Sunday, August 28, 2011

ராஜீவ் படுகொலை: மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது – தமிழ் அமைப்புகள்

primary-medium
வேலூர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனை செப்டம்பர் 9ம் தேதி நிறைவேற்றப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த நிலையில் அவர்கள் அடைக்கப்பட்டுள்ள வேலூர் மத்திய சிறைக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று பல்வேறு தமிழ் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன. ஆதலால் வேலூர் மத்திய சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் மூன்று வளைய பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிறையைச் சுற்றிலும் ஆயுதம் தாங்கிய படை நிறுத்தப்பட்டுள்ளது. அந்தப் பகுதி முழுவதும் அதிக போலீசாரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

சிறைக்கு அருகில் பொதுமக்கள் செல்வதற்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மரண தண்டனை நிறைவேற்றப்படக் கூடாது என்று கோரிக்கை வைத்து ம.தி.மு.க. தலைவர் வைகோ நேற்று உண்ணாவிரதம் இருந்தார். அந்தக் கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது.

இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலையிடவேண்டும் என்று வைகோவும், பா.ம.க. தலைவர் ராமதாசும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சோனியா காந்தி தலையிட்டு மரணதண்டனையைச் சாதாரண தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு முன்பு சோனியா காந்தி தலையிட்டதனால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கான ஏற்பாடுகள் வேலூர் மத்திய சிறையில் துவங்கிவிட்டன. இதற்கிடையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் இன்று தங்கள் தண்டனையை ரத்தாக்குவதற்கு கோரிக்கை வைத்து  நீதிமன்றத்தை அணுகுவார்கள்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza