Tuesday, August 23, 2011

ரமலான் உம்ரா:நம்பிக்கையாளர்களின் வெள்ளத்தில் மக்கா

sau-kaaba
மக்கா:பரிசுத்த உம்ராவை ரமலான் மாதத்தில் நிறைவேற்றுவதற்காக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகைத்தந்த நம்பிக்கையாளர்களின் கூட்டத்தால் கஃபாவும், அதன் சுற்றுவட்டாரங்களும் திணறுகின்றன.

சாதாரணமாக ரமலானின் இறுதி பத்து தினங்களில்தான் பெரும் மக்கள் வெள்ளம் காணப்படும். ஆனால், இவ்வாண்டு ரமலானின் முதல் பத்து தினங்களிலேயே நம்பிக்கையாளர்கள் பெருமளவில் திரண்டுவிட்டனர்.

தொழுகை வேளைகளில் ஒரு இஞ்ச் இடம் கூட காலி இல்லாத அளவுக்கு மஸ்ஜிதுல் ஹராமில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஃபஜ்ர் தொழுகைக்கோ தொழுகைக்கான அணிவரிசைகள் மஸ்ஜிதுல் ஹராமிற்கு வெளியேயும் தாண்டிச் செல்கிறது.

தவாஃப் என்று அழைக்கப்படும் கஃபாவை தவாஃப் செய்யும் வேளையிலும், ஸஃபா-மர்வா குன்றுகளிடையே ’ஸயீ’ என்ற ஓடுதலின்போதும் மக்கள் நெருக்கம் அதிகமாக காணப்படுகிறது.

தனியாகவும், குடும்பத்தினருடனும் வந்த மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்களாவர். ஆயிரக்கணக்கான இந்தியர்களும் உம்ராவுக்காக மக்கா வருகைத் தந்துள்ளனர்.

லட்சக்கணக்கான மக்கள் மஸ்ஜிதுல் ஹரமில் இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். நோன்பு திறக்கும் வேளையில் ஆயிரக்கணக்கான சுப்ரா என்றழைக்கப்படும் விரிப்புகளில் பேரீத்தம் பழமும், தண்ணீரும் விநியோகிக்கப்படுகிறது.

ஒரு நாள் நோன்பு திறப்பதற்கு ஒன்பது டன் ஃப்ரஸ் பேரீத்தம்பழம் உபயோகிக்கப்படுகிறது. இஃப்தார் சுப்ராக்களின் மொத்த நீளம் 13 கிலோமீட்டர் ஆகும். இதனை தவிர அறக்கட்டளைகள் மஸ்ஜிதுல் ஹரமிற்கு வெளியே இஃப்தார் நடத்துகின்றன.

ஒவ்வொரு தினமும் 3 ஆயிரம் க்யூபிக் மீட்டர் ஸம்ஸம் தண்ணீர் குடிப்பதற்காக விநியோகிக்கப்படுகிறது. 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸம்ஸம் தண்ணீர் அடங்கிய கேன்கள் உள்ளன.

தன்னார்வத் தொண்டர்களை தவிர 700 தொழிலாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் உள்பட பல்வேறு அமைப்புகள் மஸ்ஜிதுல் ஹரமில் சிறப்பு இஃப்தார் சுப்ராக்களுக்கு ஏற்பாடுச் செய்துள்ளன.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza