீரிகளுக்கு என்ன நிகழ்ந்தது என்பதுக் குறித்து அவர்களின் உறவினர்களின் விசாரணையும் பலன் தரவில்லை.

கஷ்மீருக்கு வெளியே கொல்லப்பட்ட ஏராளமான அப்பாவி இளைஞர்களை குறித்து மத்திய உள்துறை அமைச்சகமும், உள்ளூர் போலீசும் பதிலளிக்க மறுக்கின்றனர். இருபது வருடங்களிடையே தீவிரவாத தொடர்பு குற்றம் சாட்டி நேபாள போலீஸ் இந்தியாவிடம் நூற்றுக்கும் மேற்பட்ட கஷ்மீரிகளை ஒப்படைத்துள்ளது. ஆனால், இவர்கள் எங்கே? என்ற கேள்விக்கு பதில் இல்லை.

இந்திய சிறைகள் ஒன்றிலும் இவர்கள் கைதிகளாக இல்லை என்பதுதான் விசாரணையில் தெரியவந்ததாக அவர்களது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

பா.ஜ.க ஆட்சிபுரியும் வேளையில் நேபாளத்திலிருந்து மிக அதிகமான கஷ்மீரிகள் கைதுச் செய்யப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டனர். காந்தஹார் விமான கடத்தலின் சோர்வை தீர்க்க பாசிச பா.ஜ.க அரசு நேபாள அரசுடன் இணைந்து கஷ்மீரி வேட்டையை தீவிரப்படுத்தியிருந்தது. விமானக் கடத்தல் சம்பவத்தில் சில கஷ்மீரிகளும் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என குற்றம் சாட்டி இந்த வேட்டை நடத்தப்பட்டது.

நேபாளத்தில் வசிக்கும் கஷ்மீரிகளுக்காக மத்திய புலனாய்வு துறையும், ‘ரா’ வும் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டன.

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று நேபாள அரசு அந்நாட்டில் வசித்துவந்த அப்பாவி கஷ்மீரிகளை பொறுக்கி எடுத்து இந்தியாவிடம் ஒப்படைத்ததற்கான ஆவணங்கள் உள்ளன. காட்மாண்டுவிலிருந்து அதிகமான கஷ்மீரிகள் கைதுச் செய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோனோர் நேபாளத்தில் பல வருடங்களாக சிறிய வியாபாரங்களை நடத்திவருபவர்களாவர். ஆனால், இந்தியாவின் தனிப்பட்ட உத்தரவின்பேரில் இவர்களை இந்தியாவின் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் கைதுச் செய்ததாக பொய்யுரைக்கப்பட்டது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட கஷ்மீரிகள் உடனடியாக காணாமல் போனது குறித்த தகவல் நேபாள போலீசுக்கு காலதாமதமாகவே கிடைத்தது. அத்துடன் அவர்கள் இந்தியாவுடன் ஒத்துழைப்பதில் இணைக்கம் காண்பிக்கவில்லை.

கடந்த 10 ஆண்டுகளில் டெல்லி, உத்திரபிரதேசம் ஆகிய இடங்களில் நடந்த போலி என்கவுண்டரில் கைதுச் செய்யப்பட்ட கஷ்மீரிகளை கொலைச் செய்ததாக குற்றச்சாட்டு வலுவடைந்துள்ளது.

கடந்த 2000-ஆம் ஆண்டில் மட்டும் 24க்கும் மேற்பட்ட கஷ்மீரிகளை நேபாளம் இந்தியாவிடம் ஒப்படைத்தது. டெல்லி, உத்திரபிரதேசம், ஹரியானா, குஜராத் ஆகிய இடங்களில் நடந்த போலி என்கவுண்டர் கொலைகளில் பலவற்றைக் குறித்தும் முதன்மை விசாரணை கூட நடக்கவில்லை.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza