Sunday, July 10, 2011

விவசாயநிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக சட்ட மசோதா-வீரப்ப மொய்லி

M. Veerappa-Moily
பெங்களூர்:விவசாயிகளின் நலனை பேணிபாதுகாப்பதற்காக நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான புதிய சட்ட மசோதா விரைவில் கொண்டு வரப்படும் என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். மசோதாவின் வரைவுப் பணி வேகமாக நடந்து வருகிறது. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என வீரப்பமொய்லி தெரிவித்தார்.

இது குறித்து பெங்களூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மொய்லி கூறியதாவது: அண்மைக் காலமாக நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதை கருத்தில் கொண்டு, புதிதாக நிலம் கையகப்படுத்துதல் சட்ட மசோதாவை வகுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

விவசாயிகளின் நலனைப் பேணிக்காத்தல், நல்வாழ்வு மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றில் புதிய சட்ட மசோதா கவனம் செலுத்தும். விவசாயிகளின் நலன் மற்றும் நிலையான வளர்ச்சியை சமமாகக் கருத அரசு விரும்புகிறது.

நிலம் கையகப்படுத்திய பிறகு விவசாயிகளின் மறுவாழ்வுப் பணிகள் குறித்த திட்டங்களும் மசோதாவில் இடம் பெறும். இந்த விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால், இனியும் காலம் தாழ்த்தாமல் அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே புதிய சட்ட மசோதாவை நிறைவேற்றுவோம்.

உத்தரப்பிரதேசத்தில் மட்டுமல்லாமல், கர்நாடகத்திலும் விவசாயிகள் போராட்டம் நடந்து வருகிறது. இது தவிர சில அமைச்சர்கள் நில ஊழலில் ஈடுபட்டுள்ளதற்கு எதிராகவும் விவசாயிகள் போராடி வருகிறார்கள். விவசாயிகள் நலனை முழுமையாகப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மாயாவதி அரசின் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக போராட்டம் நடைபெறும் உத்தரபிரதேச மாநிலத்தில் ராகுல்காந்தி பாத யாத்திரை நடத்துவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மொய்லி இந்த பதிலை அளித்தார்.

கலவரத்தடுப்பு மசோதாவும் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும். தேசிய ஆலோசனை குழு இது தொடர்பான வரைவிற்கு அங்கீகாரம் அளித்துள்ளது. தாமதமில்லாமல் மசோதா அமைச்சரவையின் பரிசீலனைக்கு வரும் என எதிர்ப்பார்க்கிறோம்.

குஜராத்திலும், கர்நாடகாவிலும் இதர இடங்களிலும் நிகழ்ந்தது போன்ற கலவரங்களை தடுக்க இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் போதுமானது அல்ல. கடுமையான சட்டம் அதற்கு தேவை என வீரப்ப மொய்லி தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza