Emirates India Fraternity Forum (EIFF) ஏற்பாடு செய்திருந்த Better Family! Better Society!! என்ற இஸ்லாமிய சமூக நிகழ்ச்சி கடந்த 08.07.2011 வெள்ளியன்று அமீரக தலைநகரமான அபுதாபியில் சிறப்பாக நடைபெற்றது.
சரியாக மாலை 8 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது. ஆரம்பமாக அருள்மறை வசனங்களை ஓதினார் சகோ. இம்ரான் அவர்கள். அதன் பின்னர் சகோ. சம்சுதீன் அவர்கள் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
பின்னர் “நம்மை நாமே புனரமைப்போம்” என்ற தலைப்பில் சகோ. ஃபைஸல் அவர்கள் உரை நிகழ்த்தினார். சமுதாயப் புனரமைப்புக்கு மூல காரணமாக விளங்குவது தன்னைத் தானே புனரமைப்பதுதான் என்று கூறிய அவர்,சுய மாற்றத்திற்கான வழிவகைகளை அழகுற எடுத்துரைத்தார்.
சமுதாயப் புனரமைப்பின் அடுத்த காரணியாக விளங்கும் “குடும்பத்தைப் புனரமைப்போம்” என்ற தலைப்பில் சகோ. சைபுல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார். குடும்பம் ஒரு பல்கலைக்கழகமாக மிளிர வேண்டுமெனில் அங்கே செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து குறிப்பிட்ட அவர், குழந்தை வளர்ப்பு குறித்து விரிவாக உரை நிகழ்த்தினார்.
இறுதியாக, நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக “சமுதாயத்தைப் புனரமைப்போம்” என்ற தலைப்பில் சகோ. அ. செய்யது அலீ அவர்கள் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் முஸ்லிம் சமுதாயம் தொய்வுற்ற பொழுதெல்லாம் வரலாறு நெடுகிலும் அது புனர் நிர்மாணம் செய்யப்பட்டதை வரலாற்றுக் குறிப்புகளோடு நினைவு கூர்ந்தார்.
மற்றும் சென்னையை சேர்ந்த 13 வயது சிறுவன் தில்ஷான் ராணுவ குடியிருப்பில் வைத்து ஈவு இறக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியயையும், முஸ்லிம்கள் போலி எண்கவுண்டர் மற்றும் இராணுவத்தால் கொல்லப்படும் போதும் முஸ்லிம்கள் மத்தியில் நிலவிய அமைதியையும் ஒப்பீட்டு இன்றைய இந்திய முஸ்லிம்களின் பரிதாப நிலையைக் குறிப்பிட்ட அவர், சமுதாய மாற்றத்திற்கு முஸ்லிம்கள் செய்ய வேண்டிய கடமைகளைப் பட்டியலிட்டார்.
முடிவில் சகோ. பரித் அவர்கள் முடிவுரையாற்றினார். இங்கே கேட்டவைகளை நடைமுறையில் கொண்டு வந்தால் மட்டுமே சமதாயத்தைப் புனரமைக்க முடியும் என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இறுதியாக,கலந்து கொண்டவர்களிடம் கருத்துப் படிவம் கொடுக்கப்பட்டு, நிகழ்ச்சி குறித்த கருத்துகள் எழுதி வாங்கப்பட்டன.

0 கருத்துரைகள்:
Post a Comment