Tuesday, May 31, 2011

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும்:

பெட்ரோல், டீசல் விலையைமத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ கூறினார்.

காயல்பட்டினத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"தமிழகத்தில் அதிமுக அரசு அமைந்துள்ளதால் சிறுபான்மை மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. கடந்த 24ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினோம். அப்போது தமிழகத்தில் இஸ்லாமிய திருமண கட்டாய பதிவு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.

பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை மத்திய அரசு கைவிட வேண்டும். பெட்ரோலிய பொருட்களின் விலைகளை நிறுவனங்களே நிர்ணயிப்பதை மாற்றி மத்திய அரசு விலையை நிர்ணயம் செய்யவேண்டும். மக்களைப் பாதிக்காத வகையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும். முஸ்லிம் சமுதாய இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் காயல்பட்டினத்தைத் தொட்டுச் செல்லும் வகையில் கிழக்குக் கடற்கரை சாலையை அமைக்க வேண்டும்.

சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் போது தற்காலிகமாக 3 ஆண்டுகளுக்கு மட்டும் என்று இல்லாமல் நிரந்தரமாக அங்கீகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்."
இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza