Friday, May 27, 2011

ரஃபா எல்லைக்கடவையை நிரந்தரமாகத் திறக்க எகிப்து தீர்மானம்!

எதிர்வரும் சனிக்கிழமை முதல் ரஃபா எல்லைக் கடவையை நிரந்தரமாகத் திறப்பது என எகிப்திய அதிகாரத் தரப்பு தீர்மானித்துள்ளது. வெள்ளிக்கிழமை மற்றும் அரசாங்க விடுமுறை தினங்கள் தவிர்த்து ஏனைய நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை காஸாவுக்கான ரஃபா எல்லைக் கடவை நிரந்தரமாகத் திறந்துவைக்கப்படவுள்ளது.

இந்தத் தீர்மானம் குறித்துக் கருத்துத் தெரிவித்த எகிப்திய அதிகாரி ஒருவர், "எகிப்தியத் துறைமுகங்கள் ஊடான போக்குவரத்தில் உள்ள சிரமங்களைக் குறைத்து, பலஸ்தீன் மக்களின் நெருக்கடியான நிலையை சுமுக நிலைக்குக் கொண்டுவருமுகமாகத் தீர்மானிக்கப்பட்டுள்ள எத்தனையோ முன்னெடுப்புகளில் இதுவும் ஒன்று" என்று கூறியுள்ளார்.
பலஸ்தீன் பெண்கள், 18 வயதுக்குக் குறைந்த ஆண்கள், 40 வயது கடந்த வயோதிகர்கள் எகிப்திய எல்லையைக் கடப்பதற்கு எத்தகைய நுழைவுரிமைச் சீட்டு (விஸா) க்களையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்பதோடு, தமது பெற்றோருக்குத் துணையாகச் செல்வோருக்கும் சட்டரீதியான கெடுபிடிகள் தளர்த்தப்படும் என்ற புதிய சட்டமும் பிறப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உரிய கடவுச் சீட்டுக்களைச் சமர்ப்பிக்கும் பட்சத்தில் காஸாவுக்குள் செல்லும் அல்லது அங்கிருந்து வெளியேறும் பலஸ்தீன் குடும்பங்களின் போக்குவரத்துக்கும் அனுமதியளிக்கப்படும். அத்துடன், மாணவர்கள் மற்றும் மருத்துவச் சிகிச்சைக்காகச் செல்லும் நோயாளிகள் என்போர் உரிய பத்திரங்களை முறையாகச் சமர்ப்பித்தால், அவர்களுக்கும் எகிப்தினூடே பயணிக்க அனுமதி மறுக்கப்பட மாட்டாது.

மேலும், "தற்போது உள்நாட்டு யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் லிபியாவில் இருக்கும் பலஸ்தீனர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் யாவரும் எகிப்து வழியே காஸா செல்வதாயின், பொதுவான நடைமுறைகளைப் பின்பற்றி நுழைவுரிமைச் சீட்டுக்களைப் பெறுதல் வேண்டும்" என்றும் மேற்படி எகிப்திய அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.

பலஸ்தீன் பொதுமக்கள் மீதான எகிப்தின் கரிசனை வரவேற்கத்தக்கதுதான். எனினும், எகிப்திய அரசின் இப் புதிய முன்னெடுப்பு அதன் நீண்டகால நட்பு நாடான இஸ்ரேலுக்கு நிச்சயமாக மகிழ்ச்சியளிக்கப் போவதில்லை என்பது உறுதி. அண்மையில் இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிசெய்வது அமெரிக்காவின் தலையாய பணிகளில் ஒன்றாகும் என்று தெரிவித்த அமெரிக்க அதிபர் ஒபாமா, எகிப்துக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடனுதவியாக வழங்கத் தீர்மானித்திருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

 இந்நிலையில், இவ்விரு நேச நாடுகளினதும் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொள்ளும் வகையில், இஸ்ரேல் ஐந்து வருடங்களுக்கும் மேலாக அமுல்நடத்தி வரும் காஸா முற்றுகையை நீக்கி, பலஸ்தீனரின் துயர்துடைக்கும் நடவடிக்கைகளில் எகிப்து தொடர்ந்தும் துணிந்து நிற்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza